
அண்மைய உலகப் பொருளாதார வரலாற்றில் மிகவும் குழப்பமான மாதம், கடந்த ஏப்ரல் மாதமாகும். அமெரிக்கா இதுபோன்ற ஒரு போரை ஒருபோதும் தொடங்கியதில்லை. அமெரிக்காவின் இந்த வர்த்தகப் போரில் ஏவுகணைகளாக உலகின் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீதான வரிகள் பயன்படுத்தப்பட்டன . இந்த வரிகளில், விரைவான மாற்றங்கள் செய்ததன் காரணமாக குழப்பம் ஏற்படுகிறது. இறக்குமதிகள் உள்ளீடுகளாகவோ அல்லது ஏற்றுமதிக்கான இறுதி செய்யப்பட்ட பொருள்களின் உற்பத்திக்கான இடைநிலைப் பொருள்களாகவோ கண்டறியப்படும்போது விலக்குகள் வழங்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் ஏற்படும் வர்த்தக வரி மாற்றங்கள், ரத்துகள், விலக்குகள் குழப்பத்துக்கு மட்டுமல்லாமல், "குழப்பம்... குழப்பத்திற்கு மேல் குழப்பம்'” என்ற சூழ்நிலைக்கும் வழிவகுக்கிறது.
2024 - ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து இந்த குழப்பத்துக்கான விதைகள் விதைக்கப்பட்டன. தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 20, 2025 - ஆம் தேதி பதவியேற்ற நாளிலிருந்து குழப்பம் தொடங்கியது. ஏப்ரல் 2 -ஆம் தேதி, டிரம்ப் பரஸ்பர இறக்குமதி வரிகள் என்று அழைக்கப்படும் கடுமையான வரிகளை அறிவித்தபோது, அது உச்சகட்டத்தை அடைந்தது. இது உலகம் அனுபவித்து வந்த சுதந்திர வர்த்தகத்தின் அடித்தளத்தை உலுக்கியது. குறிப்பாக சீனாவிலிருந்து, தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. ஏப்ரல் 9 அன்று தற்காலிக 90 நாள்கள் கூடுதல் வரிப்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
"நான் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவேன்!' - இது தான் டிரம்ப்பின் தேர்தல் பிரசார வாக்குறுதி. கார்ப்பரேட் வரி விகிதங்களை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பதன் மூலமும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களை மீண்டும் இடமாற்றம் செய்து, அமெரிக்காவில் உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்து மேலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாகவும், உயர்தர பொருள்களை உற்பத்தி செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது என்பதே டிரம்ப்பின் நோக்கம். இறக்குமதிகள் மீதான வரிகள், வர்த்தக அளவைக் குறைக்கும் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் என்று அவர் நம்பினார். ஆண்டுதோறும் உலகின் பிற பகுதிகளில் இருந்து அமெரிக்க நீண்டகால கடன் பத்திரங்கள் மற்றும் குறுகிய கால கடன் பத்திரங்கள் மற்றும் பொதுவாக அமெரிக்க மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் தங்கள் வர்த்தக உபரிகளிலிருந்து நிதியளிக்கப்படுவதால் இந்த வர்த்தகப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன என்பதை அவர் அறிந்திருக்க நியாயமில்லை.
அமெரிக்காவின் நாணயம், நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் நிலையான சட்ட அமைப்பு ஆகியவற்றின் மீதான உலகளாவிய நம்பிக்கையைச் சார்ந்துதான் உலகின் பிற பகுதிகளிலிருந்து அமெரிக்காவுக்குள் தொடர்ந்து மூலதனம் வருகிறது. இந்த குணங்கள்தான் அமெரிக்காவை ஒரு பாதுகாப்பான புகலிடமாக ஆக்குகின்றன.
அமெரிக்காவின் குறைந்த சராசரி இறக்குமதி வரி வெறும் 3 சதவீதமாக இருந்தபோதிலும், வர்த்தகப் பங்காளிகள் அதிக வரிகளை விதிப்பதன் மூலம் சுயநலத்தை மேம்படுத்துவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாடுகளான கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகியவை அதிக வர்த்தக உபரிகளை அடைந்தன: கனடா ( 10,200 கோடி டாலர்), மெக்ஸிகோ ( 17,200 கோடி டாலர்) மற்றும் சீனா ( 29,500 கோடி டாலர்).
துப்பாக்கிச் சூடு போரில் ஈடுபடுவதைவிட வரிப் போரை நடத்த டிரம்ப் விரும்பினார். பதவியேற்ற உடனேயே, அவர் கூடுதல் வரிகளை விதித்தார்: கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம், சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்கு 10 சதவீதம், மற்றும் இந்தியா உள்பட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அடிப்படை 10 சதவீதம் வரி. எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரிகள் விதிக்கப்பட்டன. பரஸ்பர வரி ஆட்சி குறித்த ஆய்வுக்கு அவர் உத்தரவிட்டார். அமெரிக்க ஏற்றுமதிகள் கூட்டாளிகளால் வரி விதிக்கப்படும் அதே விகிதத்தில் வர்த்தக கூட்டாளிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீதான வரிகளை அவர் பரஸ்பர வரிகள் என்று அழைத்தார்.
