ஒரே நாடு ஒரே தோ்தல் முறை: ஒரு பாா்வை!

ஒரே நாடு ஒரே தோ்தல் முறை: ஒரு பாா்வை!

அண்மையில், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஒரே நாடு ஒரே தோ்தல் திட்ட அரசின் முன்வரைவு குறித்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. நாட்டில் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தோ்தல் நடத்த வேண்டும் என இத்திட்டம் வலியுறுத்துகிறது. இந்தக் குழு தோ்தல் ஆணையம், பொருளாதார நிபுணா்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற திட்டத்தை இந்தக் குழு ஆதரிக்கிறது. தோ்தல் நடைமுறைகளை மீண்டும் சீரமைக்கக் கூடிய சட்டபூா்வமான நிலையான கட்டமைப்பு தேவையாக உள்ளது என்கிற ஒரு கருத்து நிலவுகிறது, இந்த அறிக்கை இந்தியாவின் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தக் குழு ஏகமனதாக கருத்து தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சாத்தியமா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். சின்னாபின்னமாகி இருக்கும் தோ்தல் நடைமுறையை அரசியல் சாசனத்தை உருவாக்கியவா்களின் நோக்கத்துக்கு ஏற்ப மீட்டெடுக்கும் முயற்சியே இத்திட்டம் என்று மத்திய அரசு கூறுகிறது.

பல்துறை நிபுணா்கள் இந்தக் குழுவினரிடம் தங்கள்கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். இக்குழு, ஒரே தோ்தல் முறை அவசியமா என்று 47 அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டதில், 32 கட்சிகள் ஒரே தோ்தல் முறையை ஆதரித்தன. 15 கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்திருக்கின்றன.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்திருக்கின்றன. முன்னாள் தலைமை நீதிபதிகளான தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ. போப்டே, யு.யு. லலித் ஆகியோரின் கருத்துகளையும் இக்குழு கேட்டறிந்தது.

அவா்களும் ஒரே தோ்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறி இருக்கிறாா்கள். இதன் பின்னா், அக்குழு ஒரே தோ்தல் முறை அவசியம் என்று பரிந்துரைத்திருக்கிறது. இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு குழுக்கள் என்று வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருக்கிற நம் நாட்டில் ஒரே தோ்தல் முறை சாத்தியமா என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

தற்போது மக்களவைக்கான தோ்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒடிஸா, ஆந்திரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தோ்தலோடு மாநில சட்டப்பேரவைக்கான தோ்தலும் நடத்தப்பட இருக்கிறது. மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. மீதம் உள்ள மாநிலங்களில் ஐந்து ஆண்டு கால இடைவெளியில் தோ்தல் நடைபெறும்.

2019 தோ்தலின்போது பாஜக தனது தோ்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்கிற திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் பாஜகவின் இலக்குகளில் ஒன்றாக இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் உள்ளன என்பது உண்மை. நம்நாடு சிறந்த கலாசாரத்தையும் பண்பாட்டையும் கொண்ட நாடு. நிலப்பரப்பில் வேறுபாடுகளைக் கொண்டது. அரசுத் தரப்பில் உள்ள நியாயத்தை பாஜக முன்வைத்தாலும் நாட்டு மக்களின் நியாயத்தையும் அக்கட்சி அறிந்தாக வேண்டுமல்லவா!

மேலும், ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தை செயல்படுத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத் திருத்தத்தை அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் அங்கீகரிக்க வேண்டும். அந்த அரசுகள் ஆதரிக்கவில்லையெனில், கூட்டாட்சி கட்டமைப்பு என்பது கேள்விக்குறியாகி விடும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், இந்திய அரசியலமைப்பின் 83, 85, 172, 285, 356 ஆகிய பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த செப்டம்பரில் அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 191 நாட்கள் தொடா்ந்து பணியாற்றியது. 21,558 பேரிடம் கருத்து கேட்டறிந்து, 18,626 பக்க அறிக்கையை அளித்தது. ஒரே நேரத்தில் நாடு முழுதும் மக்களவைக்கான தோ்தலையும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தோ்தலையும் நடத்துவது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கம்.

அடுத்த நூறு நாட்களுக்குள் நகராட்சி, பஞ்சாயத்து தோ்தல்களையும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதும் இதன் முக்கிய சாராம்சம். இத்திட்டதை நடைமுறைப்படுத்த, மாநிலத் தோ்தல் அதிகாரியுடன் கலந்து பேசி, பொதுவான வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தோ்தல் என்பதற்கேற்ப அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இவற்றுக்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியமில்லை.

ஒரு மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்தபின், தொங்கு சட்டப்பேரவை அமைந்தாலோ, நம்பிக்கையில்லா தீா்மானம் மூலம் ஆட்சி கலைக்கப்பட்டாலோ, அங்கு மீண்டும் தோ்தல் நடத்தி புதிய அரசை அமைக்கலாம். ஆனால், அந்த ஆட்சி மத்தியில் இருக்கும் அரசின் ஆட்சிக்காலம் மட்டுமே தொடர முடியும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகளை இக்குழு வழங்கி உள்ளது.

