காங்கிரஸூடன் கைகோத்துக் கொள்ள மனமில்லாமலும், பாரதிய ஜனதாக் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ள இயலாமலும் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளின் ஆரம்பமாக தில்லியில் மதவாதத்திற்கு எதிரான மாநாட்டைக் கூட்டின. 14 அரசியல் கட்சிகள் பங்கு பெற்ற இந்த மாநாட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி கலந்துகொண்டதுதான் வியப்பை ஏற்படுத்தியதே தவிர, ஏனைய கட்சிகளின் பங்கேற்பு ஆச்சரியப்படுத்தவில்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பதும், அந்தக் கூட்டணியின் மையப்புள்ளியாக இடதுசாரிகள் இருந்து வருவது என்பதும் கடந்த நாற்பது ஆண்டுகளாகவே தொடர்கிறது. காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற அடிப்படையில்தான் 1977-இல் அமைந்த ஜனதாக் கட்சி ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு நல்கினர். 1989-இல் மீண்டும் காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற அடிப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகளும், பாரதிய ஜனதாக் கட்சியும் வி.பி.சிங்கின் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளிக்க முற்பட்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பாரதிய ஜனதாவுக்கு எதிராக, மதச்சார்பின்மை என்கிற அடிப்படையில் 1996-இல் காங்கிரஸூம் இடதுசாரிகளும் ஆதரவு அளித்ததால் தேவகௌடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது.
இப்போது காங்கிரஸூக்கும், பாரதிய ஜனதாவுக்கும் மாற்றாக மூன்றாவது அணி அமைப்பதில் இடதுசாரிக் கட்சிகள் முனைப்புக் காட்டுகின்றன. காங்கிரûஸயும் பாஜகவையும் மாறி, மாறி ஏதாவது ஒரு கட்டத்தில் ஆதரித்தவைகளாகவே இருந்திருக்கின்றன என்பதால் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இருந்த காங்கிரஸ் எதிர்ப்பும் சரி, தொண்ணூறுகளிலிருந்து காணப்படும் பாஜக எதிர்ப்பும் சரி, இடதுசாரிகளால் கூட்டப்பட்ட மாநாட்டில் பங்குபெற்ற கட்சிகளில் பெரும்பான்மையானவற்றிற்கு பொருந்துமா என்பது சந்தேகம்தான்.
வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கோ, பாஜகவுக்கோ தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றே வைத்துக் கொண்டாலும், இடதுசாரிகள் அமைக்க விரும்பும் மூன்றாவது அணிக்கு மட்டும் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடவா போகிறது? அப்படி கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவை அந்த மூன்றாவது அணி நாடியாக வேண்டும். அப்படிப்பட்ட சூழலில், பாஜக தலைமையிலோ, தயவிலோ கூட்டணி அரசு அமைத்துவிடக்கூடாது என்பதற்குத்தான் இடதுசாரிக் கட்சிகள் இப்போதே "மதச்சார்பின்மை' என்கிற கோஷத்தை முன்னிலைப்படுத்துகின்றன என்று கருத இடமிருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகளின் மதச்சார்பின்மை மாநாட்டில் கலந்துகொண்ட கட்சிகளில் பல, பாஜகவோ அல்லது காங்கிரúஸா ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டால், அந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கத் தயங்காது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். காங்கிரஸூக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டால், இடதுசாரிகளும், சமாஜவாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளும் ஆதரவளிக்கத் தயங்காது என்பதையும் கடந்தகால வரலாறு உறுதிப்படுத்துகிறது.
இரண்டு விஷயங்களில் நாம் தெளிவாக இருந்தாக வேண்டும். முதலாவது, பொருளாதார கோட்பாடு அடிப்படையில் அல்லாத இரண்டு கட்சி அல்லது இரண்டு கூட்டணி ஆட்சி முறை என்பது ஆபத்தானது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சுயநல விரும்பிகளுக்கும் ஆதாயமாக முடியக் கூடியது. எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்கள் தங்கள் நலனை உறுதி செய்துகொள்ளத்தான் இது உதவும். பல கட்சி ஆட்சிமுறையும், நாடாளுமன்ற ஜனநாயகமும்தான் இந்தியாவைப் போன்ற பல மொழி, இன, மதங்களை உள்ளடக்கிய நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியது.
இரண்டாவது, மதவாதத்தை முன்னிலைப்படுத்துவது என்பது கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மெகா ஊழல்களையும், முறைகேடுகளையும் பின்னுக்குத் தள்ளி காங்கிரஸூக்கு ஞானஸ்நானம் வழங்குவதற்கு ஒப்பானது. வர இருக்கும் பொதுத் தேர்தலில் தனிமைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டிய கட்சி காங்கிரஸாகத்தான் இருக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் நிரந்தர அனுமதியும் அங்கீகாரமும் அளித்ததாகிவிடும்.
பாரதிய ஜனதா தலைமையிலான வலதுசாரிக் கொள்கைகளுக்கும், மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணிக்கும் இடையில், பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் போட்டி அமைவதும், ஊழலையே அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட காங்கிரûஸத் தனிமைப்படுத்துவதும்தான் 2014 பொதுத்தேர்தலின் அடிப்படையாக இருக்க வேண்டும். மதவாத எதிர்ப்பு என்கிற அடிப்படையில் 2004-இல் காங்கிரûஸ அரியணை ஏற்றிய தவறை இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் அரங்கேற்ற முற்படக்
கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.