பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

சுற்றுச்சூழல்: சாபமாக்கப்பட்ட வரம்!

சுற்றுச்சூழல் குறித்த நடுப்பக்கக் கட்டுரைகள்.....

சுற்றுச்சூழல்

Published On :

முனைவர் செளமியா அன்புமணி

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்குவதுதான் சுற்றுச்சூழல். தூய காற்று, பாதுகாப்பான காலநிலை, பாதுகாப்பான மற்றும் போதுமான தண்ணீர், நலமான மற்றும் நீடித்திருக்கும் முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு, நச்சு இல்லா சுற்றுச்சூழல், நலமான சுழல் மண்டலங்கள் மற்றும் உயிரிப்பன்மயம் ஆகிய ஆறு அம்சங்களும் தூய்மையான, நலமான மற்றும் நீடித்திருக்கும் சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகும். இந்த ஆறு அம்சங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ முடியும்.

காற்று மாசு காரணமாக சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 11 ஆயிரம் பேர் இறப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.11,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. உலக நலவாழ்வு அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட காற்று மக்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் சென்னை மாநகர மக்களின் வாழ்நாள் நான்கு ஆண்டுகள் அதிகரிக்கக்கூடும். இதற்காக 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய தூயக் காற்றுத் திட்டத்தில் 2021-ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், இந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 90% பணிகள் நிறைவேற்றப்படவில்லை.

அது மட்டுமின்றி, சென்னைக்கு காற்று மாசு எங்கிருந்து, எந்த அளவுக்கு வருகிறது என்பதை அறிய ஐஐடி மூலம் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை. இதில் நாம் தலைகுனிய வேண்டிய செய்தி என்னவென்றால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவில் சென்னை கடைசி இடத்தைப் பிடித்திருப்பதுதான். அதேபோல், தமிழ்நாட்டுக்கான "தூய காற்று திட்டம்' 31.01.2025 அன்று உருவாக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அது குறித்த விவரங்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை.

சென்னை தூயக் காற்று திட்டத்துக்காக பெறப்பட்ட ரூ.593 கோடியில் ரூ.194 கோடி செலவிடப்பட்டதும், மீதமுள்ள தொகை பயனில்லாத திட்டங்களுக்கு வீணாகச் செலவிடப்பட்டதும்தான் மிச்சம். ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1995-ஆம் ஆண்டில் மூடப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆலையால் கைவிடப்பட்ட 2.5 லட்சம் டன் குரோமியம் மற்றும் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிலும், நிலத்திலும் கலந்த இந்த கழிவுகளால் விளைநிலங்கள் மலட்டுத்தன்மை கொண்டவையாக மாறிவிட்டன. மக்கள் புற்றுநோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள், மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ஆண்மைக் குறைவு உள்ளிட்ட நோய்களால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; விரிவான திட்டத்தை முதல் ஆறு மாதங்களில் உருவாக்கி, அடுத்த ஆறு மாதங்களில் பணிகளைத் தொடங்க வேண்டும்; இதற்கான செலவுகளை மாசுபடுத்தியவரே பொறுப்பேற்கும் கோட்பாட்டின் படி தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 02.09.2022 அன்று தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும்கூட இன்று வரை பணிகள் தொடங்கப்படவில்லை.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பாலாற்றில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் ஏற்படும் கேடுகளையும் தமிழக அரசு இன்னும் தடுக்கவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும்படி 30.01.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, 2025 மார்ச் மாதம் நீதியரசர் சத்தியநாராயணன் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் ஆய்வு செய்து ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மீண்டும் 16.09.2025 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னமும் பாலாற்றில் தோல் ஆலைக் கழிவுகளும் நகராட்சி கழிவுகளும் கலப்பது தொடர்கிறது.

