கட்டட மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரிய மின் தகடுகள் மூலம் தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டுக்குள் 3,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 40,000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு முறையே 4,700, 4,300, 3,500, 3,200 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்காக, மேற்கூரைகளில் சூரிய மின்சாரத் திட்டத்தைக் கட்டாயமாக்கலாம் என்றும், அதற்கான சட்டத் திருத்தங்களைச் செய்யலாம் என்றும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகளிலும் சூரிய மின் தகடுகள் அமைக்கப்படுவது விரைவில் கட்டாயமாக்கப்படலாம். மழைநீர் சேகரிப்புத் தொட்டி ஒவ்வொரு கட்டடத்திலும் எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டதோ அதேபோன்று சூரிய மின் தகடுகள் அமைப்பதையும் தமிழக அரசு கட்டாயமாக்கும்.
தமிழ்நாட்டில் இதற்கான முயற்சிகள் முன்பு எடுக்கப்பட்டன. மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் தொழிற்கூடங்கள் (11 கே.வி.ஏ.வுக்கு மேலாகப் பயன்படுத்துவோர்) சூரிய ஒளி மின் தகடு அமைப்புகளைப் பொருத்துவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இத்தகைய தொழிற்கூடங்கள் ஏற்கெனவே புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி ஏற்பாடுகளை வைத்திருப்பதாகவும், இன்னொன்றையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றத்தை அணுகின. நீதிமன்றம் இத்தொழிற்கூடங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.
ஆனால், தற்போது மத்திய அரசு வலியுறுத்தும் திட்டத்தின்படி அனைத்துக் கட்டட மேற்கூரைகளிலும் சூரிய மின் தகடுகள் பொருத்துவது காலத்தின் கட்டாயம். இந்தியாவில் புனல் மின் உற்பத்தி வாய்ப்புகள் அருகிவிட்டன. அல்லது அதன் அதிகபட்ச அளவை எட்டியாகிவிட்டது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி விலை உயர்வால் மின் உற்பத்திச் செலவு மிகவும் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு மாநில அரசும் அதிக விலைக்கு மின்சாரத்தைப் பெற்று, குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு கட்டடத்திலும் சூரிய மின்சார உற்பத்தி கட்டாயமாக்கப்படுவது தவிர்க்க முடியாதது.
500 சதுர அடிக்கு மேலாக மேற்கூரை அமைந்துள்ள கட்டடங்களில் ஒரு கிலோவாட் அல்லது அந்தக் கட்டடம் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5 விழுக்காடு மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட வேண்டும் என்று ஹரியாணா அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதைப் பின்பற்றி தமிழ்நாடும் கட்டடங்களை வீடு, வணிக வளாகம், சிறு தொழிற்கூடம், தொழிற்சாலை என்று பகுத்து, ஒவ்வோர் அமைப்புக்குமான சூரிய மின் தகடுகள் திறனை நிர்ணயிக்கலாம்.
கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடு பொருத்தும் திட்டத்தை மற்ற வணிக, தொழிற்கூட மேற்கூரைகளுக்குக் கட்டாயமாக்குவது ஒருபுறம் இருப்பினும், வீடுகளுக்கு கட்டாயமாக்குவதும், மின் தகடுகள், மின்சார சேமிப்புக் கலன் ஆகியவற்றின் விலையை மேலும் குறைத்து, மானிய விலையில் வழங்குவதும் வீட்டுப் பயன்பாட்டுப் பட்டியலில் உள்ளவர்களுக்கு நன்மையாக அமையும்.
ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சமாக மூன்று விளக்குகள், 2 மின் விசிறிகள், ஒரு தொலைக்காட்சி இயக்கப் போதுமான சூரிய மின்சாரம் பெறுவதற்குரிய மின் தகடுகள், மின் சேமிப்புக் கலன்கள் வாங்குவதற்கு சுமார் ரூ.45,000 ஆகிறது என்கிறார்கள். கடந்த ஆண்டில் மின் பற்றாக்குறை கடுமையாக நிலவியபோது தமிழ்நாட்டில் விற்பனையான இன்வெர்ட்டர்கள் விலை குறைந்தது ரூ.25,000 என்பதைக் கருதும்போது, மின் தகடுகள் அமைப்பது கடினமான செயல் அல்ல என்பது புரியும். இவ்வாறு மேற்கூரையில் மின் தகடு அமைத்து சூரிய மின்சாரம் பெறுவதற்கு வங்கிக் கடன் வழங்கவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
மாநில அரசு தற்போது அதிக விலைக்கு மின்சாரம் வாங்கிக் குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வீட்டு இணைப்புகளுக்கு 500 யூனிட் வரை மானியம் தரப்படுகிறது. 499 யூனிட் என்றால் மின் கட்டணம் ரூ.2,137. இதில் அரசு தரும் மானியம் ரூ.800 கழித்து, ரூ.1,337 மின் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், 501 யூனிட் என்றால் ரூ.2,137 செலுத்தியாக வேண்டும். ஆனால், எத்தனைக் குடும்பங்களில் 500 யூனிட்டுக்குள்ளாக மின் பயன்பாடு அமைந்துவிடக் கூடும்?
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதானி நிறுவனத்துடன் இணைந்து 650 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசுக்கு வழங்கப்படவுள்ள மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் ரூ.7.01. அனல் மின் நிலையங்கள் நிலக்கரியைக் கொள்முதல் செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது, இதைவிட அதிக விலைக்கே மின்சாரத்தை அரசுக்கு விற்க முடியும்.
வணிக வளாகம், தொழிற்கூடங்களுக்கு எத்தகைய சலுகை வழங்கினாலும், வீட்டுப் பயன்பாட்டுக்கான சூரிய மின்சார அமைப்புகளை நிறுவ அதிக ஊக்கம் அளிப்பதும், வங்கிக் கடன், மானியம் அளிப்பதும் அரசுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு வீட்டுக்கும் மின் செலவைக் குறைக்கும். முன்னோட்டமாக, தமிழக அரசு அலுவலகக் கட்டடங்களிலும், தெரு விளக்குகளிலும் சூரிய மின்சாரத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
ஒவ்வொரு வீடும் தனக்கான டிவி டிஷ் ஆன்டனா வைத்திருப்பது போல, குறைந்தபட்ச மின் தேவைக்காக சூரிய மின் தகடுகளையும் சேர்த்தே அமைப்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் இன்றியமையாதது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
காஜிப்பூர் பாலியல் வன்கொடுமை: விசாரணை கோரி ராகுல் வலியுறுத்தல்!

புலி வந்துவிட்டது... தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

