முக்கியத்துவம் இழந்த தென் மாவட்ட அதிமுக, திமுக நிர்வாகிகள்!

முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லை..
முக்கியத்துவம் இழந்த தென் மாவட்ட அதிமுக, திமுக நிர்வாகிகள்!
முக்கியத்துவம் இழந்த தென் மாவட்ட அதிமுக, திமுக நிர்வாகிகள்!


முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லை என அந்தந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக அரசியல் களத்தைப் பொருத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளும் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக, கட்சி தொடங்கினாலும், மாநாடு நடத்தினாலும் தென் மாவட்டத் தலைநகரங்களான திருச்சி, மதுரை அல்லது திருநெல்வேலி போன்ற இடங்களைத் தேர்வு செய்வதை அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டிருந்தன.

திருநெல்வேலியில் 1998-இல் நடைபெற்ற அதிமுக வெள்ளி விழா மாநாடு, திருச்சியில் 2006}இல் நடைபெற்ற திமுக மாநில மாநாடு ஆகியவை, அந்தந்தக் கட்சிகளுக்கு முறையே மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தன. 

அதேபோல், விருதுநகரில் 2004-இல் நடைபெற்ற திமுக மாநாடு, அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது. மதுரையில் 2005-இல் தொடங்கப்பட்ட தேமுதிக, அடுத்த 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சி அந்துஸ்து பெறும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. இதுபோன்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் வெற்றிகளுக்கு தென் மாவட்ட தலைநகரங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளன.  

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததோடு, பல்வேறு வழக்குகள் காரணமாக சிறை சென்று சோர்வடைந்திருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1998-இல் திருநெல்வேலியில் அதிமுக மாநாட்டை நடத்தினார். அதன்பின்னர் 4 மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தன் அரசியல் பயணம் முடிந்துவிடவில்லை என்பதை நிரூபித்தார்.

முக்கியத்துவம் இழந்த தென் மாவட்ட நிர்வாகிகள்: இதை உணர்ந்தே, திமுக மட்டுமன்றி அதிமுகவிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2-ஆம் கட்டத் தலைவர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர்கள் மாதவன், தமிழ்க்குடிமகன், தங்கபாண்டியன், தா.கிருட்டிணன், பொன்.முத்துராமலிங்கம், கேகேஎஸ்எஸ்ஆர், காளிமுத்து, திருநாவுக்கரசர், ராஜ கண்ணப்பன், ஐ.பெரியசாமி, மு.க.அழகிரி (மதுரையில் வசித்ததால்) உள்ளிட்டோருக்கும், கருப்பசாமி பாண்டியன், தூத்துக்குடி பெரியசாமி போன்ற முன்னணி நிர்வாகிகளுக்கும் திமுக மற்றும் அதிமுகவில் மாநில அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த வரிசையில், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கி, தென் மாவட்டங்களுக்கு ஜெயலலிதா பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, திமுக மற்றும் அதிமுகவில், தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. திமுகவில் முன்னாள் அஸஸஸஸஸஸஸஸஸஸஸஸமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மாநில துணைப் பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்ட போதிலும்,அதற்கு ஏற்ப முக்கியத்துவம் அளிக்கப்படாததால் திண்டுக்கல் மாவட்டத்தைக் கடந்து தென் மாவட்டங்களில் அவரால் கட்சியின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியவில்லை. 

அதேபோல், ஆளும்கட்சியான அதிமுகவிலும், 2 ஆம் கட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் காலத்தில் இருந்த முக்கியத்துவம் தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு கிடைக்கவில்லை என்பது தொண்டர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாத மாவட்டங்கள்: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், கடந்த 2016 தேர்தலில் திமுகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மட்டும் முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், திமுக மற்றும் காங்கிரஸ் தலா 3 இடங்களில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றன. இதனால் அதிமுகவுக்கு சட்டப்பேரவை உறுப்பினரே இல்லாத மாவட்டம் என்ற நிலை கன்னியாகுமரியில் ஏற்பட்டது. இது, அந்த இரு மாவட்டங்களிலும், திமுக மற்றும் அதிமுக தொண்டர்களை உற்சாகம் இழக்க வைத்துள்ளது. 

அமைச்சர்கள் இல்லாத 3 மாவட்டங்கள்: கடந்த 2016 தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றன. இதனால், அந்த மாவட்டத்திலிருந்து அமைச்சர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு பறிபோனது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் மணிகண்டன், அமைச்சராகப் பதவி வகித்த போதிலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்கட்சி பிரச்னையால் பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னர், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பின், அதுவரை திருநெல்வேலி மாவட்டத்துக்கான அமைச்சராக இருந்த ராஜலட்சுமி தென்காசி மாவட்டத்துக்கு சொந்தக்காரரானார். இதனால் திருநெல்வேலியும் அமைச்சர் பதவி இல்லாத மாவட்டப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. 

தென் மாவட்டங்களில் 73 பேரவைத் தொகுதிகள்: தென் தமிழகத்திலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் மொத்தம் 73 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 37 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. திமுகவிடம் 30 தொகுதிகளும், காங்கிரஸிடம் 5 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம் ஒரு தொகுதியும் உள்ளன. 

இந்த 73 தொகுதிகளிலும் அதிமுக, திமுக கட்சிகள் நீங்கலாக, பிற கட்சிகள் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. கூட்டணி பலத்துடன் களமிறங்கினாலும், திராவிடக் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிடும் தேசியக் கட்சிகளாக இருந்தாலும் சரி, ஜாதிக் கட்சிகளாக  இருந்தாலும் சரி, தென் மாவட்டங்களில் எளிதாக வெற்றி பெற முடியாது என்பதே நிதர்சனம். தென் மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற கட்சிகள் நன்றாக உணர்ந்துள்ளன. 

2021 பேரவைத் தேர்தலில் வட மாவட்டங்களில் பலமுனைப் போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் மும்முனைப் போட்டிகளில் வெற்றி பெறுவது திராவிடக் கட்சிகளுக்கு எளிது. தமிழக அரசியல் களத்தில் திராவிடக் கட்சிகளுக்கு கடந்த அரை நூற்றாண்டு காலம் பக்க பலமாக இருந்து வந்த தென் மாவட்டங்களின் முக்கியத்துவம், கடந்த சில ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருப்பது, அதிமுக மற்றும் திமுகவினரிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் தென் மாவட்டங்களில் மாநாடுகள் நடத்தி கட்சி நிர்வாகிகளை அதிமுக மற்றும் திமுக தலைமை உற்சாகப்படுத்தி வந்தது. அந்த நிலை மாறி, வாரிசு அரசியல், பணபலம் இருந்தால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. சில தொகுதிகள் தங்களுக்குச் சொந்தம் என்பதுபோல, கட்சித் தலைமை வேட்பாளராக அறிவிக்கும் முன்னதாகவே, சிலர் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இதனால், கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டனர்.  இந்த மாற்றங்கள் காரணமாக, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு பக்க பலமாக இருந்து வந்த தென் மாவட்ட மக்களின் முடிவும் மாறுபடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் மாவட்ட மக்களையும், தொண்டர்களையும் திராவிடக் கட்சிகளின் தலைமைகள் மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே தேர்தல் களத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com