பாதுகாப்பற்ற பொருளாதாரம்
தர்மம் போடு தாயே' என்று இந்தியர்களை பிச்சைக்காரர்களாக்குவதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சோஷலிச இலக்காகக் காட்சி தருகிறது.


தர்மம் போடு தாயே' என்று இந்தியர்களை பிச்சைக்காரர்களாக்குவதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சோஷலிச இலக்காகக் காட்சி தருகிறது. உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்பை இழந்த பொருளாதாரம் தெற்றென விளங்கும். பசியைப் போக்கும் ஒரு மோசமான வழிகாட்டும் நெறியாக உணவுப் பாதுகாப்புப் பிரகடனம் விளங்குகிறது.
ஒரு கடைக்காரரிடம் அவர் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 10 ரூபாய்க்கு விற்கச் சொன்னால் அவர் முடியாது என்று கூறுவார். அதிகம் பேரம் பேசி ரூ. 110-க்கு சம்மதிக்க வைக்கலாம். வாங்கிய விலைக்கு விற்க முன்வரலாம். 100 ரூபாய் பொருளை 10 ரூபாய்க்கு விற்கச் சொல்லி அந்த விற்பனையில் 50 சதவீதம் தரகர்களுக்கும், இடம் கொடுத்த வாடகைக்காரருக்கும் வழங்கு என்றால், அவர் கோபத்தின் உச்சத்திற்குப் போவார். இப்படிப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு கடைக்காரரின் மனநிலையைக் கண்டுபிடிக்க அமார்த்தியா சென்னோ, பகவதியோ தேவையில்லை. சாதாரண மனித அறிவு போதும்.
இந்தியக் குடிமக்கள் - ஏழை, நடுத்தரம், பணக்காரவர்க்கம் - யாராயிலும் அரசியல்வாதிகளைத் தவிர மற்றவர்கள் இப்படி உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 10 ரூபாய்க்கு விற்று 90 சதவீத நஷ்டத்தை அரசுக்கு ஏற்படுத்த ஒப்புவார்களா? இப்படிப்பட்ட உணவு வழங்கல் பொருளாதாரத்தில் 50 சதவீதம் திறமையின்மை பளிச்சிடுகிறது. உணவுக்கு அல்ல; பொருளாதாரத்திற்கு வேண்டும் பாதுகாப்பு.
இந்திய மக்கள்தொகையில் சுமார் ஐந்து சதவீத மக்களை பசியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது கொள்கை என்று கொண்டாலும், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வோருக்கு ஜீவாதாரம் வழங்க வேண்டும் என்று கொண்டாலும் அதற்கான அணுகுமுறை என்ன என்று யோசித்தால், நல்ல வருமானம் பெறும் அளவில் அவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது, நல்ல கல்வி, நல்ல மருத்துவ வசதி ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு அமைத்து அம்மக்களின் மனித ஆற்றலைப் பயன்படுத்துவதுதான் சிறப்பாயிருக்கும்.
இதற்கு மாறாக, 100 ரூபாய் கொடுத்து வாங்கிய உணவை 10 ரூபாய்க்கு விற்பது கஜானாவை காலியாக்கும் செயலல்லவா? இப்படி தர்ம செலவு செய்வது சோஷலிசமாகுமா? இந்திய நாடு நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி உயர்ந்து வருகிறது. பட்ஜெட் பற்றாக்குறை தொடர்கதையாக உள்ளது. உணவு வாங்க முதலீடு செய்த பல லட்சம் கோடி ரூபாய்களில் 90 சதவீத நஷ்டத்தை ஈடுசெய்ய, நேர்வரி, மறைமுக வரி, பொதுத்துறைப் பங்குகளை விற்றல் போன்ற செயல்பாடுகள் நியாயமற்றவை. பொதுச் சொத்தை விற்றுச் சோறு போடுவது சோஷலிசம் இல்லை.
அன்னிய முதலீடு வருமா, நிதிப்பட்டினி தீருமா என்று அன்னியனுக்கு அன்னக்காவடி எடுத்து இந்தியாவைக் காப்பாற்ற எண்ணும் மதியூகிகள் நம்மை ஆள்கின்றனர். விளைவு? பற்றாக்குறையை ஈடுகட்ட ஐநூறு ரூபாய் நோட்டுகளும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சடித்து நஷ்ட வியாபாரம் செய்கிறார்கள். இதனால் பணமதிப்பு குறைகிறது. சேமிப்புகள் சுத்தம் செய்யப்பட்டு ஓரளவு ஏழைகளாக வாழ்பவர்களைப் பரம ஏழைகளாக மாற்றுகிறது.
