டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

முடங்கிக் கிடக்கும் உயர்கல்வி மன்றம்: தடைபட்டிருக்கும் திட்டங்கள்

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் முடங்கி உள்ளதால் பல்வேறு உயர்கல்வித் திட்டங்கள் தடைப்பட்டிருப்பதாக பேராசிரியர்களும்,

News image
Updated On :4 ஜனவரி 2017, 8:49 pm

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் முடங்கி உள்ளதால் பல்வேறு உயர்கல்வித் திட்டங்கள் தடைப்பட்டிருப்பதாக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளை மேற்கொள்ள 1992 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுதுதான் உயர் கல்வி மன்றம்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
இதனிடையே, தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகளை தேர்வு செய்து படித்தவர்களை, கல்லூரி பேராசிரியர் பணித்தேர்வின்போது, ஆசிரியர் தேர்வு வாரியமே (டிஆர்பி) புறக்கணித்தது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கலை -அறிவியல் கல்லூரிகளுக்கான ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தை உருவாக்கும் பணி இந்த மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனத்தில் ஒரு பருவம் அதாவது 6 மாதங்கள் படிக்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்காக மாணவர் ஒருவருக்கு ரூ.15 லட்சத்தை செலவு செய்தது. உயர்கல்வி மன்றம் மூலமாக கடந்த 2013-14 கல்வியாண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் முக்கியப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் முடங்கிப் போயிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மன்றத்தின் துணைத் தலைவர் பணியிடம் கடந்த 4 ஆண்டுகளாகவும், உறுப்பினர் செயலர் பணியிடம் கடந்த ஓராண்டாகவும் நிரப்பப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:
விமானத்தில் பயணிப்போமா என்று கனவிலும் நினைத்துப் பார்க்காத ஏழை மாணவர்கள், வெளிநாடு சென்று அங்குள்ள சிறந்த கல்வி நிறுவனத்தில் 6 மாதங்கள் படித்து, அந்நாட்டு கலாசாரம், மக்களின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வகையிலான சிறந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வந்தது. ஆண்டுக்கு 25 மாணவர்கள், 5 பேராசிரியர்கள் வெளிநாடு அனுப்பப்பட்டனர். ஆனால், உயர் கல்வி மன்றம் முடங்கிக் கிடப்பதால், 2016-17 கல்வியாண்டில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது.
அதுபோல், மத்திய அரசின் அனைவருக்கும் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் (ரூசா) பல கோடி ரூபாய் நிதியுதவி பெறும் திட்டம், நூறு சதவீத பணிகள் முடிவடைந்துவிட்ட "ஒருங்கிணைந்த பாடத் திட்டம்' என மன்றம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பல திட்டங்களும் பாதியில் தடைப்பட்டுபோயுள்ளன.
எனவே, மாநில உயர்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, மன்றத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதுடன், உயர்கல்வித் துறைக்கு முழுநேர செயலரையும் நியமிக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.