பெருக வேண்டும் ஏற்றுமதி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ஆம் ஆண்டில் 7.2%-ஆக உயரும் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ஆம் ஆண்டில் 7.2%-ஆக உயரும் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது. முன்னதாக,  6.7%-ஆக மட்டுமே வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உலக அளவில் பார்க்கும்போது, மேற்கூறிய 7.2 சதவீத வளர்ச்சி  சிறப்பான வளர்ச்சி 
என்றுதான்  சொல்லவேண்டும்.

அதே நேரம், கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 3.74%-ஆக குறைவான வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது என்பதே. பொறியியல், தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடு சுணக்கமாக இருந்ததையடுத்து, ஏற்றுமதியில்  சரிவு  ஏற்பட்டுள்ளது  என்பது  வெளிப்படை.
மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  2018-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்தே  காணப்பட்டது.

நாட்டின் இறக்குமதியின் அளவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக, ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்; இறக்குமதி குறைய வேண்டும் என்பதுதான் நமது இலக்காக இருக்கவேண்டும். காரணம், ஏற்றுமதி அதிகரிக்கும்போது அந்நியச் செலாவணி அதிக அளவில் இந்தியாவுக்குக் கிடைக்கும். ஏற்றுமதிப் பொருள்களின் தேவையால் உற்பத்தி பெருகும். தொழிற்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்களின் வாழ்க்கைத் தரம்  உயரும்.    

மாறாக, இறக்குமதி குறைந்தால் குறைவான அளவில் அந்நியச் செலாவணி வெளியேறும். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். எனவே, தங்கம் போன்ற பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் மத்திய அரசின் கொள்கை அமைக்கப்படும்.

தற்போது இறக்குமதி குறைந்திருப்பதற்குக் காரணம் பெட்ரோலியப் பொருள்
களின் விலை குறைந்திருப்பதே ஆகும். இது வரவேற்கத்தக்கது. ஆனால், கூர்ந்து கவனிக்கும்போது தொழிற்சாலைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும், வெளிநாட்டு மூலிலப் பொருள்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது எனத் தெரிகிறது. இது தொழில் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. இது ஒருபுறம் இருக்க, தற்போதைய நிலையில் ஏற்றுமதி சரிவுக்கு என்ன காரணம்? அதைச் சீர் செய்வது  எப்படி  என்பதே  முக்கியமான  பிரச்னை ஆகும்.

உலக நாடுகளில் பொருளாதார சுணக்க நிலை நீடிக்கிறது என்பது  உண்மை. இதனால், இந்தியாவின் பாரம்பரியமான ஏற்றுமதிப் பொருள்களான பொறியியல், தோல் பொருள்கள், ஆபரணங்கள், ரப்பர், காபி, தேயிலை, ஜவுளி உள்ளிட்ட பல பொருள்களைக் கொள்முதல் செய்வதில் சர்வதேச அளவில்  சுணக்கம்  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை எதிர்கொள்வதற்கும், நமது ஏற்றுமதியை எப்போதும் போல் பெருக்குவதற்கும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளும், ஏற்றுமதியாளர்களும் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். உதாரணமாக, இந்தியாவில் பல பெரிய துறைமுகங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறை ("எலக்ட்ரிக் டேடா இன்டர்சேஞ்ச்') படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் லிமூலம் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டு வந்த கால விரயம் குறைவதற்கு இப்போது வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் துறைமுக வழிமுறைகளை நிறைவு செய்வதற்கு சீன ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் நேரத்தைவிட நான்கு மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. உலகில் ஏற்றுமதி செய்யும் 190 நாடுகளின் வரிசையில், இந்தியா 146-ஆவது இடத்தில்  உள்ளது  என்கிறது  உலக  வங்கியின்  ஆய்வறிக்கை.  எனவே மேற்
கூறிய மின்னணு தகவல் பரிமாற்ற நடைமுறையை முழுமையாகவும்  துரிதமாகவும் செயல்படுத்துவது அவசியம்.

சில மாதங்களுக்கு முன்பு வரை ஏற்றுமதியை ஜி.எஸ்.டி. நடைமுறைகள்  பாதிப்பதாக புகார்கள் வந்தன. அண்மையில் பல்வேறு பொருள்களுக்கு "சரக்கு மற்றும் சேவை வரி'  (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம். அதே போன்று ஏற்றுமதியாளர்கள் அன்றாடம் சந்திக்கும் நடைமுறை தாமதங்கள் அகற்றப்பட வேண்டும். உதாரணமாக, ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யும் மூலப் பொருள்களுக்கு அவர்கள் செலுத்திடும் வரித் தொகையில் திரும்பக் கொடுக்க வேண்டிய தொகையை அரசு  விரைந்து பட்டுவாடா  செய்ய  வேண்டும்.

