தேவையில்லை!

ஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இனிமேல் வெளிநாடு சென்று சிகிச்சை பெறலாம்.
Updated on
2 min read

ஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இனிமேல் வெளிநாடு சென்று சிகிச்சை பெறலாம். சிகிச்சைக்கான செலவு, விமானப் போக்குவரத்துக்கான செலவு, இரண்டு மாதங்கள் தங்குவதற்கான செலவு ஆகியவற்றை அரசு ஏற்கும் என்று அண்மையில் வெளியான அறிக்கையில் மத்திய பணியாளர் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு முன்புவரை, இந்த அதிகாரிகள் அனைவரும் இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் பெறலாம். அல்லது அவர் அரசு அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தால், தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அந்தச் சிகிச்சைக்கு என்ன செலவாகுமோ அந்தத் தொகையை அரசு திருப்பிக்கொடுக்கும். இந்த ஈட்டுத்தொகையில் விமானக் கட்டணங்கள் அடங்காது.

இந்தியாவில் மருத்துவப் பயணமாக வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 30% அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பணிபுரியும் மருத்துவர்களில் 60% பேர் அயல்நாட்டில் ஏதேனும் ஒரு பயிற்சியைப் பெற்று, சர்வதேச தரத்தில் மருத்துவம் அளிக்கப் பழகியவராக இருக்கிறார். வெளிநாடுகளிலிருந்து மருத்துவப் பயணமாக இந்தியாவுக்கு வருவோர் மூலம் கடந்த ஆண்டு 200 கோடி அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்தது.

2013-ஆம் ஆண்டு இறுதியில் 300 கோடி அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள். மருத்துவப் பயணிகள் அதிகம் வரும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. காரணம் இங்கே செலவு குறைவு. அமெரிக்காவில் பைபாஸ் சர்ஜரி செய்ய 1.30 லட்சம் டாலர் தேவை. இங்கே 10,000 டாலரில் முடிந்துவிடும். மூட்டுமாற்று சிகிச்சைக்கு 40,000 டாலர் அங்கே செலவாகும். 8,000 டாலர் இருந்தால் போதும் இந்தியாவில் மூட்டு மாற்று சிகிச்சை சாத்தியம். ஆகவே எல்லாரும் இந்தியாவுக்கு வருகிறார்கள். இதில் குறிப்பாக சென்னை மாநகரத்தை விரும்பி வரும் மருத்துவ பயணிகள் மிகமிக அதிகம்.

நிலைமை இப்படி இருக்கும்போது, அதிலும் குறிப்பாக, இந்தியப் பொருளாதாரம் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இப்படியொரு முடிவை எடுக்க இந்திய அரசுக்கு எப்படி மனம் வந்தது?

இந்த சலுகை குறித்த அறிக்கையில், "ஐஎப்எஸ் (இந்தியன் ஃபாரின் சர்வீஸ்) உள்ளவர்களுக்கு இணையாக' என்ற சொல்லாடலைப் பார்க்கும்போதே இந்த அறிவிப்பின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய அரசு மற்றும் இந்திய காவல்துறை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு அடிபணிந்திருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் ஐஎப்எஸ் அதிகாரிகள் பணிபுரியும் போது அவர்கள் மருத்துவத்துக்காக இந்தியா வந்து செல்ல முடியாது. ஆகவே அதற்கான செலவை இந்திய அரசு முழுமையாக ஏற்கிறது. இந்த நடைமுறையை எல்லா ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கிடைக்கச்செய்வது எந்த வகையில் நியாயமானது?

வெளிநாட்டு மருத்துவச் செலவு, விமானச் செலவு, உடன் வருபவர் செலவு உள்பட எல்லாவற்றையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்றால், வியாதி வந்தால்தான் போவார்கள் என்றில்லை. நம்மவர்கள் வியாதியை வரவழைத்துக்கொண்டு

வியாதிஉலா கிளம்ப மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால், உள்ளூர் அமைச்சருக்கான மரியாதையுடன், கார்ப்பரேட் மருத்துவமனைகள் மிகவும் பணிந்து வரவேற்கின்றன. அதனால்தானோ என்னவோ மாவட்டத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் யாருமே அரசு மருத்துவமனைகளுக்குள், விழா மேடையில் ஏறுவதற்காகத் தவிர, வேறு எதற்கும் உள்ளே வருவதே இல்லை. இப்போது வெளிநாட்டு மருத்துவச் செலவையும் அரசு ஏற்கும் என்றால்...?

ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சையை அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருந்தால் மட்டுமே, அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும்.

ராஜாஜியும், அண்ணாவும், பெரியாரும் மக்கள் சேவகர்களாக இருந்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இன்றைய அரசியல்வாதிகள் கார்ப்பரேட் சேவகர்களாக இருக்கின்றனர். அதனால்தானோ என்னவோ கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். அரசியல் தலைமை எவ்வழி, அதிகார வர்க்கமும் அவ்வழி...

இந்தியாவிலுள்ள அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இந்த முடிவு தவறானது என்பது நன்றாகவே தெரியும். இதற்கு எதிராகக் குரல் கொடுக்க நாட்டின் மீது பற்றுள்ள ஒருவர்கூடவா இந்தியாவில் இல்லை. மனவேதனை அதிகரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com