
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற அமைப்பு எனப்படும் யுபிஐ பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துவரும் நேரத்தில், கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி 20 நாள்களில் மூன்று முறை இந்த சேவை சில மணி நேரம் முடங்கியது. இதனால், கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி பணப் பரிமாற்ற செயலிகள் மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் அனைவரும் அவதிக்குள்ளாகினர்.
எண்மப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் யுபிஐ பணப் பரிமாற்றத்தை இந்திய தேசிய பணப் பரிமாற்ற நிறுவனம் (என்பிசிஐ) கையாண்டு வருகிறது. கரோனா பெருந்தொற்றின்போது, ரூபாய் நோட்டுகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், யுபிஐ பரிமாற்றம் பிரபலமடையத் தொடங்கியது. தற்போது பெரிய நிறுவனங்கள் முதல் தேநீர் கடைகள் வரையிலும் சிறிய, பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்கள் யுபிஐ மூலம் நடைபெறுகின்றன.
இணைய வசதி கொண்ட அறிதிறன்பேசி வாயிலாக க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, ஒரு ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் செயலிகள் மூலம் யுபிஐ வாயிலாக பரிமாற்றம் செய்து கொள்ள இயலும். உலக அளவில் இந்திய யுபிஐ}யை பயன்படுத்துவது மிகவும் எளிமையான ஒன்றாக இருப்பதால், இதன் தாக்கம் கிராமப்புறங்களையும் எளிதில் சென்றடைந்திருக்கிறது.
தற்போதைய கணக்கெடுப்பின்படி, நாட்டில் ஒரு விநாடியில் 3,700 பரிமாற்றங்கள் யுபிஐ மூலம் நடைபெறுகின்றன. பிரேஸிலின் பிக்ஸ் ( நிமிஷத்துக்கு 1332 பரிமாற்றங்கள்), சீனாவின் அலிபே-யை (1,157) பின்னுக்குத் தள்ளி உலக அளவில் யுபிஐ முன்னிலை வகிக்கிறது. சிறிய அளவிலான எண்ம பணப் பரிமாற்றத்தில் 75 சதவீதம் யுபிஐ வாயிலாகவே நடைபெறுகிறது. இது வரும் ஆண்டில் 90 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் ரூ.24.8 லட்சம் கோடிக்கு யுபிஐ மூலம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இது 2024-ஆம் ஆண்டு மார்ச்சில் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது. கோடிக்கணக்கானோர் தாங்கள் பயன்படுத்தும் செயலி வாயிலாக யுபிஐ மூலம் இந்தப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யுபிஐ வாயிலான பரிமாற்றம் அனைத்துத் தளங்களிலும் பரவலாக இருப்பதால், வெளியிடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பணம், பற்று அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
பண்டிகைக் காலங்கள், பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை நேரங்களில் யுபிஐ-யின் பயன்பாடு வழக்கத்தைக் காட்டிலும் அதிகரிக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ ஒரு முக்கியமான கட்டண உள்கட்டமைப்பாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில் இந்தத் தொழில்நுட்பக் கட்டமைப்பில் இடையூறு ஏற்பட்டால் அதன் தாக்கம் பெரிதாக இருக்கிறது. மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி யுபிஐ பரிமாற்றம் முடங்கியபோது, நிதியாண்டின் முடிவில் அதிகமானோர் இதைப் பயன்படுத்தியதே திடீர் முடக்கத்துக்குக் காரணம் என்று என்பிசிஐ கூறியது. இந்தக் குறைபாடுகள் யுபிஐ அமைப்பின் நம்பிக்கையைப் பாதிக்கும் வகையில் உள்ளன. 20 நாள்களுக்குள் மூன்று முறை முடங்கியதால் அதன் பராமரிப்பு, சேவை, இணையப் பாதுகாப்பு போன்றவை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயன்படுத்துவதில் எளிமை, கைப்பேசி செயலி மூலம் இயக்குதல் ஆகிய காரணங்களால் பெரும்பாலானோரைக் கவர்ந்துள்ள இந்தத் தொழில்நுட்பம் இணைய குற்றவாளிகளையும் அதை நோக்கி கவனத்தைத் திருப்பியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் யுபிஐ பண மோசடி தொடர்பாக 7.3 லட்சம் வழக்குகள் பதிவான நிலையில், 2024-இல் 13.45 லட்சம் வழக்குகளாக அதிகரித்தது. இது 85 சதவீதம் அதிகமாகும்.
தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் ஆறாவது மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவின் யுபிஐ கட்டண முறையை பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் உள்ள கட்டண முறைகளுடன் இணைப்பதற்கு முன்மொழிந்தார். இது இந்த அமைப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், தொழில், சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளிலும் யுபிஐ-யை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள என்பிசிஐ, இந்தியாவில் இதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் முனைப்பு காட்டி வருகிறது. யுபிஐயின் முக்கியத்துவம் அன்றாடப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதையும் தாண்டி, நாடு முழுவதும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எந்தவொரு தொழில்நுட்பமும் 100 சதவீதம் குறைபாடு இல்லாததாக இருக்க முடியாது. இதுபோன்ற சில மணிநேர திடீர் முடக்கத்தைத் தவிர்க்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் யுபிஐ பரிமாற்றத்தில் சுமார் 21 முறை மட்டுமே தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நேரக் கணக்கில் கணக்கிட்டால் 1,200 நிமிஷங்கள் முடங்கியுள்ளன. தொழில்நுட்பத்தின் வெற்றி விகிதத்துடன் ஒப்பிடும்போது, இந்த முடக்கத்தின் கால அளவு மிக மிகக் குறைவாகும்.
எனினும், இந்தியாவை உலக அரங்கில் பெருமைகொள்ளச் செய்துள்ள யுபிஐ தொழில்நுட்ப மேம்பாட்டில் ரிசர்வ் வங்கியும், யுபிஐ-யை வழிநடத்தும் என்பிசிஐ அதிகாரிகளும் மேலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எண்ம முன்னேற்றத்துக்குத் தடையாக மாறும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது உடனடித் தேவையாகும்.