புதுக்கோட்டை வட்டம் சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கடந்த ஆண்டு தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் அவரது 10 வயது மகனைக் கொத்தடிமையிலிருந்து அரசு அதிகாரிகள் மீட்டனர். இத்தகைய கடுமையான சூழலால் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு தற்போது 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னந்தோப்பின் நடுவே அமைந்த நடராஜனின் வீட்டுக் கூரையின் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நடராஜனின் இறுதிச் சடங்கு செலவிற்காக அவரது உறவினர் ஒருவர் 10 வயதே ஆன நடராஜனின் மகனை பொட்டலான் குடியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் ரூபாய் 6000 பெற்றுக் கொண்டு அவரிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அக்குடும்பம் கடனை திருப்பி செலுத்தும்வரை, அச்சிறுவன் மகாலிங்கத்தின் 200 ஆடுகளை மேய்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கீழவாணிபட்டு என்ற கிராமத்தின் அருகே சிறுவன் ஆட்டு மந்தையை மேய்ப்பதைக் கேள்விப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குச் சென்று அச்சிறுவனை மீட்டனர். மேலும் அவனை அரசு உறைவிடப் பள்ளியில் சேர்த்தனர். அச்சிறுவனின் நிலையை அறிந்த மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் முனைவர் எம். பி. நிர்மலா ஐஏஎஸ் (ஓய்வு) உடனடியாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் முனைவர். வெங்கடாச்சலம், ஐஏஎஸ் (ஓய்வு) அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் தொடர் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அக்குடும்பம் சம்பந்தபட்ட ஆவணங்களை சரி பார்த்த மாவட்ட நிர்வாகம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் நான்கு லட்சத்தை முதற்கட்டமாக ஒதுக்கியுள்ளது. மேலும் ரூபாய் ஆறு லட்சத்தை பிரதமர் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை அக்குடும்பத்தின் மறுவாழ்விற்காகவும் சுதந்திரமாக வாழ்வதற்கும் வழி வகுக்கும்.
இது குறித்த மேலதிக தகவல்களுக்கு தொடர்புக்கு: எம். பி. நிர்மலா (ஐஏஎஸ் ஓய்வு) +91 94440 36701