ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

சித்திரைத் திருவிழாவில் பூ அலங்காரம் செய்ய சொந்த ஊர் வந்த அமெரிக்கவாழ் மதுரைக்காரர்!

சித்திரைத் திருவிழாவில் பூ அலங்காரம் செய்ய சொந்த ஊர் வந்த அமெரிக்கவாழ் மதுரைக்காரரைப் பற்றி...

News image

வைகையாற்றில் கள்ளழகர்... - படம்: பிடிஐ.

Updated On :3 மே 2026, 8:23 am

சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி சொக்கநாதருக்காகவும் கள்ளழகருக்காகவும் மலர் அலங்காரம் செய்ய அமெரிக்காவில் இருந்து மதுரை வந்துள்ளார் பூக்கடை ராமச்சந்திரன்.

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை மலர் வணிக வளாக சில்லறை பூ வியாபாரிகள் சங்கத்தலைவராக இருப்பவர் ராமச்சந்திரன். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர் அலங்காரம் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் வந்து இறங்கக்கூடிய மண்டகப் படிகளில் மலர் அலங்காரம் செய்து வருகிறார்.

வைகையாற்றில் கள்ளழகர்...

வைகையாற்றில் கள்ளழகர்...

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகன் வீட்டில் கிரீன் கார்டு விசா பெற்று வசித்து வருகிறார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் போது மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனுக்காகவும் கள்ளழகருக்காவும் மலர் அலங்காரப் பணிகளை விடாமல் மேற்கொண்டு வருகிறார்.

வீரராகப் பெருமாள்.

வீரராகப் பெருமாள்.

நிகழாண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப். 21 ஆம் தேதியும், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தளும் வைபவம் மே 1 ஆம் தேதியும் கோலகலமாக நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த ராமச்சந்திரன் அழகர் கோயில் செயல் அலுவலர் கேட்டுக் கொண்டதன் பேரில் தேனூர் மண்டபத்தில் நடைபெறும் கொக்குக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வுக்கான தண்ணீர் தொட்டியை மலர்களால் அலங்காரம் செய்து அசத்தினார்.

இதுகுறித்து பூக்கடை ராமச்சந்திரன் கூறுகையில், “கடந்த 55 ஆண்டுகளாக பூ வியாபாரம் மேற்கொண்டு வருகிறேன். தற்போது மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் சங்கத்திற்கு தலைவராக உள்ளேன்.

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மல்லிதான். மதுரையின் பெருமையான மல்லிகைப் பூவின் அருமையை உலகம் எங்கும் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழாவின் போது கொடியேற்றம், திருத்தேர்கள், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் மண்டகப்படிகள், கள்ளழகரின் திருத்தேர் ஆகியவற்றுக்கு மலர் அலங்காரம் செய்து வருகிறேன்.

Story image

இந்தாண்டு அழகர் கோயில் செயல் அலுவலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கூடுதலாக தேனூர் மண்டபத்தில் கொக்குக்கு மோட்சம் கொடுக்கும் தண்ணீர் தொட்டியை மலர் அலங்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் மிகச் சிறப்பாக செய்துள்ளேன்” என்று பெருமையோடு கூறுகிறார் ராமச்சந்திரன்.

மதுரை மல்லிகை, செவ்வந்தி, மரிக்கொழுந்து, ரோஜா, தாமரை என அனைத்து வகை பூக்களையும் பயன்படுத்தி நேர்த்தியாக அலங்காரம் செய்யும் ராமச்சந்திரன், கொடியேற்றத்திற்கு அரை டன், தேர்கள் அலங்காரத்திற்கு ஒரு டன், கள்ளழகர் எழுந்தருளும் வைகை மண்டகப் பணிகளுக்கு சுமார் ஒரு டன், தேனூர் மண்டகப்படியில் 100 கிலோ வரையிலான பூக்களை பயன்படுத்துவதாக கூறுகிறார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “அலங்காரங்கள் மேற்கொள்வதைத் தெய்வத்துக்கு செய்யும் பணியாக சந்தோசத்துடன் மேற்கொள்கிறேன். தற்போது நான் அமெரிக்காவில் வசித்து வந்தாலும்கூட, ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவிற்கு தவறாமல் வந்து விடுகிறேன்.

வைகையாற்றில் கள்ளழகர்.

வைகையாற்றில் கள்ளழகர்.

அன்னை மீனாட்சிக்கும் அழகர் பெருமானுக்கும் நான் ஆற்றுகின்ற கடமை. தற்போது நடைபெறும் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக என்னால் வர இயலுமா? என்று மிகப்பெரும் தடங்கல்கள் இருந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி இங்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தெய்வத்தின் அனுக்கிரகம்தான்.

கள்ளழகர் திருவிழா முடித்து மீண்டும் அழகர் கோயில் திரும்பும் போது அதற்கு தேவையான அனைத்து மலர் அலங்காரங்களும் திருஷ்டி சுற்றுவதற்கு தேவையான பூசணிக்காய்களும் கொண்டு சென்று இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்வதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் நான் வசிக்கின்ற பகுதியில் உள்ள இந்து கோயில்களிலும் தேவையான மலர் அலங்காரப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

கடந்தாண்டு திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற குடமுழுக்கில் மலர் அலங்காரம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதலில் இரண்டு நிலைகளுக்கு மட்டுமே அழகர்கோயில் செயல் அலுவலர் சூரிய நாராயணன் அனுமதி கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு எனது பணியை பார்த்து 14 நிலைகளுக்கும் நானே மலர் அலங்காரம் செய்யும் வாய்ப்பு வழங்கினர்.

முதல் படை வீடும் (திருப்பரங்குன்றம்) ஆறாம் படை வீடும் (பழமுதிர்சோலை) மதுரையில்தான் உள்ளது. ஆகையால் திருப்பரங்குன்றம் குடமுழுக்கில் ஆறாம் படை வீட்டின் முக்கிய அம்சமான நாவல் பழத்தை கொண்டு, சிறப்பு அலங்காரத்தை செய்து இருந்தது அனைவரின் பாராட்டை பெற்றது” என மகிழ்ச்சியோடு கூறுகிறார் பூக்கடை ராமச்சந்திரன்.

Summary

Pookkadai Ramachandran has traveled from the United States to Madurai to create floral decorations for Meenakshi and Chokkanathar, as well as for Kallazhagar, during the Chithirai Festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.