நமது உரிமையும் கடமையும்!

ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிப்போம்!
நமது உரிமையும் கடமையும்!

தேர்தலை "திருவிழா' என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேர்தல் என்பது கூடினோம், கலைந்தோம் என்று ஒரு நாளில் முடியும் திருவிழா அல்ல. தேர்தல் என்பது வாக்காளர்களின் உரிமையும் கடமையும் ஆகும். மக்களாட்சியின் முதுகெலும்பாக இருப்பது நியாயமான தேர்தல்தான். ஒரு நல்ல அரசு அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது தேர்தல்தான். இதை தீர்மானிப்பவர்கள் மாண்புமிகு வாக்காளர்கள். தேர்தல் என்பது நமது பொருளாதார வளர்ச்சி சார்ந்தது என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.

2024-ஆம் ஆண்டு உலக தேர்தல் ஆண்டு என்று சொல்லாம். 64 நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடந்துவருகிறது. இது தவிர ஐரோப்பிய யூனியனுக்கான தேர்தலும் இந்த ஆண்டு நடக்கும். இந்தியாவில் அதிக வாக்காளர்கள் உள்ள மாநிலம் உத்தர பிரதேசம். அங்கு வாக்காளர்கள் எண்ணிக்கை 15  கோடிக்கும் அதிகம். 22  நாடுகளில் வாக்களிப்பது கட்டாயம் என்று சட்டம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் வாக்களிக்கவில்லை என்றால் 20 டாலர் அபராதம். ஆசிய நாடுகளில் சிங்கபூரில் மட்டும் வாக்களிப்பது கட்டாயம்.

ரோம், கிரீஸ் போன்ற நாடுகளில் ஒரு காலத்தில் வாக்களித்து அரசர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். குடவோலை முறை தேர்தல் 9-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. இந்த முறை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்தத் தேர்தல் முறை பற்றிய செய்தி உத்திரமேரூர் கல்வெட்டில் இருக்கிறது.

போப்பாண்டவர் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட காலமும் உண்டு. இப்பொழுது இருக்கும் தேர்தல் முறை பதினெட்டாம் நூற்றாண்டில் அறிமுகமானது. 1951-52 ஆண்டுகளில் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் 53 கட்சிகள் போட்டியிட்டன. மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 1,874. வாக்காளர்களின் எண்ணிக்கை 17.3 கோடி. கடந்த 70 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.5 மடங்கு அதிகரித்து இருக்கிறது. தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 96.8 கோடி.

அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மாநிலம் உத்திர பிரதேசம்தான். சிக்கிம் மாநிலம் குறைந்த வாக்காளர்கள் கொண்ட மாநிலம். அங்கு வாக்காளர்கள் எண்ணிக்கை 4,62,000 மட்டுமே. ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்கும் முதல் முறை வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 2019 தேர்தலில் 676 கட்சிகள் போட்டி போட்டன. அதில் 36 கட்சிகள் வெற்றி பெற்றன. இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையைவிட மும்மடங்கு அதிகம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் ராஜதானிகளுக்கு தேர்தல் நடந்தது. அவர்கள் பிரதமர் என்று அழைக்கப்பட்டார்கள். அப்பொழுது பட்டா இருக்கும் நபர்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. ஒவ்வொரு தேர்தலிலும் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் 9 சதவீதம் பெண் வாக்காளர்கள் கூடுதல். ஆரம்ப காலத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டது. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தேர்தல் நாளன்று வாக்களிப்பதை முதல் கடமையாகக் கருதவேண்டும். பலபேர் வாக்களிக்காததால், வாக்களிப்பவர்களின் விகிதம் குறைந்துவிடுகிறது. நம் நாட்டில் 1952-இல் நடந்த முதல் தேர்தலில் 45 சதவீதம் பேர் வாக்களித்தனர். சென்ற பொதுத்தேர்தலில் 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகில் சுமார் பத்து நாடுகளில் 75 சதவீதத்திற்குமேல் தேர்தலில் தவறாது வாக்களிக்கிறார்கள். துருக்கி, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் 80 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள்.

எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு செயலியைத் தேர்தல் ஆணையம் உருவாக்கி இருக்கிறது. அந்த செயலியைப் பயன்படுத்தி உங்கள் கைப்பேசியில் அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தேர்தல் அன்று விடப்படும் பொது விடுமுறையை ஓய்வு எடுக்கக் கிடைத்த வாய்ப்பு என்று கருதி சிலர் வாக்களிக்காமல் பொழுதுபோக்கில் தங்கள் நேரத்தை கழிக்கிறார்கள். அதே சமயம் அரசாங்கம் மக்களுக்கான திட்டங்களை வாக்களித்தவர்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கு என்று வேறுபாடு பார்க்காமல் எல்லோருக்குமான நல திட்டங்களைத்தான் அரசாங்கம் செயல்படுத்துகிறது. அரசாங்கம் அவ்வளவு பொறுப்போடு இருக்கும்போது பொதுமக்களும் பொறுப்புடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

உலகில் அதிக வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியா. மக்களாட்சியின் இறுதி அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது. வாக்களிப்பில் கவனம் செலுத்தாத மக்கள் இதை உணரவேண்டும். தேர்தல் என்பது மக்கள் நலன் சார்ந்தது என்ற விழிப்புணர்வு வாக்காளர்களுக்கு வரவேண்டும். அரசியல் கட்சிகள்கூட எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கட்டாயம் வாக்களியுங்கள் என்றும் வலியுறுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உண்டு.