இந்திய உணவுக் கொள்கையால் அரசுக்கும் லாபமில்லை. விவசாயிகளுக்கும் லாபமில்லை. பொது மக்களுக்கும் லாபமில்லை. ஏனெனில் வெளி அங்காடி விலை உயர்ந்திருந்தாலும் விவசாயிகளுக்கு உயர்ந்த விலை கிட்டவில்லை. மக்களும் அதிக விலை கொடுத்து அரிசி, கோதுமையைப் பெற வேண்டியுள்ளது. கம்யூனிச வாடையுள்ள ரஷியா, உக்ரைன், கஜகஸ்தான் நாடுகள் ஒரு காலகட்டத்தில் அமெரிக்க கோதுமையை இறக்குமதி செய்தன. சமீபகாலமாக இந்நாடுகள் உபரி நாடுகளாக மாறி தரமான கோதுமையை ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவைப்போல் நல்ல கோதுமையை திறந்தவெளியில் கொட்டிப் பாழாக்கி சுத்தம் செய்யாமல் மாட்டுத் தீவனப் பயனுக்கு ஏற்றுமதி செய்யவில்லை.
கடந்த ஆண்டு ரஷியாவிலும் உக்ரைனிலும் வறட்சியால் கோதுமை உற்பத்தி குறைந்தாலும் அவர்கள் தங்களின் வர்த்தகக் கொள்கையை மாற்றவில்லை. வெளி அங்காடி விலை உயர்வில் விவசாயிகளை லாபம் பெறச் செய்து ஊக்கமளித்து வாழ வைத்ததால் 2013-14-இல் பழையபடி கோதுமை ஏற்றுமதி லகானைப் பிடித்து இன்று அமெரிக்காவுக்கே சவால் விடுகின்றனர்.
தாய்லாந்து ஒரு காலகட்டத்தில் அரிசி ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்தது. உலகிலேயே பாங்காக் மாபெரும் அரிசி ஏற்றுமதித் துறைமுகம் என்று பெயர் உள்ளது. ஆனால், இப்போது இந்தியா தாய்லாந்தை முந்திவிட்டாலும், தாய்லாந்துக்கு நிகழ்ந்த கதி இந்தியாவுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தாய்லாந்தில் நிகழ்ந்தது என்ன? அரிசி அங்காடி விலை டன்னுக்கு 300 டாலர் என்றால், கொள்முதல் விலை 500 டாலர் என்று வழங்கியது அரசு. இப்படி விலையை ஏற்றி வழங்கியதால் அன்னியச் சந்தையில் வாங்க ஆள் இல்லை. ஆண்டுக்கு 10 மில்லியன் டன் அளவில் அரிசி ஏற்றுமதி செய்த தாய்லாந்து, இப்போது ஐந்து மில்லியன் டன்தான் ஏற்றுமதி செய்கிறது. தாய்லாந்தில் அரிசி உற்பத்தியும் குறைந்துவிட்டது. ஏற்றுமதிச் சந்தையை இழக்காமல் இருக்க கம்போடியா, தெற்கு வியட்நாம், பர்மா ஆகிய நாடுகளிலிருந்து வரும் கள்ளக்கடத்தல் மலிவு அரிசியை தாய்லாந்து ஏற்றுமதி செய்கிறது. கள்ளக்கடத்தல் ஊக்கம் பெற்றுள்ளது. மாஃபியா ராஜ்ஜியம் நடக்கிறது.
இந்தியாவைப்போல் தாய்லாந்திலும் பஹத் கரன்சி மதிப்பிழந்து பணவீக்கம் பாடாய்ப்படுத்துகிறது. மோசமான உணவுக் கொள்கையால் தாய்லாந்தின் அரிசிப் பொருளாதாரம் நொறுங்கிவிட்டது. வாங்க ஆளில்லாமல் தேக்கி வைத்த அரிசி எல்லாம் புழுத்துவிட்டது. சுமார் 20 மில்லியன் டன் பழைய அரிசி வீணாகி, வந்த விலைக்கு டெண்டர் விடப்பட்டு தாய்லாந்து அரசுக்கு ஐந்து பில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி பயனற்றுப் போய் படுநஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. விவசாயிகளுக்குப் போய்ச் சேரவேண்டிய பணத்தை அரிசி ஆலை அதிபர்கள், வர்த்தகர்கள், அதிகாரிகள் சுருட்டிவிட்டதாகப் புகார் உண்டு. பொருளாதாரமே சீரழிந்தது.
