இந்திய ரிசர்வ் வங்கி 2005ஆம் ஆண்டுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்திலிருந்து அகற்றிவிடத் தீர்மானித்திருக்கிறது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 2005க்கு முற்பட்ட நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம். அதுவும் இரண்டு மாதங்களுக்குள். அதற்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாக இருந்தால், தங்களது அடையாள அட்டையைக் காட்டியாக வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளை செல்லாததாக்கவா இல்லை பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக்கொணரவா என்று பரவலான விவாதப் பொருளாகி இருக்கிறது. கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணமாக இருந்தால், அது புழக்கத்திற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் அது செல்லாக்காசாகி விடும்.
2005க்கு முற்பட்ட ரூபாய் நோட்டுக்கள், கருப்புப் பணமாக பதுக்கப்பட்டிருந்தால், இந்தக் குறுகிய காலத்தில் அவை செலவழிக்கப்படுமா இல்லை வங்கிகளில் மாற்றப்படுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். எதுவாக இருந்தாலும் மறைமுகமாக செய்யக்கூடிய செயல் அல்ல அது. அப்படியே பெரிய அளவில் கருப்புப் பணம் செலவழிக்கப்பட்டாலும் ரிசர்வ் வங்கி அதற்காகக் கவலைப்படாது. காரணம், இந்த நடவடிக்கையின் நோக்கமே, பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் முறையான புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான்.
அது ஏன் 2005க்கு முற்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன என்று கேட்கலாம். 2005க்குப் பிறகு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பிரத்யேகமான பாதுகாப்புக் குறியீடுகள் சில இணைக்கப்பட்டிருக்கின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு எழுந்ததன் பின்னணியில்தான் இப்படியொரு முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது என்று கருத வாய்ப்பிருக்கிறது.
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும், நோட்டுகளின் தனித்தன்மையை உறுதிப்படுத்தும் தயாரிப்பு முறையையும் கடைப்பிடித்தும்கூட கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தனைக்கும் ரூபாய் நோட்டின் எழுத்து, வடிவமைப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி, போலிகள் உருவாகிவிடாமல் பாதுகாக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அப்படியும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன என்றால், அதற்குக் காரணம் ரிசர்வ் வங்கியின் மெத்தனமல்ல, கள்ள நோட்டு அடிப்பவர்களின் புத்திசாலித்தனம்தான்.
இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் பரவலாக விநியோகிக்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். இந்த இழிசெயலை பாகிஸ்தான் அரசே செய்கிறதா இல்லை பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் செய்கின்றனவா என்பதை அறுதியிட்டுக் கூறிவிட முடியவில்லை. பாகிஸ்தான் அரசும் அதன் ஆசியுடன் செயல்படும் தீவிரவாத அமைப்புகளும் இந்த விஷயத்தில் கைகோத்து செயல்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
பாகிஸ்தான் அரசுக்கும், அங்கிருந்து இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அணு ஆயுத வல்லரசாகி விட்டிருக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது என்பது சாத்தியமுமில்லை. அந்த நிலையில் பாகிஸ்தான் தரும் இதுபோன்ற தொந்தரவுகளை எதிர் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அதனால், கள்ள நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டுமானால், ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதுபோல சில நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்.
கடந்த டிசம்பர் 31, 2004 வரை வெளியிடப்பட்டு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு சுமார் மூன்று லட்சத்து 43 ஆயிரம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கெடு முடிவதற்குள் இந்த அளவுக்குப் பணத்தை அச்சடித்து வங்கிகளுக்குக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.
இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் முற்றிலுமாக கருப்புப் பணம் வெளிக்கொணரப்படும் என்றோ, கள்ள நோட்டுகள் அகற்றப்படும் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால், நிச்சயமாக கணிசமான கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் அல்லது செயலிழக்கும். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் கள்ளப் பணத்தின் - கருப்புப் பணத்தின் பங்களிப்பு கணிசமாகக் கட்டுப்படுத்தப்படும். அது நல்லதுதானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.