ஈரமான இதயங்களே உலகின் அழகு!
ஒரு சிறுவனின் நோ்மை, என்னை வியக்க வைத்தது. ஃபேஸ்புக்கில் பாா்த்த ஒரு பதிவு.

கோப்புப்படம்.

கோப்புப்படம்.
கோடை விடுமுறை என்பது பிள்ளைகளுக்கு வெறும் ஓய்வுக்கான நேரம் மட்டுமல்ல; அவா்களின் ஆளுமையைச் செதுக்குவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த விடுமுறை நாள்களைப் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்ற வேண்டியது பெற்றோரின் கடமை. வீட்டுவேலைகளில் அவா்களை இணைத்துக்கொண்டு சிறு சிறு வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும்.
ஒரு சிறுவனின் நேர்மை, என்னை வியக்க வைத்தது. ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு பதிவு. இன்றைய உலகத்தில் ஒருவர் ஒரு தவறு செய்துவிட்டால் யாரும் பார்க்கவில்லை என்றால், அங்கிருந்து நழுவி விடுவார்கள். ஆனால், ஒரு சிறுவன் அவ்வாறு ஓடி ஒளியவில்லை.
அவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டான். அதன் காரணமாக அந்த பைக்கின் நம்பர் பிளேட் கீழே விழுந்துவிட்டது. ஒருவரும் அருகில் இல்லை. அவன் அங்கிருந்து ஓடிப் போயிருக்கலாம். ஆனால், அவன் அவ்வாறு செய்யவில்லை. கீழே விழுந்த நம்பர் பிளேட்டை எடுத்து அதை மீண்டும் பொருத்த முயன்றான். அது முடியவில்லை. தனது தவறை உரிமையாளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவுசெய்து, அவர் வரும்வரை அங்கேயே காத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து இரு சக்கர வாகன உரிமையாளர் வந்தார். அவரிடம் நடந்ததை அப்படியே கூறினான். அதுமட்டுமல்லாமல் தன்னிடம் இருந்த நாணயங்களை அவரிடம் நீட்டினான். அந்தச் சிறுவனின் அப்பாவித்தனமும், நேர்மையும் அந்த மனிதரைக் கலங்க வைத்துவிட்டது. சிறுவனை அன்போடு அணைத்துக்கொண்டார். இப்படிப்பட்ட நல்ல மனங்கள்தான் எதிர்காலத் தலைமுறைக்கு இருக்க வேண்டும்.
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், அதை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் இருக்க வேண்டும். இந்தக் குழந்தையின் வளர்ப்பு குறித்து அவன் பெற்றோர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இத்தகைய நேர்மையும் தைரியமும் ஒருவனை மிகச் சிறந்த மனிதனாக உருவாக்கும்.
இன்னொரு காணொலியும் மனதைத் தொட்டது. ஓர் இளம்பெண் வேகமாக சாலையில் ஓடிவருகிறாள். காணொலியைப் பார்த்தால் பேருந்தைப் பிடிப்பதற்கு ஓடி வருவதாகத் தோன்றியது. ஆனால், அவள் அதற்காக அவ்வளவு வேகமாக ஓடவில்லை. அவள் செய்த செயலை அவளுக்கே தெரியாமல் மாடியில் இருந்து ஒருவர் தன் கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட, துணிக் கடையில் வேலைசெய்யும் அந்தப் பெண்ணைப் பலரும் பாராட்டுகிறார்கள்.
பார்வை இழந்த ஒருவர் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அவர் நிற்கும் இடத்தில் எந்தப் பேருந்தும் நிற்காது என்பதை அவர் உணரவில்லை. அவர் நிறுத்தத்துக்கு சற்று தள்ளி நிற்கிறார். ஒரு பேருந்து வந்து நிறுத்தத்தில் நிற்கிறது, அந்தப் பெண் இதைக் கவனிக்கிறாள். அவள் ஓடிப்போய் நடத்துநரிடம் சிறுது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் ஓடிப்போய் பார்வையற்றவரை கையைப் பிடித்து அழைத்துவந்து பேருந்தில் ஏற்றி விடுகிறார். தன் தந்தை அனைவருக்கும் உதவி செய்வதைக் கண்டு வளர்ந்தவள் என்றும், அதனால் எல்லோரிடமும் அன்புகாட்ட கற்றுக்கொண்டேன் என்றும் சொல்கிறார்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் நம் மனதுக்கு இதமாக இருக்கின்றன. அந்தச் சிறுவனிடம் இருந்த நேர்மையும், அந்தப் பெண்ணிடம் இருந்த மனிதாபிமானமும்தான் இந்த சமூகத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அன்பையும், பரிவையும் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதை அவர்களுக்குப் புகட்டாமல் விட்டு விடும்போதுதான் பிள்ளைகள் தடம் மாறிப் போய்விடுகிறார்கள்.
