இளம்வயதிலிருந்தே கொத்தடிமையான சித்ரா!

வெறும் 6000 ரூபாயை திருப்பி கொடுக்க முடியாமல் தனது பெற்றோருடன் தானும் கொத்தடிமையாகப்பட்டார் சித்ரா.
bonded labour
bonded labour
Published on
Updated on
2 min read

வெறும் 6000 ரூபாயை திருப்பி கொடுக்க முடியாமல் தனது பெற்றோருடன் தானும் கொத்தடிமையாகப்பட்டார் சித்ரா. அப்போது அவருக்கு வயது 7. அவரது பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டு அந்த பிஞ்சு வயதில் விவசாய வேலை செய்திருக்கிறார்.

தன் வாழ்க்கையின் 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த அவர் கடந்த மே மாதம், 2018 ஆம் ஆண்டு  திருவண்ணாமலை மாவட்டத்தின் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கத்தினரால் மீட்கப்பட்டார். அவருடன் சேர்த்து 16 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். ஒரு வருடம் கழிந்த நிலையில், இப்போது சித்ராவும் அவரது கணவரும் தங்களது ஒரு வயது மகன் ராஜாவுடன் சந்தோஷமாக வசித்து வருகின்றனர்.

வாழ்க்கையின் தொடக்கத்தை இப்படி  கழித்த நிலையில், சில கசப்பான அனுபவங்களை நினைவுகூர்கிறார் சித்ரா. அவர் கூறியதாவது,

என் குடும்பம் கொத்தடிமையாக்கப்பட்ட அந்நாட்களில் என்னை வருத்தியது இந்த ஒரு விஷயம்தான், எங்களுக்கு  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாங்கள் எங்கள் உறவினர்களை பார்க்கச் செல்வதற்கும், அவர்கள் எங்களை பார்க்க வருவதற்கும் என்றுமே அனுமதியில்லை. எந்த கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாது. ஆனால் இப்போது அப்படி எந்த  நிபந்தனைகளுமின்றி நான் சுதந்திரமாக என்னுடைய உறவுகளை சந்தித்தும், அத்தனை விழாக்களில் கலந்து கொண்டும் சந்தோஷமா இருக்கிறேன்.

சித்ரா அடிமைத்தனத்திலிருந்து இப்போது மீட்கப்பட்டாலும் கூட எப்போதுமே அவருடைய மனதில் அவர்பட்ட காயம் ஆறாமல் நிற்கிறது.

அவருடன் வேலை செய்து கொண்டிருந்த நபருடன் சித்ராவுக்கு திருமணம் நடைபெற்றது. கர்பமாகி தனது முதல் குழந்தையை மகிழ்ச்சியுடன் சுமந்து கொண்டிருக்கும் அந்த வேளையில் அவருக்கு வேலை செய்ய வேண்டிய நிபந்தனை ஏற்பட்டிருக்கிறது. வெட்டப்பட்ட கரும்புகளை கயிற்றால் கட்டி அந்த பெருஞ்சுமையை தலையில் தூக்கிச் சென்று வண்டியில் ஏற்ற வேண்டும். கற்பிணியான அவர் அப்படி செய்யும் போதே அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்துவிட்டது. கரும்பு கட்டை தூக்கி சுமந்ததால்தான்  நான் என்னுடைய முதல் குழந்தையை இழந்தேன் என்கிறார் சித்ரா.

நில உரிமையாளர் அந்த நிலையிலும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பவில்லையாம். சித்ராவின் பலவீனத்தை போக்க அவரே ஏதோ சில மாத்திரைகளையும், மருந்துகளையும் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். 

இரண்டாவது முறை தான் தாயான போதிலும் கூட சித்ராவை மருத்துவமனைக்கு அனுப்பவில்லையாம். தனது மகன் ராஜா பிறந்த ஒரே வாரத்தில் மீண்டும் வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார் நில உரிமையாளர். அங்கு வேலை பார்த்து என்னுடைய தந்தை நடக்கும் திறனை இழந்துவிட்டார். ஒரு நாள் என்னுடைய மாமனாரை நில உரிமையாளர் அடித்து அவமானப்படுத்தியதால் அவரது உயிரை மாய்த்துக்கொள்ளப் பார்த்தார்.

எல்லா வேலையாட்களும் காலை 6 மணிக்கு வேலையை ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிக்க வேண்டும். இடையில் என்னென்ன வேலை இருக்கிறதோ அத்தனையும் செய்து முடிக்க வேண்டும். இப்படி வேலைகளைச் செய்தும் கூட அவரது குடும்பத்திற்கு வாரம் 100 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர்கள் தினமும் குடித்த கஞ்சி வாயையும் வயிற்றையும் முழுதாக என்றைக்குமே நிறைக்கவில்லை.

இப்போது சித்ராவின் குடும்பம் எந்த ஒரு இடையூறுமின்றி அவர்களின் உறவுச் சமூகத்தோடு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

நீண்டகால அடக்குமுறையும், தனிமையும் அவரை கடுமையாக வாட்டினாலும், சுதந்திரத்தை சுவைக்க வேண்டும் என்று நினைத்த அவரத மனவலிமை என்றைக்குமே உடையவில்லை. சித்ரா தனது மகன் ராஜாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்தபடி இருக்கிறார். தனது மகன் பிறந்த ஒரு வருடத்திற்குள் அடிமைத்தனத்திலிருந்து வெளி வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார் சித்ரா.

தனது மகன் நல்ல கல்வியை பெற்று சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பது மட்டுமே சித்ராவின் விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com