தமிழக அரசின் தோல்விப் பட்டியல் இன்னும் முடியவில்லை. தமிழ்நாட்டில் மிகவும் மாசுபட்ட ஆறுகளாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறை செய்யப்பட்ட சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, காவிரி, பவானி, தாமிரவருணி, கூவம், அடையாறு, அமராவதி ஆகிய ஒன்பது ஆறுகளை மீட்டெடுத்து ஆறு மாதங்களில் அவற்றில் குளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என 2018-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் கூவம், அடையாறு, அமராவதி ஆகிய மூன்று ஆறுகளை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை. மீதமுள்ள ஆறு ஆறுகளுக்கு செயல்திட்டம் உருவாக்கப்பட்ட போதிலும் அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

இவை அனைத்தையும் விஞ்சும் வகையிலான ரசாயன பாதிப்புகளை ஏற்படுத்துவது கடலூர் சிப்காட் வேதிப்பொருள்கள் தொழிற்பேட்டை ஆகும். அங்கிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து அங்கு வளரும் தென்னை மரங்களில் காய்க்கும் இளநீர்களில்கூட டையாக்சின் எனப்படும் நச்சுப்பொருள்கள் உள்ளன. ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தோல் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றாலும் இதே நச்சுப்பொருள் உருவாகி மனிதர்களைத் தாக்குகிறது. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட ஏராளமான கொடிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன.

தமிழ்நாட்டின் கடலோர சுற்றுச்சூழலைக் காப்பதற்காக உலக வங்கியிடம் சுமார் ரூ. 1,200 கோடி கடன்வாங்கி, அதில் ரூ. 21 கோடி செலவிட்டு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. "பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்' என்ற பெயரில் சதுப்புநிலத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் 6 அடி உயரத்துக்கு சுமார் 3 கி.மீ. நீளமான சுற்றுச்சுவரையும், டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களைக் கொண்டு அகலமான நடைபாதையையும் சதுப்பு நிலத்துக்கு உள்ளே அமைக்கிறார்கள். இது சதுப்புநிலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நடவடிக்கை ஆகும்.

இத்தகைய பேரழிவுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு காரணம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்யாததுதான். இந்த ஒற்றைப் பணியை மட்டும் தமிழக அரசு செய்தால், அந்தப் பகுதியில் ஒரு கி.மீ. சுற்றளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கும். சதுப்புநிலத்தின் உள்ளே குப்பையைக் கொட்டுவதும், கழிவுநீரைக் கலப்பதும் தடுக்கப்படும். பள்ளிக்கரணையை காப்பதால் சென்னையின் வெள்ள பாதிப்பும் குறையும். எனவே, இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள 20 ராம்சார் தளங்கள் உள்பட 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017-இன் கீழ் சட்டப்படி அறிவிக்கை செய்ய வேண்டும். இதற்காக உச்சநீதிமன்றம் பலமுறை நிர்ணயித்த காலக்கெடுகள் காலாவதியாகி விட்ட நிலையில், நடப்பு செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதிய கெடு விதித்திருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்ய வாய்ப்புகள் தென்படவில்லை.

நகரங்களில் உருவாகும் குப்பையில் 30% முதல் 40% அளவு குப்பைகளை மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் தான் காரணமாக உள்ளனர். 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பு, ஒரு நாளுக்கு 40,000 லிட்டர் தண்ணீர் பயன்பாடு, அல்லது ஒரு நாளில் 100 கிலோகிராமுக்கு கூடுதலாக குப்பை உருவாக்கும் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை மொத்தக் கழிவு உற்பத்தியாளர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் உருவாக்கும் கழிவுகளுக்கு அவர்களே பொறுப்பு என திடக்கழிவு மேலாண்மை விதிகள் கூறுகின்றன.

அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அவரவர் மாவட்டத்தில் உள்ள மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் பட்டியலை ஆறு வாரங்களில் தொகுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 18 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் திடக்கழிவு மேலாண்மை விதியை முறையாகச் செயல்படுத்தாவிட்டால் "மின் இணைப்பையும் தண்ணீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை செயல்படுத்துவதுடன், திடக்கழிவுகளை வகை பிரித்து மேலாண்மை செய்வதற்கான முழுமையான செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.

சீரழிக்கப்பட்ட சுற்றுச்சூழலை மீட்டெடுத்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அரசு பாதுகாக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.

கட்டுரையாளர்:

தலைவர், பசுமைத் தாயகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.