வீட்டில் அன்பும் அனுசரணையும் கிட்டவில்லை என்றால், அவர்களின் மனம் வறட்சி தட்டிப்போய் பாலைவனமாகி விடுகிறது. நம் பாடத் திட்டங்களும் மாணவர்களின் அறிவை வளர்க்கின்றனவே ஒழிய, அவர்களின் ஆன்மாவை வளர்ப்பதில்லை. பாடங்களை மதிப்பெண்களாக மட்டுமே ஆசிரியர்களும் பார்க்கின்றனர். அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நீதி என்ன? தர்மம் என்ன?, வாழ்க்கைக் கோட்பாடுகள் என்ன?, விழுமியங்கள் என்ன? என்ற கண்ணோட்டத்தில் பாடம் நடத்துவது இல்லை.
தேர்வு முடிந்ததும் படித்தது அனைத்தையும் மாணவர்கள் மறந்து போகிறார்கள். அடுத்த கல்வியாண்டில் இன்னொரு புதிய பாடத்திட்டம். அவ்வளவுதான். ஆகவேதான், ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஜப்பானிய கல்வி, கல்வி அறிவைவிட ஒழுக்கத்துக்கும் நற்பண்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பள்ளியைத் தூய்மை செய்வது முதல் உணவு பரிமாறுவதுவரை மாணவர்களே செய்கிறார்கள். இது அவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறது. ஜப்பான் நாடு சுத்தம் செய்ய கற்றுக் கொடுப்பதுபோல, இஸ்ரேல் நாட்டுக் கல்வி முறையில் துணிச்சல் என்ற பண்பை கற்பிக்கிறார்கள். அங்கு தவறு செய்வதோ அல்லது ஒரு முயற்சியில் தோல்வி அடைவதோ அவமானமாகக் கருதப்படுவதில்லை.
அவர்களைப்போல, நாமும் தோல்விகளைக் கண்டு துவளாமல் அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். தனிமனித முன்னேற்றத்தைவிட ஒரு சமூகம் இணைந்து முன்னேறுவதே உண்மையான வளர்ச்சி. அந்தப் பெண் பார்வையற்றவருக்கு உதவியது தனிப்பட்ட செயல் அல்ல; அது ஒரு சக மனிதருக்கு ஆற்றிய கடமை. இத்தகைய கூட்டுப் பொறுப்புணர்வை நாம் மாணவர்களிடம் விதைக்க வேண்டும். கல்வி என்பது வாழ்வாதாரத்துக்கான கருவியல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. தன் தேவைகளைத் தானே கவனித்துக்கொள்வதும் ஒரு மனிதனின் அடிப்படைப் பண்பு.
ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளை வளர்ப்பதைக் கண்டு வியப்பு ஏற்பட்டது. தேர்வு முடிந்த மறுநாள் அவர் தன் பிள்ளைகளை அழைத்து, அவர்களின் நோட்டுப் புத்தகங்கள் அனைத்தையும் கொணர்ந்து, வரவேற்பறையில் வைக்கச் சொன்னார். ஒவ்வொரு நோட்டு புத்தகத்தில் இருந்தும் எழுதப்படாமல் இருக்கும் வெற்றுத் தாள்களை கிழிக்கச் சொன்னார். கிழித்த பிறகு, அவர் அந்தப் பக்கங்களை "பைண்டு' செய்ய கொடுத்துவிட்டார். அது அடுத்த ஆண்டுக்கான "ரஃப்' நோட்டு. ஒரு பக்கத்தைக்கூட வீணடிக்கக் கூடாது என்று கற்றுக் கொடுத்தார்.
