அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

வேளாண் பயிர்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் உணவு தானியங்களில் ஊடுருவும் நச்சுத்தன்மையாலும், உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும், துரித வகை உணவுகளைச் சாப்பிடும் போக்கு அதிகரித்துள்ளதாலும் புதிது புதிதாகக் கண்டறியப்படும் நோய்களுக்கு மனிதர்கள் இலக்காவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அன்றாட வாழ்க்கைச் செலவினங்களையே சமாளிக்க முடியாமல் திணறி வரும் சாமானிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இத்தகைய நோய்களையும் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏழை மக்களுக்காக மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. ஆனால், 145 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டில், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களால் பயனடைவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் சதவீதம் வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் மிகவும் அதிகரிக்கும் என "தி லான்செட்' அறிவியல் ஆய்விதழில் அண்மையில் வெளியான கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் மாசடைந்து வரும் நிலங்களில் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல் பயிர்களில் நச்சுத்தன்மை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும், இத்தகைய நெல்லிலிருந்து உற்பத்தி செய்யப்படும் அரிசியை உணவாகச் சாப்பிடுவதால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும் என்றும் அந்தக் கட்டுரை எச்சரிக்கிறது.

ஏற்கெனவே பல்வேறு வகையான நோய்களுக்கு இலக்காகி, அவற்றுக்கு உரிய சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ள நமது நாட்டு மக்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் அவசியமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அனைத்து மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு என்பது சாத்தியமானதுதானா என்பது பெரும் கேள்விக்குறி. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களால் பெரும்பான்மையான மக்கள் பயனடைய முடியவில்லை என்பதுதான் உண்மை.

ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும் அரசுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள், நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நேரடியாகச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

காப்பீடுதாரர்களிடமிருந்து ஆண்டுதோறும் பிரீமியத் தொகையை வசூலிப்பதில் அதிக அக்கறை காட்டும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகளில் முன்கூட்டியே பணம் செலுத்தி சிகிச்சை பெறுபவர்களுக்கு அந்தத் தொகையைத் திருப்பி அளிப்பதில் மிகவும் காலதாமதம் செய்வதாகவும், அற்பக் காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் பரவலாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

முன்கூட்டியே பணம் செலுத்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பிறகு, அந்தத் தொகையைக் கோரும் காப்பீடுதாரர்களுக்கு 80-90 சதவீதம் திருப்பி அளிப்பதாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடுதாரர்களுக்கு சிகிச்சைக்கான செலவுத் தொகையை திருப்பி அளிப்பது 45 சதவீதமாகத்தான் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்களும், சுமார் 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசுத் துறை நிறுவனமான "யுனைடெட் இந்தியா' நேரடியாக தானே செயல்படுத்தாமல், தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் தமிழக அரசு ஊழியர்களுக்கான இந்தக் காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூன் மாதம் காலாவதியாகிறது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களிடமிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் ரூ.3,200 கோடி அளவுக்கு பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இவர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம் எனக் கூறப்பட்டாலும், இது முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. முன்கூட்டியே பணம் செலுத்தித்தான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்றும், இதைத் தவிர்க்கும் வகையில் தனியார் நிறுவனத்துக்குப் பதிலாக அரசுத் துறை காப்பீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து வகுக்க வேண்டும். புதிது புதிதாகக் கண்டறியப்படும் ஆபத்தான நோய்களிலிருந்து மக்களைக் காக்க இதுதான் வழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com