எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஏற்றம் பெற வேண்டும் ஏற்றுமதி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை தற்போது சந்தித்துள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2018, 6:43 am

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை தற்போது சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற இரண்டு மாதங்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு கிட்டத்தட்ட ரூபாய் 69-ஐ நெருங்கி விட்டது. பிறகு, சிறிதளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரூபாயின் மதிப்பு டாலருக்கு 68.60-ஆக நிலை கொண்டது.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருதல், மேற்கு ஆசிய நாடுகளில் அடிக்கடி ஏற்படும் அரசியல் பதற்றங்கள், அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு என பல காரணங்கள் உள்ளன.
இந்திய ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.60-க்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தபோது, பொருளாதார நிபுணர்கள் அதை ஓர் அபாய அறிவிப்பு என்று கூறினர். அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. மீண்டும் தற்போது ரூபாயின் மதிப்பு 68.60-இல் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாம் ஒரு விஷயத்தை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
எப்போதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறதோ, அப்போதெல்லாம் இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஏனெனில், இந்தியப் பொருள்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் குறைவான டாலர்களைக் கொடுத்தால் போதுமானது. இப்போது ரூபாய் மதிப்பு குறைந்து, விலை சரிந்துள்ள போதிலும், ஏற்றுமதி அதிகரிக்கவில்லையே. இதற்குக் காரணம் என்ன?
2018 ஏப்ரல் மாதம் இந்திய ஏற்றுமதி, குறிப்பாக, ஜவுளி, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், தோல் பொருள்கள் ஆகிய பல காலமாக பிரபலமாக இருந்துவரும் பொருள்கள் கூட ஏற்றுமதியில் சரிவை சந்தித்துள்ளன என்பதை மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. எனவே, நடப்புக் கணக்கில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், ரூபாயின் மதிப்பை ஓரளவேனும் தாங்கிப் பிடிப்பதற்கும், ஒரே ஒரு வழிதான் உண்டு. பிற நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்களைவிட, நாம் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் கூடுதல் டாலர்களை சம்பாதிக்க வேண்டும். அதாவது அந்நியச் செலாவணியில் செலவைவிட வரவு அதிகமாக இருக்க வேண்டும்.
நாம் அதிகமாக எதை இறக்குமதி செய்கிறோம்? முதலாவது, கச்சா எண்ணெய்; அடுத்ததாக, தங்கம். தங்க இறக்குமதி சமீப காலமாக சற்று குறைந்துள்ளது. புதிதாக, மின்னணுப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளோம்.
காலங்காலமாக, இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. ஆனால், தற்சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) ஏற்றுமதியின் பங்களிப்பு வெறும் 12 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம், தென் கொரியாவை எடுத்துக் கொண்டோமானால், அந்த நாட்டின் ஜி.டி.பி.யில் ஏற்றுமதியின் பங்கு 42 சதவீதம்!
சீனாவின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. அந்த நாட்டின் ஜி.டி.பி. சில ஆண்டுகளுக்கு முன் 13 சதவீதம் என உச்சத்தில் இருந்தபோது, அந்த நாட்டின் ஏற்றுமதியின் பங்கு 37 சதவீதமாக இருந்தது.
சீனாவின் ஏற்றுமதி குறைந்துள்ள இந்தத் தருணத்தில், அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய ஏற்றுமதியை நாம் அதிகரிக்க வேண்டாமா? இனியாவது, சீனாவின் ஏற்றுமதி சந்தையில் ஒரு பகுதியையாவது இந்திய ஏற்றுமதியாளர்கள் கைப்பற்ற முனைய வேண்டும். மாறாக, வங்கதேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகள் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன.
2017-18-இல் நமது ஏற்றுமதி 13 சதவீதம் மட்டுமே. ஏற்றுமதி 20 சதவீதத்தை எட்டிப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்தின் ஏற்றுமதி, 2017ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் என்பது, காரிருளில் ஒளிக்கீற்று தெரிவது போல் நம்பிக்கை அளிக்கிறது.