ஏப்ரல் 2 , அன்று பரஸ்பர வரிகளை அறிவித்தார்: சீனா (34 சதவீதம்), ஐரோப்பிய ஒன்றியம் (20 சதவீதம்), தென் கொரியா (25 சதவீதம்), ஜப்பான் (24 சதவீதம்), தைவான் (32 சதவீதம்), கம்போடியா (49 சதவீதம்), வியத்நாம் (46 சதவீதம்), இலங்கை (44 சதவீதம்) மற்றும் இந்தியா (26 சதவீதம்). அமெரிக்க பரஸ்பர இறக்குமதி வரி இந்தியாவின் சராசரி வரியான 17சதவீதத்தைவிட அதிகமாக இருக்காது என்று எதிர்பார்த்ததால் இந்தியா ஏமாற்றமடைந்தது. இருப்பினும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போர்பன் விஸ்கி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை ஏற்கெனவே குறைத்துள்ளதால், இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதன் மூலம் ராஜதந்திர ரீதியாக பதிலளித்தது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சத்தைத் தூண்டின. ஏப்ரல் 7 அன்று உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிந்தன. அன்றைய தினம் "கருப்பு திங்கள்' என்று அழைக்கப்பட்டது, இந்தியாவின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று மாதங்களில் மிக மோசமான இழப்புகளைச் சந்தித்தன, முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடியை இழந்தனர்; பங்குச் சந்தை ஏற்ற இறக்கக் குறியீடு 66 சதவீதம் உயர்ந்தது.
புதிய வரிகளுடன், சீனா கடுமையாகப் பதிலடி கொடுத்தது. ஏப்ரல் 9 அன்று, டிரம்ப் சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தினார். இதில் ஏற்கெனவே இருந்த 20 சதவீதம் ஃபென்டானில் வரியும் அடங்கும். இது 145 சதவீதம் ஆக மாறியது. ஏப்ரல் 11 அன்று அமெரிக்க இறக்குமதிகள் மீது 125 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் சீனா பதிலளித்தது . மேலும், ஒரு சக்திவாய்ந்த வரி அல்லாத நடவடிக்கையை மேற்கொண்டது, அறிதிறன்பேசிகள் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கு அவசியமான ஏழு முக்கியமான அரிய பூமி தாதுக்களின் ஏற்றுமதியை நிறுத்தியது. இது இந்தியா உள்பட உலக அளவில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 30 நிறுவனங்களைப் பாதித்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா அறிதிறன்பேசிகள், மற்றும் மின்னணு பொருள்களுக்கு கூடுதல் வரிகளில் இருந்து விலக்கு அளித்தது. சீனா வரிகளை மேலும் அதிகரிக்கப் போவதில்லை என்றும் மற்றும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் அறிவித்தது. 90 நாள்கள் வரிவிதிப்பு நிறுத்தி வைப்பை (ஜூலை 8 வரை) டிரம்ப் அறிவித்தார். இதனுடன் வர்த்தக வரிப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அமெரிக்க டாலர் குறியீடு (உலகின் ஆறு முக்கிய நாணயங்களான யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட், கனடிய டாலர், ஸ்வீடிஷ் குரோனா மற்றும் சுவிஸ் பிராங்க் ஆகியவற்றின் கூடைக்கு எதிராக அமெரிக்க டாலரின் வலிமையை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தப்படும் அளவீடு) ஜனவரி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை 5.6 சதவீதம் குறைந்துள்ளது. 90 நாள் கூடுதல் வரி விதிப்பு நிறுத்த அறிவிப்புகள் மற்றும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, டாலர் குறியீடு மீண்டு ஏப்ரல் 25 -ஆம் தேதிக்குள் 99.5 - ஆக உயர்ந்தது. வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொண்ட அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், பதற்றங்களைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வர்த்தக கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கத்திற்கு மத்தியில் வட்டி விகிதத்தைக் குறைக்க ஒப்புக்கொள்ளாததற்காக பெடரல் ரிசர்வ் தலைவரை பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த உறுதிமொழிகள் உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள், முதலீட்டாளர்களை அமைதிப்படுத்தின. இதுவரை 30 சதவீதம் உயர்ந்துவந்த தங்கம், ஏப்ரல் 17 அன்று ஒரு டிராய் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,491 உயர்ந்து, ஏப்ரல் 25 -ஆம் தேதிக்குள் 3,290 டாலராக குறைந்தது. சில அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா விலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனால், ஏப்ரல் 4 - ஆம் தேதி கடுமையாக வெடித்த வர்த்தகப் போர் ஐந்து நாள்களுக்குள், தற்காலிக வரிவிதிப்பு நிறுத்தத்துக்கு வழிவகுத்தது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் கடந்த 80 ஆண்டுகளாக நிலவிய அமெரிக்காவை மையமாகக் கொண்ட பொருளாதார ஒழுங்கு இன்னும் சரிந்துவிடவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் செய்தியாளர் சந்திப்புகளில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிலிருந்து வெளியேறுவது டிரம்ப்பின் நோக்கமல்ல எனவும், அமெரிக்காவின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை மறுவடிவமைப்பதே டிரம்பின் கொள்கை என்றும் உறுதியளித்தார்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோரின் ஏப்ரல் மாத இந்தியா வருகை குறித்து, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றத்தைப் பாராட்டினார். தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக அறிக்கைகள் மே மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று ஏப்ரல் 30 அன்று டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
கட்டுரையாளர்:
மூத்த பொருளாதார நிபுணர்.