அவர்கள் பயன்படுத்திய பொருள்களில் உபயோகமானவற்றை அவர்களைக் கொண்டு பிரித்தார். குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகத்தின் விலையைக் கூறி, தேவையில்லாமல் தாளை வீணாக்கக் கூடாது; எந்த ஒரு பொருளும் பயன்பட வேண்டும் என்று புரியவைத்தார். அவர்களின் பொறுப்புணர்வை வளர்க்க அவர் எடுத்த முன்னெடுப்பு இது. அந்தக் குழந்தைகளுக்கு வீட்டில் சின்ன சின்ன வேலைகளை செய்யப் பழக்கப்படுத்தினார்.
கோடை விடுமுறை என்பது பிள்ளைகளுக்கு வெறும் ஓய்வுக்கான நேரம் மட்டுமல்ல; அவர்களின் ஆளுமையைச் செதுக்குவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த விடுமுறை நாள்களைப் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்ற வேண்டியது பெற்றோரின் கடமை. வீட்டுவேலைகளில் அவர்களை இணைத்துக்கொண்டு சிறு சிறு வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும். செடிகளுக்கு நீர் ஊற்றுவது, வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவற்றைச் செய்யலாம். வாழ்வியல் விழுமியங்களைக் கற்பிக்கலாம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும்; அதைக் கண்டறிந்து உற்சாகப்படுத்தலாம். நம் மரபு மற்றும் கலாசாரம் பற்றிய அறிவும் தெளிவும் அவர்களுக்கு அவசியம். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுவது மிக மிக முக்கியம். குழந்தைகளை வெளியே அழைத்துப்போய் வெளி உலகப் பரிச்சயம் கிட்டும்படி செய்ய வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவும்போது பிள்ளைகளை உடன் அழைத்துச் சென்று அவர்கள் கைகளால் அவற்றைக் கொடுக்க வைக்க வேண்டும். கலைகளை அவர்கள் எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். தற்போது நேர்மை, பணிவு, நேர மேலாண்மை, இன்சொல் பேசுதல், தூய்மை, ஒழுங்கு, பிறர் நலன் பேணுதல், சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்போம்.
நேர்மையான இதயமும், உழைக்கத் தயங்காத கைகளும், பிறர் துயர் துடைக்க நீளும் கரங்களும் கொண்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். கல்வி என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவது அல்ல; அது தகவமைப்பைச் செதுக்குவது. அந்தச் சிறுவன் தன் தவறை ஒப்புக்கொண்டது பலமான முதுகெலும்பு; அந்தப் பெண், பார்வையற்றவரிடம் காட்டியது அன்பு, அது சக மனிதனை நேசிக்கும் இதயத் துடிப்பு. ஆகவே, மாற்றம் நம் வீட்டில் இருந்து தொடங்கட்டும். அது வகுப்பறைகளில் மலரட்டும்; உன்னதமான சமுதாயமாக பரிமளிக்கட்டும்.
இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளைப் பல்வேறு வகுப்புகளில் சேர்த்து அவர்களை இயந்திரங்களாக மாற்றாமல் நற்பண்புகளை சொல்லித்தர வேண்டும். அவர்களுக்குப் பொறுப்புணர்வை ஊட்ட முயற்சி எடுக்க வேண்டும். குழந்தைகளை வாழ்க்கைக்குத் தயார்படுத்த வேண்டும்.
நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நம்மால் பிறருக்குக் கொடுக்க முடியும். முன்பு ஜெர்மனி பிளவு பட்டிருந்தபோது, பெர்லின் நகரத்தை கிழக்காகவும், மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒரு நாள் கிழக்கு பெர்லினைச் சேர்ந்த ஒரு சிலர் ஒரு லாரி நிறைய குப்பைகளைக் கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினர். மேற்கு பெர்லின் மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை மாறாக ஒரு லாரி நிறைய உணவுப் பொருள்கள், பால்பொருள்கள் ரொட்டிகள் மற்றும் மளிகை சாமான்களைக் கொண்டு வந்து மதில் தாண்டி கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டுப் போனார்கள்.
மேலும் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்துவிட்டுப் போனார்கள்:-
ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் கொடுப்பார்கள்- எவ்வளவு நிதர்சனமான உண்மை. நம் பிள்ளைகளுக்கு அன்பையும் நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருவோம். ஈரமான இதயங்கள் இருக்கும் வரை இந்த உலகம் அழகாக இருக்கும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...