யாராக இருந்தால் என்ன?

விதிமுறை மீறல்களுக்கு நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு, மும்பை கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓர் உதாரணம். மும்பையின் விலையுயர்ந்த பகுதியான வொர்லியில், கேம்ப கோலா குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம்.
Updated on
2 min read

விதிமுறை மீறல்களுக்கு நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு, மும்பை கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓர் உதாரணம். மும்பையின் விலையுயர்ந்த பகுதியான வொர்லியில், கேம்ப கோலா குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம். அந்த நிறுவனம், அனுமதி பெற்ற வரைபடத்தில் பல மாறுதல்களைச் செய்ய முற்பட்டது. அனுமதி இல்லாமல் கட்டப்படும் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி 1984 நவம்பர் மாதம் பிருஹன் மும்பை மாநகராட்சி தடைவிதித்து நோட்டீஸ் அனுப்பியது.

கட்டுமானப் பணிகள் நின்றுவிட்டிருந்த நிலையில், 1986-இல் விதிமுறை மீறல்களை அனுமதிக்க அந்தக் கட்டுமான நிறுவனம் 6.6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தியது. அவர்கள் செலுத்திய அபராதத் தொகை போதாது என்று கருதிய மாநகராட்சி மேலும் ரூ. 4.6 லட்சம் கட்டும்படி நோட்டீஸýம், அந்தத் தொகையைக் கட்டும்வரை கட்டுமானப் பணியை நிறுத்தும்படி தடையும் விதித்தது.

கட்டுமான நிறுவனம் கூடுதல் அபராதத்தையும் கட்டவில்லை. கட்டுமானப் பணியையும் நிறுத்தவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்த தடையைப் பற்றிக் கவலையும் படவில்லை. 1990-ஆம் ஆண்டுவரை எந்தவித இடையூறும் இல்லாமல் அந்தக் கட்டுமான நிறுவனம் 35 அனுமதி இல்லாத மாடிகளுடன் ஆறு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி முடித்திருந்தது.

வேடிக்கை என்னவென்றால், அத்தனை குடியிருப்புகளும் விற்பனை ஆகிவிட்டன. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வாங்கினர். விதிமுறை மீறலுடன் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கூடுதல் மாடிகளில் இருந்த குடியிருப்புகள் சலுகை விலையில் விற்கப்பட்டன. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பேராசை பிடித்து அந்தக் குடியிருப்புகளை வாங்கியவர்கள்தான் இப்போது எங்கள் குடியிருப்புகளை இடிக்கிறார்களே என்று ஓலமிடுகிறார்கள். இவையெல்லாம் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள குடியிருப்புகள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

1987-இல் குடியேறி அடுத்த 12 ஆண்டுகள், அதாவது 1999 வரை முறையான குடிநீர் இணைப்பு இல்லாமல்தான் இவர்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். குடிநீர் அளிக்க மறுப்பது அடிப்படை வசதி மறுப்பு என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான் இவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, முதலில் ஐந்து மாதமும், பிறகு அக்டோபர் மாதம் வரையிலும், அதற்கு மேலும் நவம்பர் வரை ஒரு மாதமும் விதிமுறைமீறல் குடியிருப்பில் இருப்பவர்கள் அங்கிருந்து குடிபெயர உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது.

மாநகராட்சி இவர்களுக்கு 2002-லேயே காலி செய்ய தாக்கீது அளித்து விட்டிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் நாங்கள் குடியிருப்புகளைக் காலி செய்து தந்துவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றத்திடம் இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உறுதிமொழியும் அளித்திருந்தார்கள்.

கடந்த எட்டு மாதங்களில், தங்களது அரசியல் செல்வாக்கையும், பண பலத்தையும் பயன்படுத்தியதுடன், மாநகராட்சி அதிகாரிகளும் குடியிருப்பு கட்டுமான நிறுவனமும் தங்களை ஏமாற்றி விட்டதுபோல ஒரு மாயையை ஊடகங்களில் உருவாக்க அவர்களால் முடிந்தது. "கேம்ப கோலா குடியிருப்புவாசிகளைக் காப்பாற்றுங்கள்' என்று இவர்கள் இயக்கமே நடத்த முற்பட்டனர். இப்போது உச்சநீதிமன்றத்தில் தேர்ந்த வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி, பரிதாபம் தேடிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

தெரிந்தே விதிமுறை மீறல்களுடன் கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துணைபோகின்றனர். குடியிருப்புகளில் அப்பாவிகள் குடியேறிவிட்டால், அவர்கள் மீதான பரிதாபத்தில் நீதிமன்றங்களும் அதை ஏற்றுக் கொள்கின்றன. சென்னையையே எடுத்துக் கொள்வோமே, 147 வணிக வளாகங்கள் உள்பட, ஏறத்தாழ 2 லட்சம் கட்டடங்கள் அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ளன.

இந்த விதிமுறை மீறல்களுக்குக் காரணமான கட்டுமான நிறுவனமும் தண்டிக்கப்படுவதில்லை. விதிமுறை மீறல்களைக் கண்காணிக்காமல் இருந்த அரசு அலுவலர்களும் தண்டிக்கப்படுவதில்லை. அரசேகூட இதற்குத் துணை நின்று விதிமுறை மீறல்களை ஒழுங்குபடுத்த சட்டம் போட்டு உதவுகிறது.

விதிமீறல் செய்தவர்கள் யாராக இருந்தால் என்ன? இடித்துத்தள்ள உத்தரவிட்டால்தானே இனியாவது விதிமீறல்கள் இல்லாமல் இருக்கும். இந்த அக்கறை அரசுக்குத்தான் இல்லை என்றால் நீதித்துறைக்கும் இல்லையே ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com