ஓட்டு போடும் வயதை 1971-இல் 21-லிருந்து 18-ஆக முதலில் குறைத்தது அமெரிக்கா. அதன்பிறகு 21 வயதை 18 -ஆகக் குறைத்தது இந்தியா. எனவே இளைஞர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து வாக்களிப்பதை தங்கள் எதிர்கால கட்டமைப்புக்கான வாய்ப்பு என்ற நோக்கில் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்களைப் பொறுத்தவரை எல்லோரும் சமமானவர்களே. அரசியல் கட்சிகள், தலைவர்கள் என்னதான் கவர்ச்சியான வாக்குறுதிகளைத் தந்தாலும் எது சரி எது தவறு என்று தீர்மானித்து வாக்களிக்கும் இடத்தில் வாக்காளர்கள்தான் இருக்கிறார்கள். இந்த உண்மை அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 70 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் தொடர்ந்து ஆட்சி செய்துவருகிறது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் மக்களுக்கு இந்த அளவுக்கு அதிகாரம் உள்ளதா என்பது சந்தேகமே. தேர்தலில் பல வகை உண்டு. வளர்ந்த நாடுகளில் அதிபர் தேர்தலில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்பது அவசியம். பிரதமரை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற முறை தேர்தலில் கட்சிகளுக்கு வாக்களித்து, கட்சி பிரதமரை முடிவு செய்யும்; பிரதமரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. அயர்லாந்தில் உறுப்பினர் பதவிக்காலம் ஏழு ஆண்டு. ரஷியாவில் ஆறு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல். நமது தேர்தல் நடைமுறை இங்கிலாந்தின் தேர்தல் நடைமுறையைப் போலிருக்கும். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சில நாடுகளில் அதிக வாக்கு யார் பெறுகிறார்களோ அவர்கள்தான், அதாவது 51% வாக்கு வாங்கியவர்கள்தான் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி இல்லாவிடில் மீண்டும் தேர்தல் நடக்கும். முதல் இரண்டு இடத்தைப் பிடித்தவர்கள் இடையே தேர்தல் நடக்கும். 88 நாடுகளில் இந்த தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. சில நாடுகளில் கட்சிக்கு வாக்களிக்கும் நடைமுறை உள்ளது. அதன் பிறகு கட்சி உறுப்பினர்களை அக்கட்சி தேர்ந்தெடுக்கும். இந்தத் தேர்தல் விகிதசார அடிப்படையில் நடக்கும்.

இந்த முறை 80 நாடுகளில் இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட ஓராண்டு தள்ளிப்போனது. இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்ததால் ஐந்தாண்டுகளில் நடக்க வேண்டிய தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. அப்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். இதேபோல் நான்கு முறை முழு ஐந்தாண்டு ஆட்சி நடக்காமல் இடையில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தப்பட்டது. ஆட்சியாளர்களுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே ஆட்சி கவிழ்ந்து, நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் கட்சிதான் நிலையான ஆட்சி தரும் என்று மக்கள் நம்பி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினார்கள். இப்போது அதே மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதாவை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இருக்

கிறார்கள்.

1967 முதல் 1977 வரை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். இரண்டு முறை தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அப்போதெல்லாம் தேர்தல் செலவு வேட்பாளருக்கு பெரிய சுமையாக இருந்ததில்லை. கட்சிக்காரர்களே கொடி கட்டுவார்கள், மேடை அமைப்பார்கள், பொதுக் கூட்டங்களில் துண்டு ஏந்தி மக்களிடம் பணம் வசூலிப்பார்கள். இப்போது பொதுக்கூட்டத்தில் துண்டு ஏந்தி வசூல் செய்யும் வழக்கமே இல்லாமல் போய்விட்டது.

இன்றைக்கு படித்தவர்களும் வசதியானவர்களும் வாக்களிப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இதே போல் வாக்குக்கு பணம் தரும் வழக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. இதற்கு முன்பும் இதே கட்சிகள்தான் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது பணம் தரும்  வழக்கம் இல்லை. வாக்குக்கு பணம் தருவது நிறுத்தப்பட வேண்டும். கேரளம் போன்ற மாநிலங்களில் இப்போதும் வாக்குக்குப் பணம் தரும் வழக்கம் இல்லை.

தேர்தல் செலவைக் கட்டுப்படுத்த சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அரசே பணம் வழங்குகிறது . இதை நம்முடைய நாடும் கருத்தில் கொள்ளலாம். தேர்தல் அறிக்கை, திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும்.

அதே சமயம் தேர்தல் என்பது எந்தத் தலையீடும் இல்லாமல் பராபட்சமின்றி நடக்க வேண்டும். இதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். அது ஆணையத்தின் கடமையும்கூட. நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டால்தான் அந்த நாட்டிற்கு மரியாதையும் கெளரவமும் கிடைக்கும். தேர்தலில் வாக்களிப்பது நமது உரிமையும் கடமையும் என்பதை உணர்ந்து அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: வேந்தர், விஐடி பல்கலைக்கழகம், வேலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com