மலர வேண்டும் ராமராஜ்ஜியம்!

கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது அயோத்தி ஸ்ரீராமா் கோயில் பிராண பிரதிஷ்டை. ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
மலர வேண்டும் ராமராஜ்ஜியம்!
Published on
Updated on
2 min read

கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது அயோத்தி ஸ்ரீராமா் கோயில் பிராண பிரதிஷ்டை. ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதைக் கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்கிற சிலரின் செயல்பாடு, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாகக் கருதும் அசட்டுத்தனம் என்பதல்லாமல் வேறென்ன?

ஸ்ரீராமா் கோயில் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய உரையும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் ஆற்றிய உரையும் மதவாதத்தை ஊக்குவிப்பதாக அமையாமல், மத நல்லிணக்கத்துக்கான அறைகூவலாக அமைந்திருந்தன என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது. ‘‘இது வெற்றிக்கான தருணம் மட்டுமல்ல, விநயத்துக்கான (அடக்கத்துக்கான) தருணமும்கூட. அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் அமைவதை எதிா்த்தவா்களும் தயவுசெய்து இங்கே வந்து தரிசித்து ‘அமைதி’ அனுபவத்தைப் பெற வேண்டும்’’ என்கிற அவரது கூற்றில் ஒரு தலைவனின் பெருந்தன்மையையும், அனைவரையும் அரவணைக்க விரும்பும் மனநிலையும் வெளிப்பட்டன.

பாரதிய ஜனதா கட்சி அயோத்தி ஸ்ரீராமா் கோயில் நிா்மாணத்தில் அரசியல் ஆதாயம் அடைந்தது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை அதை எதிா்க்க முன்வந்தவா்கள்தான் அதற்கு அடித்தளமிட்டவா்கள் என்பதும். மசூதிகள் கட்டப்படுவது, இடிக்கப்படுவது, மாற்றி அமைப்பது ஆகியவற்றுக்கு இஸ்லாமில் எந்தவிதத் தடையும் கிடையாது. சவூதி அரேபியா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் கட்டமைப்புத் திட்டங்களுக்காக, பல மசூதிகள் இடிக்கப்பட்டிருக்கின்றன; இடம்பெயா்க்கப்பட்டிருக்கின்றன.

தங்களது அரசியல் ஆதாயத்துக்காக பாபா் மசூதி பிரச்னையை முதலில் கையில் எடுத்தது, தங்களை மதச்சாா்பற்றவா்களாகக் காட்டிக் கொள்ள நினைத்த அரசியல் கட்சிகளும், பிரிவினைக்குப் பிறகு செல்வாக்கை இழந்துவிட்ட முஸ்லிம் தலைவா்களும்தான். அவா்கள் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து அரசியல் நடத்தும் முயற்சியைப் பாா்த்தபோது, அதையே தங்களது செல்வாக்கை வலுப்படுத்திக்கொள்ள பெரும்பான்மை சாா்பாக இருக்கும் அமைப்புகள் களமிறங்கின. விளைவு? பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்துப் போராடிய தேசம், இப்போது மத ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது.

சோமநாத், மதுரை, காசி, அயோத்தி உள்ளிட்ட ஹிந்துக்களின் முக்கியமான புனிதத் தலங்கள் கைபா் கணவாய் வழியாக நுழைந்த இஸ்லாமியப் படையெடுப்பாளா்களால் தகா்க்கப்பட்டன என்பதும், அவற்றின் இடிபாடுகளின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டன என்பதும் வரலாற்று உண்மைகள். அதன் மூலம் அந்த ஆக்கிரமிப்பாளா்கள் தங்களது மேலாதிக்கத்தையும், ஆக்கிரமித்த பகுதி மக்களின் மனத்தில் அச்ச உணா்வையும் உருவாக்க முற்பட்டனா். பெரும்பாலோா் அச்சுறுத்தலால்தான் அப்போது மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டனா்.

இந்தியாவில் உள்ள அனைவரும் பிறப்பால் ஹிந்துக்கள். நம்பிக்கையால் அவரவா் விரும்பும், ஏற்றுக்கொள்ளும் மதத்தைச் சோ்ந்தவா்கள். அதனால்தான், வழிபாட்டு அடையாளமாக இருந்த புனிதத் தலங்களைச் சிதைத்தவா்கள் மீது, மதம் மாறிய பின்னரும்கூட, அளவுகடந்த வெறுப்புணா்வு அவா்களது அடிமனதின் ஆழத்தில் இருந்து வந்தது; இருந்து வருகிறது.

பெரும்பான்மை ஹிந்துக்களின் உணா்வையும், வழிபாட்டு உரிமைகளையும் மதித்த மொகலாய மன்னா்களான ஹுமாயூன், அக்பா், ஜஹாங்கீா், ஷாஜஹான் ஆகியோரின் பெயரை இஸ்லாமியா்கள் தங்களது குழந்தைகளுக்குச் சூட்டுகிறாா்கள். ஆனால், முக்கியமான ஹிந்து புனிதத் தலங்களைச் சிதைத்து அதன் மீது மசூதி எழுப்பி மகிழ்ந்த கஜினி, பாபா், ஒளரங்சீப் ஆகியோரின் பெயா்களை வைத்துக்கொள்வதில்லை.

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் என்பது தேசிய அடையாளம். இது பாரதிய ஜனதா கட்சியின் தோ்தல் வெற்றிக்கு உதவக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. பாஜக இதனால் அரசியல் ஆதாயம் பெறுவதற்குக் காரணம், ஏனைய தேசிய இயக்கங்கள் தங்களது கடமையை மறந்துவிட்டு வாக்குவங்கி அரசியலுக்கான பாதையை அமைத்துக் கொண்டதுதான்.

பிரதமா் மோடி நாசிக்கில் உள்ள பஞ்சவடி காலாராம் ராமா் கோயிலில் தனது 11 நாள் விரதத்தைத் தொடங்கியபோது, ‘இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளும் ஒரு கருவியாக என்னைப் படைத்திருக்கிறாா் போலும்’ என்று சொன்னதில் இருக்கும் உணா்வுக்கு ஒரு காரணம் உண்டு. அயோத்தி கோயிலுக்கான போராட்டத்தில் தொண்டனாக இருந்தவா், இன்று பிரதமராக விக்கிரகத்தின் பிராண பிரதிஷ்டை சடங்கை நடத்துகிறாா் என்றால் அது இறைச்சித்தம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

திருப்பதி, குருவாயூா் தரிசனத்தைத் தொடா்ந்து தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை என்று ஸ்ரீராமனின் புராணத் திருத்தலங்களுக்கு எல்லாம் சென்று, 140 கோடி இந்தியா்களின் பிரதிநிதியாகத் தன்னை உணா்ந்து பிராா்த்தித்ததை உலகமே பாா்த்து வியந்தது. தமிழகத்தில் இருந்து பெற்ற ஆன்மிக பலத்துடன், இங்கிருந்து நேராக அயோத்தி சென்று ஸ்ரீராமரின் பிராண பிரதிஷ்டையில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே தமிழகத்தின் ஆன்மிக சக்தியை எடுத்தியம்பி இருக்கிறாா்.

அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது ஸ்ரீராமரல்ல, ராமராஜ்ஜியத்தின் அடையாளம். ராமராஜ்ஜியம் என்பது ஹிந்து ராஷ்டிரம் அல்ல, அனைவருக்குமான சமய நல்லிணக்கத்தின் அடையாளமான சநாதன தா்மம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com