மாநிலங்களின் குரல்!

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்த பல மாற்றங்களில் ஒன்றுதான் திட்டக் குழுவைக் கலைப்பது என்பது. புது தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில முதல்வர்கள்
Updated on
2 min read

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்த பல மாற்றங்களில் ஒன்றுதான் திட்டக் குழுவைக் கலைப்பது என்பது. புது தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில முதல்வர்கள் கூட்டத்தில், திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்குவதற்குப் பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திட்டக் குழுவைக் கலைப்பதற்கு சில காங்கிரஸ் முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1950-இல் உருவாக்கியது திட்டக் குழு. மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு உதவிடவும், நிதியை வழங்கவும், ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கவும், இலக்குகளை நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்லவும் உருவானது. இதனைக் கலைப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

திட்டக் குழு தனக்கு ஆதரவாக இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது என்பது குற்றச்சாட்டாக இருந்து வந்தது. நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது இந்தப் பிரச்னையில் மத்தியத் திட்டக் குழுவுடன் மல்லு கட்டினார். ஜெயலலிதா ஒருபடி மேலே போய், வெளிப்படையாகவும், மிகக் கடுமையாகவும் திட்டக் குழுவின் எதேச்சதிகாரப் போக்கை விமர்சனம் செய்தார். மற்ற மாநில முதல்வர்களுக்கும் இதே கோபம் இருந்தது. உள்ளுக்குள் குமுறினர். இப்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில், திட்டக் குழுவைக் கலைப்பதற்கு மாநில முதல்வர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 1960-களில் வளரத் தொடங்கிய நேரத்திலேயே, திட்டக்குழு மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிற, மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து முடிவு மேற்கொள்கிற அமைப்பாகப் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசில் இருந்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள திட்டக் குழுவின் நிதி ஒதுக்கீட்டை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கி, மாநில முதல்வர்களுக்கு முக்கியப் பங்கு அளிக்கப்படும் என்று உறுதி கூறியிருக்கிறார். இந்த மாற்றம் இந்தத் தருணத்தில் மிகவும் அவசியமான ஒன்று. அன்னிய நேரடி முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய் வர இருக்கும் இன்றைய சூழ்நிலையில், குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தால் சந்தைப் பொருளாதாரம் தலைகீழ் மாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய அமைப்புக்கான தேவை நிச்சயமாக இருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தாலும் எங்கள் மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று சொல்லும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது. மாநில அரசு சார்ந்த பொது விநியோகத்துக்கு (அரிசி, கோதுமை உள்ளிட்டவை) மத்திய அரசே வங்கியில் நேரடி மானியம் செலுத்துவதை விரும்பவில்லை என்ற முடிவை மேற்கொள்ள ஒரு மாநிலத்துக்கு உரிமை இருக்கிறது. மாநில அரசு மெட்ரோ ரயில் தொடங்க விரும்பினால் சுற்றுச்சூழலுக்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான வேளாண்மை, தொழில், பாதுகாப்புத் துறை, ஆராய்ச்சி, செயற்கைக்கோள் உள்ளிட்ட ஆராய்ச்சிகள், எரிசக்தி போன்றவற்றில் மாநிலமும் மத்திய அரசும் இணைந்து செயலாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் மூலமாக மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் 50% திருப்பித் தருவதும், அதைச் செலவிடும் உரிமையை மாநிலங்களுக்கே வழங்குவதும்தான் சரியான கூட்டாட்சியாக இருக்க முடியும். இந்தத் தொகை சரியாக செலவிடப்படுகிறதா, அல்லது மாநில அரசின் அரசியல் சார்ந்த வீண் திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு வைத்துக் கொள்வதில் தவறில்லை.

இதுவரை இந்தியாவில் பிரதமராக இருந்த அனைவருமே தில்லியில் தேசிய அரசியலை மட்டுமே சார்ந்து இருந்தனர். மாநில முதல்வராக இருந்து பிரதமரான மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி. சிங், தேவெ கௌட ஆகியோர் அதிக நாள்கள் பதவியில் தொடரவில்லை. பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி புரியவும் இல்லை.

மூன்று முறை முதல்வராக இருந்து இப்போது பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகவும் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடிக்கு, மாநிலங்களின் பலமும் தெரியும், வலியும் தெரியும். பலமான மாநிலங்கள்தான் வளமான இந்தியாவுக்கு அடித்தளம் என்பதைப் புரிந்துகொண்டு கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்க முற்பட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com