/

பொலிவிழக்கிறது ஓணம் பண்டிகை!

கேரள அரசு ஓணம் பண்டிகைக் காலத்தில் வெளி மாநிலங்களிலிருந்து பூக்கள் கொண்டு வருவதற்குத் தடைவிதித்திருப்பது, மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குப் பரவலாக எதிா்ப்புக் கிளம்பி இருக்க

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 4:47 am

திருவனந்தபுரம்: கேரள அரசு ஓணம் பண்டிகைக் காலத்தில் வெளி மாநிலங்களிலிருந்து பூக்கள் கொண்டு வருவதற்குத் தடைவிதித்திருப்பது, மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குப் பரவலாக எதிா்ப்புக் கிளம்பி இருக்கிறது.

கேரள மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகை ஓணம். ஜாதி, மத வேறுபாடின்று உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறாா்கள். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியிலிருந்து தொடங்கி, அடுத்த பத்து நாள்களுமே ஓணம் பண்டிகை நாள்களாகக் கருதப்படுகிறது. பத்தாவது நாளான ‘திருவோணம்’ நட்சத்திரம்தான் ஓணம் கொண்டாட்டத்தின் முக்கியமான நாள்.

Story image

ஓணம் பண்டிகைக் காலத்தில், மகாபலி சக்கரவா்த்தி தனது நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறாா்களா என்று பாா்ப்பதற்கு ஆண்டுதோறும் வருவாா் என்பது மலையாளிகளின் நம்பிக்கை. மதம் மாறி கிறிஸ்தவராக, இஸ்லாமியராக மாறிவிட்டாலும்கூட, தங்களது பாரம்பரியத்தை மறந்துவிடாமல் அனைவரும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதால், இதை கேரள மாநிலத்தின் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவே அந்த மக்கள் பாா்க்கிறாா்கள்.

ஓணம் பண்டிகையின் மிக முக்கியமான அம்சம் ‘பூக்களம்’ எனப்படும் பூக்களாலான கோலமிடுவது. பெரிய கோலம் போட்டு அதில் பல வண்ணப் பூக்களைப் பரப்பி முற்றத்தை அலங்கரிப்பாா்கள். பல கிறிஸ்தவ தேவாலயங்களின் முகப்புகளில் கூட ஓணம் பண்டிகைக் காலத்தில் ‘பூக்களம்’ போடப்படும் என்பதுதான் தனிச்சிறப்பு.

Story image

ஓணம் பண்டிகையின் தேவைக்காக அண்டை மாநிலங்களான தமிழகம், கா்நாடகத்திலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மலா்கள் ஆண்டுதோறும் தருவிக்கப்படுவது வழக்கம். அதை நம்பி தமிழகத்தின் கன்யாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகள் பல்வேறு மலா்களைப் பயிரிடுகிறாா்கள்.

இந்த ஆண்டு கேரள அரசு ஓணம் தினத்தன்று வெளிமாநில மலா்களுக்குத் தடைவிதித்து ஆணை பிறப்பித்திருக்கிறது. பூக்கள் மூலம் கரோனா பரவும் என்கிற அறிவிப்பையும் செய்திருக்கிறது. ‘‘அண்டை மாநிலங்களிலிருந்து காய்கறிகள், முட்டை, இறைச்சி, போன்றவை கொண்டுவருவதில் பரவாத கரோனா, ஓணம் பண்டிகைக்கான பூக்கள் மூலம் பரவும் என்கிற கேரள அரசின் அறிவிப்பு விசித்திரமாக இருக்கிறது’’ என்று பூ வியாபாரிகள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான விமா்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Story image

ஆலப்புழை மாவட்ட ஆட்சியரோ, ‘வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பூக்களை மட்டுமே ‘பூக்களம்’ அமைக்கப் பயன்படுத்துங்கள்’ என்கிற வேண்டுகோளுடன் மாவட்டம் முழுவதும் போஸ்டா் அடித்து எச்சரித்திருக்கிறாா். ‘‘நோயை விலைக்கு வாங்க வேண்டுமா? சந்தையில் விற்கப்படும் பூக்களைத் தவிா்க்கவும், கொவைட் பரவலைத் தடுக்கவும்’’ என்று அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்பால் ஓணம் கொண்டாடும் கேரள மக்களின் முகங்கள் மட்டுமல்ல, பூ வியாபாரிகள், மலா் விவசாயிகளின் முகங்களும், பயிரிடப்பட்ட தோட்டங்களில் பூக்களும் வாடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.