நேற்று தாய்லாந்து. நாளை இந்தியா. உணவுப் பொருளாதாரச் சீரழிவுக்கு மாநில அரசுகளும் தம் பங்கை வழங்கத் தவறவில்லை. அவையும் தங்கள் பங்குக்கு கொள்முதல் விலைக்குமேல் போனஸ், உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்ட மானியம் என்றெல்லாம் வழங்கி விலையை ஏற்றி, கொள்முதல் செய்த உணவைக் குவித்து வைத்து, மக்கி மண்ணாக்கி வருகிறது. இது ஏன்? ஏற்றுமதி விலையின் லாபப்பங்கை விவசாயிகளுக்கு வழங்கும் ரஷிய - உக்ரைன் முறையைப் பின்பற்றி உணவு நடமாட்டத் தடைகளை நீக்கி வெளி அங்காடி பங்களிப்பை வளர்ப்பதுதான் நல்ல பொருளாதாரம் என்று அறிவதே அறிவுடைமை. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வீணாக்கப்படும் அரிசிக்கு அளவே இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் உணவுக்கு உபரி மாநிலங்கள் விதிக்கும் நடமாட்டத் தடை, உணவை வீணாக்கவே உதவும். வெளிஅங்காடி விலையை உயர்த்தி சாமானிய மக்களை வேதனைக்கு உள்ளாக்கும்.
இந்தியப் பொருளாதாரத்தின் பாதுகாப்பின்மையை விளக்க ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை புள்ளி விவரம் போதுமானது. ஜி.எஃப்.டி என்ற ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை 5.2 லட்சம் கோடி ரூபாய்கள். இது ஜி.டி.பி.யில் (ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில்) 5.2 சதவீதம் என்பது 2012-13-ஆம் ஆண்டு நிலை. 2013-14-இல் உணவுப் பாதுகாப்பு பிரகடனத்தைக் கணக்கில் கொள்ளாத நிலையில் நிதிப்பற்றாக்குறை 5.4 லட்சம் கோடியாக உயரும். உணவுப் பாதுகாப்புப் பிரகடனம் நிறைவேற்ற ஆகக்கூடிய செலவு மூன்று ஆண்டுகளில் 6.82 லட்சம் கோடி ரூபாய்களாகும்.
முதல் ஆண்டுக்கான செலவு 2.41 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே 2013-14-இல் நம்முடைய நிதிப்பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 6.7 சதவீதமாக உயரப் போகிறது. ரூபாயின் வீழ்ச்சி இன்னமும் கீழே இறங்கும். காகிதப்பணம் காகித விலையை ஒட்டிச் செல்லும். விலைவாசி உயரும். பணவீக்கம் முற்றிய நோயாகிவிடலாம். இப்படிப்பட்ட நிதி நெருக்கடி 1993 - 94 ஆண்டைவிட உயர்ந்து துயர்மிகு சாதனையைப் படைக்கும். தொழில் முதலீடுகள் குறையும். இப்படிப்பட்ட பின்விளைவுகளை மனதில்கொண்டு விவசாயம் மற்றும் உணவுப் பொருளாதாரத்தைச் சீரழிக்காமல் உணவு ஏற்றுமதியில் லாபம் பெற்று நிதி நெருக்கடியையும் பணவீக்கத்தையும் குறைக்க வழி காண வேண்டுமே தவிர, 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 10 ரூபாய்க்கு விற்று 90 ரூபாய் நஷ்டமடையும் உணவுக் கொள்கை நமக்குத் தேவைதானா என்று உணர வேண்டும். ஒட்டுமொத்தமாக கவனித்தால் இந்த உணவுப் பாதுகாப்புப் பிரகடனம் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் உலைவைக்கக்கூடியது என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உணர்ந்து நாட்டைக் காப்பாற்ற ஒரு நல்ல வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...