14, 18, 22 காரட் அளவில் மட்டும்தான் தங்க விற்பனையா? கொதிக்கும் நகை வணிகர்கள்

இந்திய சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சடங்குகளிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கம் இல்லாத இந்திய திருமணங்கள் சாத்தியமற்றது.
14, 18, 22 காரட் அளவில் மட்டும்தான் தங்க விற்பனையா? கொதிக்கும் நகை வணிகர்கள்
14, 18, 22 காரட் அளவில் மட்டும்தான் தங்க விற்பனையா? கொதிக்கும் நகை வணிகர்கள்
Published on
Updated on
3 min read

இந்திய வரலாற்றின் தொடக்கமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின் ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் நாணயம் இந்தியாவில் உருவானதாக கூறப்படுகிறது. அதிலும் குஷானர்கள் ஆட்சிக் காலத்தில் தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது. 

இந்தியாவில் தங்கம் தெய்வீகத் தன்மைக் கொண்டதாக பார்க்கப்படுகிறது. இஷ்ட தெய்வங்களுக்கு காணிக்கையாக தங்க நகைகளை வழங்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. இந்திய சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துச் சடங்குகளிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கம் இல்லாத இந்திய திருமணங்கள் சாத்தியமற்றது.

இந்த நிலையில் 14, 18, 22 காரட் தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டுமென மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகள் பாரம்பரிய நகை வியாபாரிகள் மற்றும் சிறு, குறு நகைக் கடை வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், இந்திய தர நிர்ணயம் அமைப்பு (பிஐஎஸ்) சட்டம் 2017-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தில் 2020-ஆம் ஆண்டு சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. 

இதன்படி, பிஐஎஸ் தங்க நகைகளை, அங்கீகரிக்கப்பட்ட தங்க நகைக்கடைகள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். அதுவும், 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இந்த காரட் தங்க நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் சான்றிதழ் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த புதிய விதிகளினால், நகைக்கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதுபோன்ற தடை தேவையற்றது. 3 வகையான காரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என இந்தியாவை தவிர வேறு எந்த  நாட்டிலும் தடை விதிக்கவில்லை. 

இந்தியா முழுவதும் உள்ள தங்க நகை வியாபாரிகள், 15, 16, 17, 19, 20, 21 மற்றும் 24 காரட் தங்கத்தை விற்பனை செய்கின்றனர். இந்த புதிய சட்டத்தால், இவ்வகை தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கரோனா பொதுமுடக்கத்தால், இந்த வகை காரட் தங்கம் தேங்கியுள்ளது. எனவே, இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால், இந்த நகைகளை எல்லாம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல, எந்த வகையான நகைகளை வாங்க வேண்டும் என்பதை நுகர்வோர் தான் முடிவு செய்ய வேண்டும்.  தற்போதுள்ள விதிகளினால், குறிப்பிட்ட காரட் தங்கத்தை மட்டுமே வாங்க  பொதுமக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். பல வகையான காரட் தங்கத்தை பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். இந்த பழைய தங்கத்தை விற்பனை செய்ய அவர்கள் வரும்போது, அதை வாங்கும் நகைக் கடைக்காரரால், மறு விற்பனை செய்ய முடியாது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த புதிய விதிகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தங்க நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் உதய்குமார் கூறியதாவது: நான் 4-ஆவது தலைமுறையாக நகை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். இந்தியாவில் நகை வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் இதுவரை இருந்து வரும் சுமூகமான உறவை, மத்திய அரசின் புதிய விதிகள் பாதிக்கும்.  

கரோனாவால் தங்க நகை வியாபாரிகளுக்குக் கடந்த 3 ஆண்டுகளாகவே வியாபாரம் இல்லை. இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற புதிய விதிகள் வியாபாரிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும். அனைத்து நகைகளையும் ஹால்மார்க்கிங் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்த தரத்திலான நகைகளைத் தான் விற்பனை செய்ய வேண்டும், இத்தனை கிராம் எடையுள்ள நகைகளைத் தான் விற்பனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சாத்தியமற்றது.

ஹால்மார்க்கிங் தங்கத்தின் தரத்தை உயர்த்தும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அத்தங்க நகைகளை எங்கே வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். ஆனால் ஹால்மார்க் மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை. இந்தியாவில் 300 மாவட்டங்களுக்கு மேல் ஹால்மார்க்கிங் மையங்கள் இல்லை. எனவே மத்திய அரசு இதுபோன்ற விதிகளை உருவாக்கும் போது அதில் நகை வியாபாரிகளுடன் கலந்து பேச வேண்டும். அப்போது தான் நடைமுறைக்கு சாத்தியமான விதிகளை கொண்டு வர முடியும் என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி.ஜே.ஸ்ரீகணேஷ் கூறியதாவது : மத்திய அரசின் புதிய விதியால், இந்தியா முழுவதும் உள்ள 15, 16, 17, 19, 20, 21 மற்றும் 24 காரட் தங்க நகை விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவர்.

அதே நேரம் தமிழகத்தில், 20 மற்றும் 21 காரட் தங்கத்தில்தான் மாங்கல்யம் செய்வார்கள். இதற்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மேலும் விதிகளின்படி தங்கத்தின் காரட்டை கூட்டி குறைத்து விற்பனை செய்தால், விற்பனையாளரும், நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். 

ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் 14 கோடி தங்க பொருள்களுக்கு மட்டுமே  சான்றளிக்கப்படுகிறது. ஆனால் இருப்பு 1000 கோடி பொருள்களுக்கு மேல் உள்ளது. தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஹால்மார்க் தர நிர்ணய மையங்கள் இல்லை. இதனை அமைப்பது அத்தனை சுலபமல்ல. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த வழக்கு தொடர்ந்த பின் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேலும் சில காரட் தங்க நகைகளை விற்பனை செய்து கொள்ள விலக்களிப்பட்டுள்ளது என்றார். 

1921-ஆம் ஆண்டு முதல் ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை...

1921 - ரூ.21
1961- ரூ.100
1980- ரூ.1000
2000-ரூ.3300
2003-ரூ.4200
2008-ரூ.8000
2009-ரூ.12,000
2010-ரூ.14,000
2011-ரூ.17,000
2014-ரூ.25,600
2016-ரூ.26,600
2017-ரூ.23,216
2018-ரூ.24,464
2019-ரூ.29,928
2020-ரூ.43,324
2021 (ஜனவரி) - ரூ.38,848
2021 (ஜூன்) -ரூ.35,520

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com