இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா இந்த ஆண்டு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்துத்வா தலைவர் நானாஜி தேஷ்முக், இயக்குனர் பூபேன் ஹஸாரிகா உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பாரத ரத்னா விருதுகளைப் பொருத்தவரை இந்தியாவில் கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் இதுவரை பலதுறை சார்ந்த 45 சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களில் லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், வினோபா பாவே, எம் ஜி ராமச்சந்திரன், அம்பேத்கர், ராஜிவ் காந்தி, வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆஸாத், அருணா ஆஸாப் அலி, ஜெயப்ரகாஷ் நாராயண், கோபிநாத் பர்தோலாய், மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட 12 பேருக்கு அவர்கள் மறைந்த பின்னரே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத் தக்கது. இவர்களில் இந்தியக் குடிமகன்கள் அல்லாத நெல்சன் மண்டேலாவுக்கும், கான் அப்துல் கபார் கானுக்கும் அவர்களது சுதந்திர போராட்ட வாழ்க்கைச் சாதனைகளின் அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவித்திருக்கிறது இந்திய அரசு.
இதில் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று 1992 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு மீண்டும் திரும்பப் பெறப்பட்ட விஷயம். இந்திய அரசின் இச்செயலுக்கு பலத்த கண்டனங்கள் அப்போது எழுந்தன. எனினும் சுபாஸ் சந்திர போஸுக்கு மீண்டும் விருது அளிக்கும் எண்ணம் இந்திய அரசுக்கு வராமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.
1954 ஆம் ஆண்டில் இந்த விருது முதன்முறையாக உருவாக்கப்பட்ட போது அமரர்களுக்கு அதாவது மறைந்து விட்ட சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது என்ற விதி இருந்தது. ஆயினும் அந்த விதி அடுத்த ஆண்டே மாற்றப்பட்டு உயிருடன் இல்லாதவர்களுக்கும் கூட பாரத ரத்னா வழங்கும் வழக்கம் வந்தது. அதே போல இந்த விருதை வடிவமைக்கும் போது விருது பெறுபவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அந்தப் பதக்கம் வட்ட வடிவில் வழங்கப்படுமென முதலில் கூறப்பட்ட போதும் பிறகு பதக்கத்தின் வடிவம் அரச இலை வடிவில் மாற்றப்பட்டது. அரச இலைப் பதக்கத்தின் நடுவில் சூரிய உருவம் பதிப்பட்டு அதன் கீழ் பாரத ரத்னா எனும் சொல் தேவநாகிரி எழுத்துருவில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தப் பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்பது இவ்விருது பெறுபவர்களுக்கான விதிகளில் ஒன்று.
இந்திய அரசியல் சாசன விதி 18 (1) ன் படி;
விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது, அவசியம் கருதினால் ‘பாரத ரத்னா விருதைப் பெற்றவர்; எனும் சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைச் சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. முதலாவது சர்ச்சை என்றால் அது 1992 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு விருது வழங்குவதாக அறிவித்து விட்டுப் பிறகு அந்த விருதின் மீதான சட்டச் சிக்கல்களைத் தீர்க்க இயலாமல் நேதாஜிக்கு அளிப்பதாக இருந்த பாரத ரத்னா விருதை 1997 ஆம் ஆண்டில் ரத்து செய்து திரும்பப் பெற்றது இந்திய அரசு.
1998 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருந்த ராஜிவ் காந்தி இங்கே தம் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காகவே அப்போது தான் கூட்டணி வைத்திருந்த கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம் ஜி ராமச்சந்திரனுக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் என்றொரு விமர்சனம் கடுமையாக அப்போது முன் வைக்கப்பட்டது. ஏனெனில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற தலைவர்களான அம்பேத்கர்,சர்தார் வல்லபாய் படேலுக்கு முன்பு எம் ஜி ஆருக்கு அவ்விருது ராஜிவ் காந்தியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து பலர் போர்க்குரல் உயர்த்திய போதும் கூட எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
அதே போல பண்டிட் ரவிஷங்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட போது அவர் லாபி செய்து விருது வாங்க முயற்சிக்கிறார் என்றொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மறைந்த காங்கிரஸ் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்தார். அப்போது, தமிழ்நாட்டு ஓட்டு வங்கியைக் குறிவைத்தே சரியான சந்தர்பத்தில் இப்படி ஒரு பரிந்துரையை இந்திரா காந்தி முன் வைத்திருக்கிறார் என்று விமர்சிக்கப் பட்டது.
