எரியும் இலங்கை: யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு; நேரடி ரிப்போர்ட்- 25

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
யாழ்ப்பாணம் பொது நூலகம்
யாழ்ப்பாணம் பொது நூலகம்

கடந்த 1981 மே 31 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்னையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே31 மற்றும் ஜுன் 1 ஆம் தேதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இந்த வன்முறைகளின்போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறை நடந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்க, சிறில் மாத்தியூ உள்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

ஹிட்லர் கூட செய்யாத கொடூர உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்கள் மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அடைந்து கொண்டிருந்தபோது 1981 ஜுன் 1 இல் பகலில் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம்.செல்லப்பா என்னும் ஆர்வலர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது.

இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பாவும் வேறு சிலரும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் மருத்துவமனை வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.

1936-க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம் தேதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் அரச சிங்கள காவல்துறையினரின் உதவியோடு திட்டமிட்ட சதியாக இடம்பெற்றது.

இது 20-ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்க உள்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாயிற்று.

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜுன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400-க்கும் அதிகமான காவல்துறையினர் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிக் காவல்துறை மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) கட்சியினர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது அங்கு காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகினர். துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர்கள் யார் எனக் கண்டுபிடிக்கப்படவில்லை. புஞ்சிபண்டா, கனகசுந்தரம் ஆகிய இரு காவல்துறையினர் உயிரிழந்தனர். இவர்களில் கனகசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிகழ்வை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். அருகில் இருந்த வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் தாக்கப்பட்டனர். தவிகூ கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

அன்றிரவே (மே 31) யாழ் நகரின் பிரபலமான பல வணிக நிறுவனங்கள், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேசுவரனின் இல்லம், பழைய சந்தைக் கட்டடம், மருந்துக் கடைகள் தீயிடப்பட்டன.

யாழ்ப்பாண நகரில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள சுன்னாகம் சந்தையிலும் தாக்குதல் நடத்தப்பட்டு சந்தை சேதமாக்கப்பட்டது. சுன்னாகம் சந்தையில் இருந்த யாழ் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், 'கூல் பார்' என்ற கடை உட்பட ஏழு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. நெல்லியடி சந்தையும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. 15 மைல் தொலைவில் உள்ள காங்கேசன்துறையில் கடைகள் தரைமட்டமாக்கப்பட்டன. பொதுமக்கள் ஒரு வாரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

அதிகாலை 1 மணியளவில் வன்முறைகள் அடங்கியிருந்தன. அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த யோகேந்திரா துரைசுவாமி இராணுவத்தினருடனும், அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவுடனும் தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துச் சொன்னார். அவர் இராணுவ பிரிகேடியர் வீரதுங்கவை உடனடியாக யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.

ஜுன் 1 1981, திங்கள்கிழமை காலை யாழ்ப்பாண நகரில் இராணுவத்தினர் காவலில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கா. பொ. ரத்தினம், மு. சிவசிதம்பரம் ஆகியோர் காலையில் அழிவுகளை வந்து பார்வையிட்டனர். கொழும்பில் இருந்து காவல்துறைத் தலைவர் அனா செனிவிரத்தினா, அமைச்சர்கள் காமினி திசாநாயக்க, பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் உள்படப் பல அதிகாரிகள் யாழ்நகர் வந்தனர். அன்று முழுவதும் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

திங்கள்கிழமை இரவு 09.20 மணியளவில் யாழ் நகரில் இருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கருகில் இருந்த கடைகள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டன. கொழும்பிற்கு வெளியே இருந்து வெளியிடப்பட்ட ஒரேயொரு தினசரிப் பத்திரிகை ஈழநாடு ஆகும். பத்திரிகை முகாமையாளர் ப. சிவானந்தன், உதவியாளர் சச்சிதானந்தன் ஆகியோர் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாயினர்.

அன்றிரவு 10 மணியளவில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தினுள் நுழைந்த தென்னிலங்கை வன்முறைக் கும்பல் ஒன்று அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு நூலகத்தை சேதப்படுத்தி கட்டடத்திற்குத் தீயிட்டனர். யாழ் காவல் நிலையம் நூலகத்திற்கு 700 அடி தொலைவில் அமைந்திருந்தது.

நூலகம் எரிவதாக அன்றிரவு 10:15 மணிக்கு தகவல் அறிந்த அன்றைய மாநகர ஆணையாளர் சி. வி. கே.சிவஞானம் மாநகர தீயணைப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார். தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டரங்கில் தங்கியிருந்த காவல்துறையினர் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.

செவ்வாய் ஜுன் 2, 1981இல் இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்து, யாழ் நகரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி ஜுன் 4 இல் அவசரகால நிலைமையின் கீழ் இடம்பெற்றது. ஜுன் 10 அன்று அவசரகால நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

சீருடைகளில் வந்தோரால் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்த வேளையில், இரண்டு அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர், அரச உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக நான்சி மறே என்ற ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்குச் சொந்தமான "டெய்லி நியூசு" பத்திரிகை 1981 நிகழ்வை "அன்றைய அரசினால் விடுவிக்கப்பட்ட குண்டர்களால்" இவை நடத்தப்பட்டதாக தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்தது.

1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போன அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண.டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழக இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த  “தி ஜாஃப்னா பப்ளிக் லைப்ரரி ரைசஸ் ஃப்ரம் இட்ஸ் ஆஷஸ்” (The Jaffna Public Library rises from its ashes) என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

1982இல் யாழ் நூலகத்திற்க்கு தமிழகத்தில் நாங்கள் சேகரித்த நூல்களை நெடுமாறன் தலைமையில் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் வழங்கப்பட்டது. மயிலாப்பூர் கற்பகவிடுதி அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர்க.ள் இராசராம், குன்றக்குடி அடிகளார், சிபிஐ மாநில செயலாளர் ப.மாணிக்கம் எம்.எல்.சி என பலர் பங்கேற்றனர். யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் அவருடைய யாழ் நொருக்கபட்ட நிலையில் அவருக்கு வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்களை அவருடைய துணைவியர் படு கொலை  செய்யப்பட்ட யாழ் மேயர் சரோஜா யோகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

பின் அவர் இதை எடுத்துக் கொண்டு இராமேஸ்வரம் ரயில் மூலம் சென்று அங்கிருந்து தலை மன்னார் சென்றார்.

நான் உடன் சென்று வழியனுப்பி வைத்தேன். பின்பு 1983 கலவரம் நடந்தது. கருப்பு ஜீலை என….

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

இதன் அருகே இந்திய உதவியில் சமீபத்தில் கட்டப்பட்ட யாழ் கலாசாரமையம் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com