வழக்கறிஞர்கள் - போலீஸார் மோதல் ஏற்படுவது ஏன்? இதற்கு என்ன தான் தீர்வு?

வழக்கறிஞர்கள் - போலீஸார் இடையே மோதல் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்தும் அதை தடுக்கும் வழிகள் குறித்தும் சில பயனுள்ள ஆலோசனைகளை உள்ளன.
வழக்கறிஞர்கள் - போலீஸார் மோதல்
வழக்கறிஞர்கள் - போலீஸார் மோதல்


வழக்கறிஞர்கள் - போலீஸார் இடையே மோதல் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்தும் அதை தடுக்கும் வழிகள் குறித்தும் சில பயனுள்ள ஆலோசனைகளை உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ல் போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரம் கோயில் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.சந்துரு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்கு வந்தார்.

அப்போது அவர் மீது ஒரு கும்பல் முட்டை வீசி தாக்குதல் நடத்த, சில வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பதிலுக்கு வழக்கறிஞர்கள் சிலர் சுப்பிரமணியன் சுவாமி மீது புகார் கொடுக்க சென்றபோது போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், 2009 பிப்ரவரி 19-ம் தேதி கலவரமாக மாறியது.

தற்போது இதேபோன்ற சம்பவம் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த 2-ம் தேதியன்று அரங்கேறி உள்ளது. சிறைவாசிகளை அழைத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு வந்த போலீஸ் வாகனத்தின் மீது வழக்கறிஞர் ஒருவரின் வாகனம் மோத, இரு தரப்பினருக்கும் இடையே கலவரமாக மாறிவிட்டது. சென்னையில் நடந்த அதே கலவர காட்சிகள் டெல்லியிலும் நடந்தன. இரண்டு சம்பவத்திலும் நீதிமன்றத்துக்கு வழக்கு நிமித்தமாக வந்த அப்பாவி பொதுமக்களும் கலவரத்தில் பங்கேற்காத வழக்கறிஞர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மோதல் சம்பவத்தைக் கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் சென்னை வழக்கறிஞர்கள் பிப்ரவரி 19-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.

போலீஸ், வழக்கறிஞர்களுக்கிடையே ஏன் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

வழக்கறிஞர்கள் தங்கள் தனிப்பட்ட விசயங்களுக்காக காவல்நிலையங்கள் செல்வதில்லை.

புகார் தாரருக்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்காகவோ வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேநேரம் போலீஸார் அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் உள்ளனர். 

எளிமையான புகார்தாரர்கள் வந்து புகார் கொடுக்கும் சில வேளைகளில், புகாரைப்பெற்றுக் கொண்டு ரசீது (CSR) கூட கொடுக்க மாட்டார்கள்.

வண்டி திருட்டு, சான்றிதழ் காணாமல் போன சில புகார்களில் முதல் தகவலறிக்கை (FIR) போடவே காலதாமதப்படுத்துவார்கள்.

அரசியல் அல்லது பொருளாதார செல்வாக்குள்ளவர்கள் எதிர் மனுதாரராக இருக்கும் வேளைகளில், போலீஸாரின் விசாரணை ஒருசார்பாகவே இருக்கும்.

சில நேரங்களில் சரியான சட்டங்களை மற்றும் அதன்பிரிவுகளைப் போடாமல், செய்த குற்றத்திற்கு அதிகமான அல்லது குறைவான குற்ற பிரிவுகளைப் போடுவார்கள்.

பெரும்பாலும் எளியவர்களையே இம்சிப்பது போலீசாரின் வேலை, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழக்கறிஞர்கள் காவல்நிலையம் வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதில் போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட 100 சதவீத வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் நடந்த கலவரத்தையே இன்னும் யாரும் மறக்கவில்லை. தற்போது டெல்லியில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி கலவரத்துக்கு யார் காரணம் என்பதை ஆராய வேண்டியுள்ளது. போலீஸ் வாகனம் மீது வழக்கறிஞர் ஒருவரின் கார் மோதியது என்றால் அது சாதாரண விசயம். ஆனால் இந்த கலவரத்தில் காயமடைந்த 2 வழக்கறிஞர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நீதித் துறை, வழக்கறிஞர்கள் சங்கம், காவல் துறை இடையே பரஸ்பரம் பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ள சமரச கமிட்டி அமைக்க வேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண முடியும். ஏனெனில் வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதித்துறை அமைப்பு செயல்பட முடியாது. அதேபோல சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு போலீஸார் வசம் உள்ளது. இருதரப்பும் முக்கியம் என்பதால் உடனடியாக இதில் யார் செய்தது சரி, யார் செய்தது தவறு எனக் கூறிவிட முடியாது. நடந்த சம்பவத்தை அலசி ஆராய்ந்து நீதித்துறை தான் முடிவு எடுக்க முடியும்.

அதேநேரத்தில் டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட போலீஸார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உடனடி நடவடிக்கை சென்னை சம்பவத்தில் இல்லை. ஆனால் 2 சம்பவங்களிலும் போலீஸார்தான் முதலில் அத்துமீறியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வரும் வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே காவல் நிலையத்திலேயே பிரச்னை தொடங்கி விடுகிறது. பின்னர் அதே வழக்கு தொடர்பாக நீதிமன்றம் செல்லும் போலீஸாரிடம் வழக்கறிஞர்கள் பிரச்னை செய்கிறார்கள். 

காவல்துறை என்ன செய்ய வேண்டும் ?

புகார் கொடுத்தவுடன் ரசீதைக் கொடுத்துவிடுங்கள்
சரியான விசாரணை செய்து, உடனடியாக எப்ஐஆர் போட்டு, வழக்கை நீதிமன்றத்துக்கு அனுப்பிவிட்டால், உங்கள் மீது குற்றம் சொல்ல வழியில்லை.

சிவில் மற்றும் குடும்ப வழக்குகளை காவல்நிலையத்தில் விசாரிப்பது சரிதான், நீங்கள் நீதிபதி வேலையைச் செய்யும் போது பிரச்னை ஆரம்பிக்கிறது.

காவல்நிலையத்தில் புகாருக்கு தீர்வு காண முயற்சிப்பது தவறில்லை, கடுமையான சூழலிலும் அங்கேயே தீர்வு காண முயல்வது உரசல்களை ஏற்படுத்தும்.

காவல்துறை தீர்வு சொல்லும் துறையல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

வழக்கறிஞர்கள் செய்ய வேண்டியது என்ன ?

வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு சென்று வழக்கு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், போலீஸ் வேலையில் குறுக்கிட்டு உங்கள் கட்சிக்காரருக்கு ஆதரவாக செயல்பட போலீசாரை வற்புறுத்தும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது.

காவல்நிலையத்தில் நியாயம் இல்லையெனில், அவர்களிடம் விவாதிப்பதை தவிர்த்து, மேலதிகாரி அல்லது நீதிமன்றத்தில் தீர்வு காண முடிவு செய்வது நல்லது.

இதை முழுதும் தவிர்க்க வழக்கறிஞர்களால் முடியும், அத்தனை பிரச்னைகளையும் நீதிமன்றத்தில் சொல்லலாம், ஒத்துழைக்காத காவல்துறை மேல் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் துறை ரீதியான விசாரணைக்கு முயற்சிப்பதே சாலச் சிறந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com