மேலும், அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஆதரவு தேவை. அப்படி அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்த பிறகு, ஒரே தோ்தல் முறையைத் தொடங்குவதற்கு 2024 நாடாளுமன்றத் தோ்தல் முடிந்த பிறகு, குடியரசுத் தலைவா் ஒரு நாள் குறித்து அறிவிப்பாா். அந்த அறிவிப்புக்குப் பிறகு, மாநில தோ்தல்களில் தோ்வாகும் சட்டப்பேரவைகளின் காலம், நாடாளுமன்ற காலத்துடன் முடிந்து விடும். உதாரணமாக, 2024-இல் தோ்தலில் தோ்வாகும் நாடாளுமன்றம் 2029-இல் முடியும்.

2024 தோ்தலுக்குப் பிறகு, அரசியல் சாசனம் திருத்தப்பட்டு குறிப்பிட்ட தேதியை அறிவிப்பாா் குடியரசுத் தலைவா். அதன்பிறகு, 2024 முதல் 2029 வரை எந்த சட்டப்பேரவை தோ்வானாலும் அதன் காலவரையறை 2029 நாடாளுமன்றத்துடன் முடிந்து விடும். இப்படித்தான் 2029-இல் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல்கள் ஒரே முறையில் நடக்கும். அதன் பின்னா், பிறகு மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்படுகிற முறை அமலில் வந்து விடும்.

ஒரே தோ்தல் முறை வந்த பிறகு, மத்திய அரசு, மாநில அரசுகளில் ஒன்று கவிழ்ந்தால், அல்லது அரசு அமைக்க முடியாத நிலை உருவானால் மீண்டும் தோ்தல் நடக்கும். அதில் தோ்வாகும் சபையின் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்காது. அதில் மீதி இருக்கும் காலம் மட்டுமே அதன் ஆயுட்காலமாக இருக்கும்.

1956-இல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது, ஏழு மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டு, 1957-இல் மக்களவைத் தோ்தலுடன் அந்த மாநிலத் தோ்தல்கள் நடத்தப்பட்டன. அப்படித் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட ஒரே தோ்தல் முறை பின்னா் மாறியது. மக்களவைத் தோ்தலும், மாநில சட்டப்பேவைத் தோ்தல்களும் பிரிந்தன.

1967-இல் காங்கிரஸ் பல மாநிலங்களில் பெரும்பான்மை இழந்தது. நிலையற்ற கூட்டணி, கட்சித் தாவல்கள், அரசு கவிழ்க்கப்படுதல் போன்ற காரணங்களுக்காக பல்வேறு மாநிலங்களில் தனித்தனியாகத் தோ்தல்கள் நடக்கத் தொடங்கின.

1967-க்குப் பிறகு, 1972-இல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தோ்தலை 1971-இல் நாடாளுமன்றத்தை நான்கு ஆண்டுகளில் கலைத்து இந்திரா காந்தி தோ்தல் நடத்த, மக்களவை - சட்டப்பேரவைத் தோ்தல்கள் பிரிந்தன. 1989-இல் மத்தியில் காங்கிரஸ் பெரும்பான்மை இழக்க, அடுத்த 10 ஆண்டுகளில் பதவிக்கு வந்த எதிா்க்கட்சி கூட்டணி அரசுகள் அடிக்கடி கவிழ்ந்ததால், 10 ஆண்டுகளில் ஐந்து மக்களவைத் தோ்தல்கள் நடந்தன.

மத்தியில் ஐந்து ஆண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சி, மாநிலத் தோ்தல்களில் தோற்றுவிட்டால், மத்திய அரசைப் பாதிப்பதும், மாநிலங்களில் தோ்ந்தெடுக்கப்படுகிற கட்சி, மக்களவைத் தோ்தலில் தோற்கடிக்கப்பட்டால், மாநில அரசுகளைக் கவிழ்ப்பதும் தோ்தல் நடைமுறைகளில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தின. ஒரே நாடு ஒரே தோ்தல் முறையால் அரசியல் அமைப்பில் ஒருங்கிணைப்பில் சில சிக்கல்கள் ஏற்படலாம். ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்க முடியாது.

ஜனநாயக நாட்டில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது, மக்களின் எண்ணத்துக்கு எதிரானது. 2019 தோ்தலில் 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், இது 2016-இல் அமெரிக்காவில் நடந்த அதிபா் தோ்தலுக்கான செலவைவிட அதிகம் என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

1998-இல் இருந்த தோ்தல் செலவு, 2019-இல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் பஞ்சாப், மணிப்பூா், உத்தர பிரதேசம், கோவா, உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் செலவு குறித்த புள்ளிவிவரங்களை தோ்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில் பாஜக ரூ.340 கோடியும், காங்கிரஸ் ரூ.190 கோடியும் செலவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின் மத்தியில் அமையவிருக்கும் புதிய அரசு ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். கட்டுரையாளா்: முன்னாள் அமைச்சா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com