நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கைத்தொழில் கற்போம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். நாளிதழ் செய்தி இது.

News image
Updated On :22 ஜனவரி 2017, 8:39 pm

ச.கந்தசாமி

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். நாளிதழ் செய்தி இது. 18 லட்சம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் தமிழகத்தில் வேலையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்புக்கு என்ன செய்ய வேண்டும்? எந்த வகையில் தொழில் துறைகளைப் பெருக்கலாம்? மூடிக் கிடக்கும் அரசுத் தொழில் நிறுவனங்கள், காலமெல்லாம் நஷ்டத்தையே சந்தித்து நலிந்து கொண்டே போகும். அரசுப் போக்குவரத்துத் துறைகள் நிமிர்ந்து நிற்க அரசு விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.
நமது பல்கலைக்கழகங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் பட்டங்களைக் கொடுத்து விடுகின்றன. காலூன்றி நிற்பதற்கான சுயச் சார்பு நிலையை கல்வியோடு தொடர்புடைய தொழில்திறன் சார்ந்த அனுபவங்களை இன்றைய மாணவர்கள் பெறவில்லை.
கற்கும் மாணவர்க்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய கல்லூரிகள் வெறுங் காகிதங்களுடன் (பட்டச் சான்றுகள்) நகர வீதிகளில் அலைய விடுகின்றன.
நான்கு சுவர்களுக்குள் புத்தகங்களும் கையுமாகத் திரியும் மாணவர்கள் மதிப்பெண்கள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக வார்க்கப்பட்டுள்ளார்கள்.
வேலைவாய்ப்புகளுக்கும் பொருளீட்டவும் பயன் தரும் ஆயிரக்கணக்கான தொழில்கள் வெளியுலகில் கொட்டிக் கிடக்கின்றன.
பரந்து கிடக்கும் புல்வெளிகளைத் தேடிப் போகாமல் குறிப்பிட்ட இடத்
திலேயே சுற்றிச் சுற்றி வந்து மேயும்
ஆட்டு மந்தைகளைப்போல இரண்டு அல்லது மூன்று தொழிற்கல்விப் படிப்புகளையே நமது மாணவர்கள் படிக்க விரும்புகிறார்கள்.
மூளையின் நுட்ப அறிவு சார்ந்த கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் திறனோடு சம்பந்தப்பட்ட தொழில் சார்ந்த கல்விக்குக் கொடுப்பதில்லை.
கால மாற்றம், இட வேறுபாடுகளுக்கேற்ப வாழ்வு முறை வாழ்க்கைத் தேவை, பயன்பாட்டுப் பொருள்கள் மாறுகின்றன. ஒரு தட்பவெப்ப நிலையில் வாழும் மக்களது வாழ்வு முறை, உணவு பழக்கம், உடைப் பழக்கம், மாறுபட்ட தட்பவெப்ப நிலையில் வாழும் மக்களிடம் காண்பதற்கில்லை.
அவ்வப்பகுதி மக்களது பயன்பாட்டுத் தேவைகள் அறிந்து அவற்றை உற்பத்தி செய்யும் தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தரும் கல்விமுறைகள் கல்விக் கூடங்களுக்குள் நுழைய வழிசெய்யும் கல்வித் திட்டங்கள் தாம் இன்றைய நமது அவசியத் தேவை என்பதைக் கல்வி நிலையங்கள் உணர வேண்டும்.
புதிய புதிய நாகரிகம், புதிய புதிய விருப்பங்களால் தினந்தோறும், எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. மாறும் தேவைகளுக்கேற்ற பொருள்களின் தயாரிப்பு, சந்தைப் படுத்தும் ஆர்வம், கல்வியின் பிரதான நோக்கமாக கல்வித் திட்டம் அமைய வேண்டும்.
மிகக் குறுகிய காலத்தில் தொழில் துறையில் உலகின் முன்னனி நாடுகளாகக் கால் பதித்திருக்கும் ஜெர்மன், ஜப்பான், சீனா முதலான நாடுகளில் தொழில் சார்ந்த கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கலைத் துறை சார்ந்த படிப்புகளுக்கு இல்லை.
சொந்த நாட்டு மக்களது நுகர்வுப் பொருள்களின் தேவைகளைக் கண்டறிவதில் காட்டும் ஈடுபாடு ஆர்வம் அங்குள்ள இளைஞர்களிடம் அளவின்றிக் காண முடிகிறது.
உலகின் எந்த மூலை முடுக்குகளிலும் வாழும் மக்களது தேவைகளை உடனுக்குடன் கண்டறிந்து அப்பொருள்களை அக்கணமே சந்தைப் பொருள்களாக்கி உலகில் வலம் வரச் செய்கின்றனர் அந்த இளைஞர்கள்.
தேவைகளையொட்டிய தொழிற்கல்வியை மிக விரைந்து கல்வித் திட்டங்களில் புகுத்தி விடுகிறார்கள். வாழ்வில் மாற்றங்கள் இயல்பு போலவே கல்வித் திட்டங்களிலும் தேவையான மாற்றங்களைச் செய்வதில் முந்திக் கொள்கிறார்கள்.
வானியல் ஆய்வுகளுக்குத் துணை செய்யும் செயற்கைக் கோள்கள் தயாரிப்புக் கிணையான ஆர்வத்தைச் சிறிய குண்டூசிகள் தயாரிப்பதிலும் குறையாமற் காட்டுவது அந்த நாட்டினர்க்கான தனிச் சிறப்பு.
அற்பமென நாம் நினைக்கும் கைக்குட்டைகள், நகவெட்டிகள், பென்சில்களைக் கூர்மையாக்கும் கருவி முகச்சவரம் செய்யும் பிளேடு, எழுதும் மை இப்பொருள்களிலும், தரம், நேர்த்தி, விலை மலிவு கவர்ச்சி என ஒவ்வொன்றிலும் நுணுகிப் பார்க்கும் தொழில் நேர்த்தியை மாணவர்களுக்குக் கல்விக் கூடங்களில் பதிய வைக்கிறார்கள்.
பள்ளிக் கல்வி கல்லூரிக் கல்வியை முடித்தவுடன், உறுதியான வேலைவாய்ப்பு அந்த மாணவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது.
நேரம் முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் என்பதும் அவ்வளவு நல்லதல்ல; பரந்துபட்ட, பல்வேறு தட்பவெப்ப நிலைகள், பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழும் தேசமிது.
கற்கும் மாணவர்களுக்கான பொதுவான தகுதிகளை வரையறை செய்வது மட்டும் கல்வித் திட்டத்தின் அம்சமாக இருக்க வேண்டும். பிராந்தியக் கூறுகளையும் பிரதிபலிக்கும் அம்சங்கள் கல்வித் திட்டத்தில் மிக மிக அவசியம்.
ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு தொழிலைத் தேர்வு செய்து பயில வேண்டும். தொழிலில் தேர்ச்சியை மதிப்பீடு செய்வது, வகுப்புகள் மாற்றத்திற்
கான மதிப்பீடுகளாகக் கணிக்கப்பட வேண்டும்.
கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும் ஒருங்கிணைந்து இப்படிச் சிந்திப்பார்களானால், ஆண்டுதோறும் படித்து வேலைவாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கான வாய்ப்புகள் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.