கர்வத்தால் இழந்த நெற்றிக்கண்! சுவையான வரலாறு!
மன்னன் கரிகாலன், முதலாம் பெருநெல்கில்லியின் பெயரனும் இளம்சேட் சென்னியின் மகனுமாவான். தோல்வியே கண்டறியாத அவன் காவிரிக்குக் கரை எழுப்பும்போது நடந்த சுவையான நிகழ்ச்சியை கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
கரிகாலன் காவிரிக்குக் கரை எழுப்பும்போது சிற்றரசர்கள் பலரும் அவன் கட்டளையை ஏற்று கரை அமைத்தனர். ஆனால், பிரதாபருத்ரனுக்கு சிவபெருமானைப் போல் நெற்றியிலும் ஒரு கண் இருந்ததால், கர்வம் கொண்டு, கரிகாலனின் ஆணையை மதிக்காமல் நீ யார் சொல்ல, நான் யார் கேட்க? என ஆர்ப்பரித்தான். அதனால், அவனுடைய உருவத்தை ஓவியமாக வரைந்து வருமாறு ஓவியருக்குக் கட்டளையிட்டான் கரிகாலன். ஓவியத்தை வரைந்து கரிகாலனிடம் சமர்ப்பித்தான் ஓவியன்.
உடனே பிரதாபருத்ரனின் ஓவியத்தில் மிகையாக அவனுக்கு இருந்த மூன்றாவது கண்ணை கரிகாலன் காலால் மிதிக்க, அப்போது பிரதாபருத்ரன் நெற்றிக்கண்ணை இழந்து கரிகாலன் கட்டளையை ஏற்று கரை அமைக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டான் என்பது வரலாறு.
மேலும், எக்காலத்திலும் புறமுதுகு காட்டி ஓடாத சேர, பாண்டிய அரசர்களைத் தோல்வியுறச் செய்து அவர்கள் இடுப்பில் கந்தைத் துணியை அணிவித்து, தலையில் அகல் விளக்கை ஏற்றிவைத்து, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அதனை இமயத்தில் பொறித்தான் கரிகாலன் (பா.200) என்கிறார் ஜெயங்கொண்டார்.
தொழு மன்னரே கரை செய் பொன்னியில்
தொடர வந்திலா முகரியைப் படத்து
எழுதுக என்று கண்டு இது மிகைக் கண் என்று
இங்கு அழிக்கவே அங்கு அழிந்ததும் (198)