மின்சக்திக் கனவு!

அனல் மின்நிலையங்கள் அதிகமான காற்று மாசுவை ஏற்படுத்தும் நிலையில், நமது மின்சாரத் தேவைக்கு சூரியஒளி மின்சாரத்தையும், அணுமின்சக்தியையும் நாட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
Updated on
2 min read

அனல் மின்நிலையங்கள் அதிகமான காற்று மாசுவை ஏற்படுத்தும் நிலையில், நமது மின்சாரத் தேவைக்கு சூரியஒளி மின்சாரத்தையும், அணுமின்சக்தியையும் நாட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. புதிதாகப் புனல் மின்நிலையங்கள் அமைப்பது சாத்தியமில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதனால் ஏற்படும் வனம் மற்றும் விளைநிலங்களின் அழிப்பு, அந்த முயற்சியைக் கைவிட வைக்கின்றன. காற்றாலை மின்சாரம் என்பதும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே கை கொடுக்கிறது.
 இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவைப் போன்று அதிக அளவில் சூரியனின் ஒளியை வருடம் முழுவதும் பெறுகின்ற நாடுகள் சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பதுதான் புத்திசாலித்தனம். காற்று மாசுவை அதிகரிக்காத தூய்மையான மின்சாரம் என்று சொல்வதாக இருந்தால் அவை சூரிய மின்சக்தியும், அணுமின்சக்தியும் மட்டுமே. அதிலும் அணுமின்சக்தியில் இருக்கும் ஆபத்துக்கள் அச்சுறுத்துகின்றன.
 ஏனைய நாடுகளுடன் இணைந்து சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி பயன்தரத் தொடங்கி இருக்கிறது. புதிய கொள்கைகளையும் சட்டதிட்டங்களையும் உருவாக்கி சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்த முயற்சியால், தூய்மையான எரிசக்தி மூலம் உலகின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
 சூரிய மின்சக்திப் பயன்பாட்டின் மிகப்பெரிய பிரச்னை தயாரிப்புச் செலவு. சூரியஒளி இலவசமாகக் கிடைத்தாலும்கூட அதை மின்சக்தியாக மாற்றுவதற்குத் தேவையான உபகரணங்களும், சேமித்து வைக்கும் செலவும் கட்டுப்படியாகாத அளவு இருப்பதால்தான், இனியும்கூட உலக நாடுகள் அணுமின் சக்தியையும், அனல் மின்சக்தியையும் நாடுகின்றன. இப்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
 சன் எடிசன் என்கிற அமெரிக்க நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறது. அமெரிக்காவில் முன்னணி சூரிய மின்சக்தித் தயாரிப்பு நிறுவனமான சன் எடிசன் ஆந்திரப் பிரதேச அரசுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி ஒரு கிலோவாட் மின்சாரம் ரூ.4.63 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அனல், புனல், அணுமின்நிலையங்களின் மூலம் தயாரிக்கப்படும் எரிசக்திக்கு நிகரான உற்பத்திச் செலவில் சூரிய மின்சக்தியையும் தயாரிக்க முடியும் என்கிற சன் எடிசன் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம், எரிசக்தி உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.
 இதற்கு முன்னால்வரை, சூரிய மின்சக்தியின் விலை ரூ.18 வரை கோரப்பட்டது. இதனால்தான் இந்த மின்சாரத்தை அதிக அளவில் தயாரிக்கப் பலரும் தயங்கினார்கள். தொழில்நுட்ப தேர்ச்சியும், நிர்வாக உத்திகளும் சூரிய மின்சக்தியின் தயாரிப்புச் செலவை கணிசமாகக் குறைத்திருக்கும் நிலையில், ஆந்திராவில் சன் எடிசன் நிறுவனத்தைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைக்க முன்வரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
 இந்தியா மிகப்பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான திட்டங்களை வகுத்து வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் 1,00,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்று மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு பெறுவதற்கான முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
 சூரிய மின்சக்தியின் கட்டணம் ஏனைய மின்சக்திகளுக்கு நிகராகக் கூடிய சாத்தியங்களை, சன் எடிசனின் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது. சூரிய மின்சக்திக் கட்டணம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. சில வரைவுத் திட்டங்கள் 2020-இல் ரூ.4.20 என்றும், 2030-இல் ரூ.3.60 என்றும் சூரிய மின்சக்தியின் தயாரிப்புச் செலவு இருக்கும் என்று கணிக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமை ஏற்படுமானால், இந்தியாவில் மின்சக்தித் தேவை, அணுமின் நிலையங்களை நாடாமலேயே பூர்த்தியாகக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
 சூரிய மின்சக்தி குறைந்த தயாரிப்புச் செலவிலும், மின் கட்டணம் கட்டுக்கு அடங்கியும் இருக்க வேண்டுமானால், அதற்குப் பின்னால் நிறைய உழைப்பும், தொலைநோக்குத் திட்டங்களும் தேவைப்படுகின்றன. உள்நாட்டு அளவில் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டு, தொழில்நுட்ப அளவிலும், தயாரிப்புச் செலவிலும் கணிசமான வெற்றிகளை நாம் அடைந்தாக வேண்டும். அரசுத் தரப்பிலும், தனியார் தரப்பிலும் ஆதரவும் ஊக்கமும் வழங்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
 சூரிய மின்சக்தி உற்பத்தி என்பது அதிக அளவில் திறந்தவெளித் தேவையை உள்ளடக்கியது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேறாமல் அதிக அளவில் திறந்தவெளி நிலம் கிடைக்கப் பெறாது. அது தரிசு நிலங்களாகவே இருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் இல்லாமல் போனால், தயாரிப்புச் செலவையும், முதலீட்டையும் கட்டுக்குள் வைக்க முடியாது. அப்படிப்பட்ட சூழலில் ஆபத்தான அணுமின் சக்தியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமை ஏற்படும்.
 பாரீஸில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டின் போது சர்வதேச அளவிலான சூரிய மின்சக்திக் கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் சூரிய மின்சக்தித் தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சி குறித்து அவர் முன்மொழிந்திருக்கிறார். உலகில் சூரிய மின்சக்தியை உருவாக்கும் வாய்ப்பு ஏறத்தாழ 100 நாடுகளுக்கு உள்ளது. இந்த நாடுகளை இந்தியா ஒருங்கிணைத்து உலகுக்குக் குறைந்த செலவில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான முயற்சியை முன்னெடுத்துச் செல்வது இன்றைய காலத்தின் கட்டாயம்!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com