ஏற்றுமதியாளர்களுக்கான விதிமுறையை அடிக்கடி மாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து கிட்டத்தட்ட 200 அரசாணைகளைப் பிறப்பித்திருக்கிறது என்று ஏற்றுமதியாளர்கள் சம்மேளனங்கள் தெரிவிக்கின்றன. இனியாவது இதுபோன்ற சூழல் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
காலம் காலமாக இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியைச் சார்ந்துள்ளது. அனால், தற்சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) ஏற்றுமதியின் பங்கு வெறும் 10%-ஆகக் குறைந்துள்ளது. அதே÷ நேரம் தென்கொரியாவை எடுத்துக் கொண்டால், அந்த நாட்டின் ஜி.டி.பி.யில்,  ஏற்றுமதியின் பங்கு 40%-க்கு மேல்  அதிகரித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலையும் இந்தியாவின்  ஏற்றுமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்பது மிகை அல்ல. ஏனெனில், சீனாவின் ஏற்றுமதியும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்த நாட்டின் ஜி.டி.பி. சில ஆண்டுகளுக்கு முன் 13% என இருந்தபோது, அந்த நாட்டின் ஏற்றுமதியின் பங்கு 35%-ஆக இருந்தது.  அந்த நிலை  இப்போது  பழங்கதையாகிவிட்டது.
சீனாவின் ஏற்றுமதி குறைந்துள்ள இந்தத் தருணத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ஏற்றுமதியை நாம் அதிகரிக்க வேண்டும். மாறாக, வங்கதேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகள் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன.
இவை அனைத்துக்கும் சிகரமாக, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு தற்சமயம் பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது, வங்கி கடன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்கள்தான் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம். கடந்த காலங்களில் ஏற்றுமதியைப் பெருக்குவதில் வங்கிக் கடன் வசதி முன்னிலை வகித்தது. ஆனால், அண்மைக் காலங்களில் வங்கிகளில் ஒருபுறம் வாராக் கடன் தொகை அதிகரித்துள்ளது. இன்னொருபுறம் வங்கிகளில் கடன் மோசடிகள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதிய சூழலில் வங்கிகளின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பொதுவாக சிறு தொழில்களையும், குறிப்பாக ஏற்றுமதியாளர்களையும்  நேரடியாகப்  பாதிக்கிறது.
வாராக் கடனை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய கடன்கள் வழங்குவதற்கு அரசுடமை வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதனால் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வியாபாரம் நசியத் தொடங்கியது. அண்மையில்தான் 11 வங்கிகளில் மூலின்று வங்கிகளுக்கான தடை உத்தரவு  விலக்கிக்  கொள்ளப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், வங்கிக் கடன்களுக்கான வட்டிச் சுமை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் ரெப்போ ரேட்டை 6.30%-லிருந்து 6.25%-ஆகக் குறைத்தது. இந்த நடவடிக்கை பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்த பிறகும் இதுவரை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் வட்டி விகிதத்தை இம்மியும் குறைக்கவில்லை. இது நியாயம் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்  வட்டி விகிதம் உடனடியாக  கால்  சதவீதம்  குறைக்கப்பட
வேண்டும்.
மூன்றாவதாக, வங்கிகளின் நிதி ஆதாரத்தைக் கொண்டு, புதிய கடன்கள் வழங்குவதைக் குறைத்துக்கொண்டு அந்தப் பணத்தை அரசு பாண்டுகளில் குறைந்த வட்டியில் வங்கிகள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. அது தவிர ரிசர்வ் வங்கியில்  சட்டப்படி வைத்திருக்க வேண்டிய பாண்டுகளில் (எஸ்.எல்.ஆர்.) நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக வங்கிகள் முதலீடு செய்கின்றன. "ரிஸ்கை' தவிர்ப்பது மட்டுமே வங்கிகளின்  நோக்கம். அதாவது, புதிய கடன் வழங்கினால் புதிதாக வாராக் கடன் பெருகி விடும் என்ற அச்சத்தில் கடன் கொடுப்பதையே குறைத்திடும் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இது வங்கிகளின் தொழில் தருமம் ஆகாது. கடன் கொடுப்பதில் முன் எச்சரிக்கையும், கூடுதல் கவனமும், நிபுணத்துவமும்தான் தேவையே தவிர கடன் கொடுப்பதைக் குறைப்பதும், குறிப்பாக சிறு தொழில் மற்றும் ஏற்றுமதிக் கடன் கொடுப்பதை தவிர்ப்பதும் சரியல்ல. இந்திய ஏற்றமதியின் 40% சிறுதொழில்களின்  பங்களிப்பு  என்பதை  மறக்கக் கூடாது.
மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் லிமூலதனத்தை வலுப்படுத்தும் வகையில் 2018-ஆம் ஆண்டில் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்தது. அப்படி இருந்தும் இதே காலகட்டத்தில், வங்கிகளின், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் புதிய கடன் தொகை 15  முதல் 20%  சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாத நிதி மற்றும் கடன் கொள்கையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இவ்வளவு முக்கியமான விஷயத்தை அறிவித்தால் மட்டும் போதாது. அதற்குரிய சீர்திருத்த நடவடிக்கையைகாலம் தாழ்த்தாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தின் உயிர் நாடி ஏற்றுமதி ஆகும். அதனை மேம்படுத்துவதற்கு அரசு மற்றும் ஏற்றுமதியாளர்கள் முனைப்புக் காட்டும் அதே நேரம், வங்கிகளுக்கும் இதில் கூடுதல் பொறுப்பு உண்டு என்பதை வங்கிகள் உணர  வேண்டும். 

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com