அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

வெற்றிக்கு வித்திடும் தேர்தல் அறிக்கைகள்!

பிரான்சில் 1535-ஆம் ஆண்டு உலகின் முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

News image

Center-Center-Visakhapatnam

Updated On :14 ஏப்ரல் 2026, 12:45 am

முனைவர் சு. கிருஷ்ணசாமி

உலகில் 251 நாடுகள் உள்ளன; அவற்றில் 193 நாடுகள் ஐ.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ளன; 43 நாடுகளில் மன்னராட்சி முறை உள்ளது; 81 நாடுகளில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது; அவற்றில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் மட்டும்தான் தேர்தல்கள் நடைபெறுகின்றன; இதில் சில நாடுகளில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், குவைத் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தலிபான் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் கட்சிகள் இல்லை.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் மக்களாட்சி ஏற்பட்டது. 1970-க்குப் பிறகு தென் கொரியா, துருக்கி, ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் தேர்தல் முறை ஏற்பட்டது.

நெதர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், ஜப்பான், தாய்லாந்து, பூடான், மலேசியா, ஸ்பெயின், டென்மார்க் போன்ற நாடுகளில் அரசமைப்புச் சாசனத்துக்கு உள்பட்ட மன்னராட்சி நடைமுறையில் உள்ளது. குவைத், சவூதி அரேபியா, ஓமன், புரூனே, பஹ்ரைன், கத்தார், ஜோர்டானில் நேரடியான மன்னர் ஆட்சியின் கீழ் உள்ளன.

கி.மு.139-இல் ரோமில் முதன்முதலில் வாக்குச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சோழர்கள் ஆட்சிக் காலத்தில் குடவோலை தேர்தல் முறை இருந்தது.

1295-ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றம் தோன்றியது. பின்னர், சார்லஸ் மன்னர் காலத்தில் மக்கள் உரிமை சாசனம் வெளியிடப்பட்டது. பிரிட்டனில் 1820-ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது.

4-7-1776 அன்று அமெரிக்கா விடுதலை பெற்றது. 1787-இல் அமெரிக்க செனட் சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 1789-ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு பிரான்சில் தேர்தல் முறை தோன்றி மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

வாக்குச்சீட்டு மூலம் ரகசியமாக வாக்கு அளிக்கும் முறை முதன்முதலில் 1850-இல் ஆஸ்ரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டன.

1867, 1884-ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக குறிப்பாக சென்னை மாகாணத்தில் 1920-ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் சட்டப்படி வழங்கப்பட்டன. 1928-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகில் பல நாடுகளில் ஆண்-பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

1928-ஆம் ஆண்டு பிரிட்டனிலும், 1944-ஆம் ஆண்டு பிரான்சிலும், 1949-இல் சுவிட்சர்லாந்திலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மான்டேகு}செம்ஸ்போர்டு சட்டம் எனப்படும் இரட்டை ஆட்சி சட்டத்தின்படி இந்தியாவில் அப்போது இருந்த சென்னை, பம்பாய், வங்காளம், பஞ்சாப், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா உள்ளிட்ட பத்து மாகாணங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

சென்னை மாகாணத்தில் 1920, 1923, 1926, 1930 ,1934 மற்றும் 1937 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1937 முதல் இந்தியா விடுதலை பெறும் வரை சென்னை மாகாணத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாகாணத்திலும் தேர்தல்கள் நடைபெறவில்லை.

25-1-1950 அன்று இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. 1952 முதல் 1990 வரை தேர்தல்களில் வண்ணப் பெட்டி வாக்கு முறையும், வாக்குச் சீட்டு முறையும் நடைமுறையில் இருந்தன. 1990 முதல் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1952-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை (2024-ஆம் ஆண்டு) 18 முறை இந்தியாவில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றன. தமிழகத்தில் 1952-ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரை மொத்தம் 16 முறை சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

1620-ஆம் ஆண்டு "தேர்தல் அறிக்கை' என்னும் சொல் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. பிரான்சில் 1535-ஆம் ஆண்டு உலகின் முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 1875-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தேர்தல் அறிக்கை வெளியிடும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. மத்திய சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாகாண சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு, 1937-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

1952 முதல் 1970 வரை நடைபெற்ற தேர்தல்களில் தேர்தல் அறிக்கைகள் அரசியல் கட்சிகளுக்கு ஓரளவு பயன் தந்தன. பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஏழை மக்களுக்குப் பலன் தரும் இலவசங்கள் உள்ளடங்கிய தேர்தல் அறிக்கைகள் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு வித்திட்டன.

2000-க்குப் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற பல தேர்தல்களில் தேர்தல் அறிக்கைகளே அந்தந்த கட்சிகளின் வெற்றிக்குப் பெரும் துணை புரிந்து வருகின்றன. தேர்தல் வெற்றிக்கு முக்கிய அரசியல் கருவியாக தேர்தல் அறிக்கைகள் பரிணமித்துள்ளன.

தேர்தல் அறிக்கைகள் அரசியல் கட்சிகளின் வாக்கு ஈர்ப்பு காந்த சக்தியாகவும் மக்களின் தேர்தல் வழிகாட்டி ஆவணமாகவும் மதித்து வரவேற்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.