இந்தச் சூழலில், ஜி.எஸ்.டி. ஏற்றுமதியை பாதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. உதாரணமாக, ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்திடும் கச்சா பொருள்களுக்கு (Raw material) அவர்கள் செலுத்தும் வரித்தொகையில் திரும்ப கொடுக்க வேண்டிய (Refund) தொகையை விரைந்து கொடுக்க வேண்டும் என்கிற ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
ஏற்றுமதியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் நாளுக்குநாள் மாறிக் கொண்டே இருக்கின்றன என்பது மற்றொரு புகார். இதனால் சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் குழப்பம் அடைகிறார்கள். ஏற்றுமதியை இது நேரடியாக பாதிக்கக்கூடியது. 
உதாரணமாக, மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் (Central Board of Excise and Customs) 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் (மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்களில்) ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து 173 அரசாணைகளைப் பிறப்பித்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
இந்தியாவில் பல பெரிய துறைமுகங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறை (Electric Data Interchange)  நடைமுறையை விரைந்து அறிமுகம் செய்திட வேண்டும். இதன் லிமூலம் ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் கால விரயம் குறையும்.
உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் ஏற்றுமதியாளர்களுக்கு துறைமுக விதிமுறைகளை நிறைவு செய்வதற்கு, சீனாவில் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தைவிட நான்கு மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. உலகில் ஏற்றுமதி செய்யும் 190 நாடுகளின் வரிசையில் இந்தியா 146-வது இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை.
நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்திடும் நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்பு நிலவிய பொருளாதார மந்தநிலை குறைந்து தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ளது. 
இந்த சாதகமான சூழலை பயன்படுத்திக் கொண்டு நாம் ஏற்றுமதியை உயர்த்திட முனைய வேண்டும். அதற்கு ஏற்ப, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
வங்கிகளும் ஏற்றுமதியாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் புரியும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி கடன், ஏற்றுமதிக்கு முந்தைய தயாரிப்புக் கடன் (பேக்கிங் கிரெடிட்) ஆகியவற்றை வழங்குவதில் பரிவுடனும் விரைந்தும் செயல்பட வேண்டும். ஏற்றுமதியாளர்கள் வெறும் வியாபாரம் மட்டும் செய்யவில்லை. நாட்டுக்கும் நல்லது செய்கிறார்கள் என்பதை வங்கிகள் மனத்தில் கொள்ள வேண்டும்.
நியூசிலாந்து, கேமேன் தீவுகள், லட்டிவா, லித்துணியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை புதிய, வளரும் சந்தைகளாக அரசு அறிவித்தது. இது ஒரு ஃபோகஸ் திட்டம். இந்த திட்டத்தை எத்தனை ஏற்றுமதியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை ஏற்றுமதி மேம்பாட்டு சபை ஆய்வு செய்திட வேண்டும். 
அந்த ஆய்வின் விளைவாக கிடைக்கும் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அந்த திட்டத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். ஒருவேளை அந்த திட்டம் நல்ல பலனை அளித்துள்ளது என்றால், மேலும் புதிய சந்தைகளை ஃபோகஸ் திட்டத்தில் இணைப்பது நல்லது.
ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பரிவர்த்தனை செலவு மட்டும் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஆகிறது. துறைமுகக் கட்டணங்கள், வங்கி கட்டணங்கள், அந்நியச் செலாவணி கட்டணங்கள், ஆகியவற்றை கட்டுப்படியாகும் அளவுக்கு குறைக்க வேண்டும். ஏற்றுமதியாளர் சம்மேளனங்களின் இந்த கோரிக்கையை மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து, நியாயமான நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும்.
இந்திய ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிப்பவை ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியாகும். அப்படி இருந்தும், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. 
இதற்கு, சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு ஆகிய விஷயங்கள் தான் காரணம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பது வெளிப்படை.
இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் - தமிழ்நாடு உள்பட - நீதிமன்ற ஆணைகளுக்கிணங்க ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்படுகின்றன. இதனால் ஏற்றுமதி இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணி வாய்ப்புகளும் பறிபோகின்றன.
இந்த பிரச்னை, சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, ஜவுளித் தொழில், ஜவுளி கலைநயம், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி, பொதுமக்கள் நலம் போன்ற பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டும். 
இப்பிரச்னையை மேம்போக்காக அணுகாமல், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுநலம் பேணும் வல்லுனர்கள் இணைந்து, ஆழமாக பரிசீலித்து, நடைமுறை சாத்தியமான தீர்வைக் கண்டு, விரைந்து சீரமைக்க வேண்டும். இதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அத்தகைய செயல்பாடு ஏற்றுமதி ஏற்றம் பெற நிச்சயம் உதவும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.