இதே விதமான குற்றச்சாட்டு முன்னாள் இந்தியப் பிரதமர் விபி சிங், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியல் சாசனக் கமிட்டி தலைவருமான அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்த போதும், தலித்துகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்தே அவர் அவ்விதமாகப் பரிந்துரைத்தார் என்ற விமர்சனத்திற்கு உள்ளானார்.
அதையடுத்து 2013 ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கும், சி என் ஆர் ராவுக்கும் பாரத ரத்னா வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்து சிலர் கண்டனம் தெரிவித்தனர். சி என் ராவ் விஷயத்தில் அவரைக் காட்டிலும் அவரது துறையில் அதிகம் சாதித்தவர்களான ஹோமி ஜஹாங்கிர் பாபா, விக்ரம் சாராபாய் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் பாரத ரத்னா விருது வழங்காமல் சி என் ஆருக்கு வழங்குவது அரசியல் லாபங்களுக்காகத் தான் என்றும் சச்சி டெண்டுல்கருக்கு வழங்கப்படும் விருதும் கூட அவரை ராஜ்ய சபா எம் பி ஆக்கி மாநிலங்களவையில் அமர வைத்து அழகு பார்த்து ஓட்டு வேட்டை நடத்த நினைக்கும் காங்கிரஸின் ராஜதந்திரம் என்றும் பரவலாக விமரிசனங்கள் எழுந்தன.
பாரத ரத்னா விருது வழங்கும் நடைமுறையானது 1954 ஆம் ஆண்டில் தான் தொடங்கியது. ஆனால், இந்திய விடுதலைக்கு முன்பு வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் கூட பாரத ரத்னா பரிந்துரைக்கப்படுவதைக் காணும் போது இந்த விருதானது உயரிய நோக்குடன் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பும் நபர்களுக்கு எல்லாம் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அந்த விருப்பத்தை ஓட்டு வங்கியாக மாற்ற விரும்பும் ஆளும் தரப்பு குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த பாரதப் பிரதமர்கள் தங்களுக்கு அனுகூலமான நபர்களுக்கு பாரத ரத்னா விருதைப் பரிந்துரைத்து தங்கள் எண்ணங்களை ஈடேற்றிக் கொண்டார்கள். நிஜமாகவே இந்தியாவிற்கு ரத்னம் போல விளங்குபவர்களுக்குத் தான் இந்த விருதுகளை பரிந்துரைப்பதென்றால்... மெளரியப் பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர், மராட்டிய மன்னர் வீர சிவாஜி, நோபல் பரிசு பெற்ற தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர், இந்துக்கள் பெரிதும் விரும்பும் ஆன்மீகத் துறவி விவேகானந்தர் உள்ளிட்டோருக்கு எல்லாம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்க வேண்டுமே? என வரலாற்று ஆசிரியர்கள் இந்த விருது குறித்து இது தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே சர்ச்சையைக் கிளப்பினர். ஆயினும் அரசு அதையெல்லாம் புறம் தள்ளி தொடர்ந்து பாரத ரத்னா விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து பதக்கங்களை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
பாரத ரத்னாவால் விளையும் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், இந்திய புரோட்டாகால் விதிகளின் படி குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர், துணைப்பிரதமர் என நீளும் முன்னுரிமை வரிசையில் இவர்களுக்கு 7 ஆம் இடம் வழங்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் அரசு விழாக்களில் அமர வைக்கப்படத் தகுதி வாய்ந்த மதிக்கத்தக்க நபர்கள் பட்டியலில் இவர்கள் 7 ஆம் இடம் பெறுகிறார்கள். கடைசியாக ஒரு விஷயம்... பாரத ரத்னா விருதில் பணப்பரிசு எதுவும் கிடையாது. பதக்கவும், சான்றிதழும் மட்டுமே வழங்கப்படும்.