பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தண்டித்தால் தவறில்லை

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2014, 8:12 pm

என்.​ அங்​கு​பாபு

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

புராணங்களில் கல்வி பயில குருகுல முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, ராஜா மகன் முதல் சாதாரண பாமரன் வரை அனைவரும் சரிசமமாக குருவால் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு அனைத்து வேலைகளும் சரிவிகிதமாக பங்கிட்டு செய்ய கட்டளையிடப்பட்டு வந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் கல்விமுறை பல்வேறு கட்டங்களில் திசை மாறியுள்ளது.

கடந்த காலங்களில் பள்ளியில் சேர்க்கப்படும் தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும்போது தவறு செய்தால் கண்டிக்குமாறும், அடித்துத் திருத்துமாறும் பெற்றோர்களே ஆசிரியர்களிடம் தெரிவித்து வந்தனர். இதனால் ஆசிரியர்களைக் கண்டால் மாணவர்களுக்கு பயமும், படிக்க வேண்டும் என்ற அக்கறையும் இருந்து. அதே நேரம் ஆசிரியர்களிடும் பக்தியும், அன்பும் இருந்துவந்தது.

தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களை திட்டுவதற்கே நூறுமுறை யோசிக்க வேண்டியுள்ளது. கல்வித் துறையே ஆசிரியர்களிடம் மாணவர்களைத் திட்டக் கூடாது, எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் மாணவர்களை மிரட்டக்கூட ஆசிரியர்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி இழக்க வைக்கக்கூடாது என்ற உத்தரவாலும், மாணவர்கள் கல்வித் தரம் தாழ்ந்து வருகிறது.

பல இடங்களில் பெற்றோர்களே தங்கள் குழந்தையை யாரும் அடிக்கக் கூடாது என்ற கட்டளையுடன் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். மாணவர்களும் இதுபோன்ற நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலநேரம் ஆசிரியர் மிரட்டினாலும்கூட, தன்னை அடித்ததாகக் கூறி ஆசிரியர்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டு வருகின்றனர். இதை இன்றைய பல ஆசிரியர்கள் அனுபவித்தே வருகின்றனர்.

இதனால் மாணவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை நமக்கு என்ன என்ற எண்ணத்துக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எட்டாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவிகள் உலகத்தை அறியும் நிலையில் அவர்களிடம் ஆசிரியர்கள் படும்பாடு அதிகமாகும்.

ஒருபக்கம் மாணவர்களை ஆர்வமுடன் படிக்க வைக்க ஆசிரியர்களை வறுத்தெடுக்கும் கல்வித்துறை, மறுபக்கம் அவர்களை திட்டக்கூடாது, அவர்கள் மீது விரல்கூட படக்கூடாது என்று உத்தரவிட்டு ஆசிரியர்களை இருதலைக்கொள்ளி எறும்பாக மாற்றி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி விளையாட்டுத் திறனை வெளிக்காட்டுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு மொபைல்போன், இன்டர்நெட், பேஸ்புக் போன்றவை பழகி விடுவதால் அவர்களின் கல்விச் சிந்தனை மிகவும் குறைந்து வருகிறது.

பல பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை கிண்டல் செய்வதையும், சில இடங்களில் ஆசிரியர்களை கொலை செய்யும் அளவுக்கும் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பெற்றோரே காரணமாகி விடுகின்றனர்.

இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளிக்கு நற் பெயரை ஈட்டி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை படிக்க வைக்க திண்டாடி வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன் மாணவர்களை சேர்க்கவே பெற்றோர்கள் திக்குமுக்காடிய காலம் மாறி இப்பள்ளிகளை குறிவைத்து மிரட்டும் பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் பள்ளி நிர்வாகத்தையே திக்குமுக்காட வைக்கின்றனர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகள் கல்வியில் மேம்படவும், விளையாட்டுத் துறையில் பிரகாசிக்கவும் விரும்பினால், அவர்களை ஆசிரியர் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை ஆசிரியர் கண்டிப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அவசியமாகும்.

மாணவர்களும் ஆசிரியரின் பெருமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.