வரவேற்புக்குரிய முயற்சி!

சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் வனப் பகுதியைப் பற்றி...
வரவேற்புக்குரிய முயற்சி!
Published on
Updated on
2 min read

சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் வனப் பகுதி முக்கியமானது.

நகரம், கிராமப்புறங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு நிகராக வனப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கிலோ மீட்டர் வனப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தில்லி, சிக்கிம் மற்றும் கோவாவைவிடப் பரப்பளவில் அதிகம்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அறிக்கையின்படி, நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் அதிகளவில் வன ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. 2024, மார்ச் மாத நிலவரப்படி அந்த மாநிலத்தில் 5,460.9 சதுர கி.மீ. வனப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸôமில் 3,620.9 சதுர கி.மீட்டரும், கர்நாடகத்தில் 863.08 சதுர கி.மீ., மகாராஷ்டிரத்தில் 575.54 ச.கி.மீ., அருணாசல பிரதேசத்தில் 534.9 ச.கி.மீ. வனப் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 157.68 சதுர கி.மீ. பரப்பிலான வனப் பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், தெலங்கானா உள்பட 10 மாநிலங்கள் வன ஆக்கிரமிப்புகள் குறித்த தரவுகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

வன உரிமைச் சட்டத்தின்படி, வனப் பகுதிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முற்றிலும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பது வேட்டையாடுதல், மேய்ச்சல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டவை. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்ற இரண்டாவது வகையில் கால்நடைகள் மேய்ச்சல் போன்ற சில நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. மூன்றாவது வகைப்படுத்தப்படாத வனப் பகுதி. இதில் முதல் இரு வனப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளைக் கட்டுப்படுத்துவது வனத் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆந்திர மாநில வனப் பகுதிகளில் செம்மரக் கட்டைகள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை கட்டுக்குள் வரவில்லை. இந்திய வனப் பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவது மட்டுமல்லாமல், வன விலங்குகள் வேட்டையாடப்படுவதும் பெரும் பிரச்னையாகவே உள்ளது. அடர்ந்த வனப் பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதால் அவை தாமதமாகவே வனத் துறையினருக்கு தெரிய வருகிறது.

வனப் பகுதிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னையாக மட்டுமல்லாமல், சமூக}பொருளாதார மற்றும் சட்டரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இதைக் கண்டறிந்து தடுக்கவும், இதில் ஈடுபடுவோரைக் கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய பிரதேச வனத் துறை இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் சில நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, வனத்தின் செயற்கைக்கோள் படங்கள், பிரத்யேக கைப்பேசி செயலிகள் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் வன மேலாண்மை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மத்திய பிரதேசத்தின் சிவ்புரி, குணா, விதிஷா, புர்ஹான்பூர், கண்ட்வா ஆகிய ஐந்து முக்கிய வனக் கோட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் நில ஆக்கிரமிப்புகள், மரம் வெட்டுதல், காட்டை அழிக்கும் நடவடிக்கைகள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலிகள் வன ஊழியர்களின் கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்யப்பட்டு, அவர்கள் வனத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்போது எடுக்கும் புகைப்படங்கள் உள்ளிட்டவை அதில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அது வனத் துறை அலுவலர்களின் பார்வைக்கு உடனுக்குடன் செல்கிறது.

"கூகுள் எர்த் என்ஜின்' வாயிலாக அந்த வனப் பகுதியின் மூன்று நாள்களுக்கு முந்தைய புகைப்படங்களை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து, வனத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், தரிசு நிலம், கட்டுமானம் போன்றவற்றில் காணப்படும் மாற்றங்கள் விரைந்து கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டு வரவும் அந்த மாநில வனத் துறை திட்டமிட்டுள்ளது.

பணியில் உள்ள வன ஊழியர் எடுக்கும் புகைப்படங்களை கூடுதல் தெளிவுடன் பார்க்கும் வசதி, ஜிபிஎஸ் வசதியுடன் புகைப்படத்தை பதிவேற்றும் வசதி, குரல் பதிவு, பின்னூட்டம் போன்றவையும் அந்த கைப்பேசி செயலியில் சேர்க்கப்பட உள்ளன. இதன் வெற்றியைப் பொருத்து மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள வனப் பகுதியில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வறட்சிக் காலங்களில் காடுகளில் தீப்பிடிக்கும்போதும், அதைக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும், பருவநிலை மாறுபாட்டை முன்னதாக கணித்து தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும், அவை வேட்டையாடப்படுவதில் இருந்து பாதுகாக்கவும், வன விலங்குகள் மனித மோதல்களைத் தடுக்கவும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடர்ந்த வனப் பகுதிகளை இடைவிடாது கண்காணிப்பது என்பது தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் இதை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். நாட்டின் விலைமதிப்பற்ற தேசிய சொத்துகளான காடுகளின் பாதுகாப்பு நிலையான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பல்லுயிர்ப் பெருக்கத்தின் அடிப்படையான வனங்கள் அழிந்தால், மனித இனமும் அழிந்துவிடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com