ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கேள்விக்குறியாகும் சட்டத்தின் ஆட்சி!

விதிமுறை மீறல்களிலும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட முறைகேடுகளிலும் அதிகாரவர்க்கம்-அரசியல்வாதிகள்-வர்த்தகர்கள்-சமூக விரோதிகள் ஆகியோருக்கிடையே காணப்படும் உறவுதான் அடிப்படைக் காரணம் என்பதை விசாரணை ஆணையங்கள் வெளிச்சம் போடுகின்றன.

கோப்புப் படம்

Published On :

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் உயிரிழந்ததற்கு காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 70 பேர் கடந்த 2024 ஜூன் 19, 20-ஆம் தேதிகளில் உயிரிழந்தனர். மேலும் 161 பேர் நிரந்தர ஊனம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பரம ஏழைகள். விமர்சனங்களை மெüனம் ஆக்குவதற்காக கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அளித்து தவறான முன்னுதாரணம் முந்தைய திமுக அரசால் ஏற்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இந்த சம்பவத்துக்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 8) தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பொதுவெளியில் ஏற்கெனவே அறியப்பட்டிருந்த காரணங்கள் அறிக்கையில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன.

"மெத்தனால் சேமித்து வைத்தல், எடுத்துச் செல்லுதல், விற்பனை ஆகியவற்றைக் கண்காணித்து ஆய்வு செய்யும் அதிகாரிகள் கடமை தவறாமல் இருந்திருந்தால் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் வந்திருக்காது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கடமை தவறி உள்ளனர். இவர்கள் வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்து கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓட அனுமதித்துள்ளனர்'' என்கிறது நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம்.

30 ஆண்டுகளுக்கும் மேல் ஒருவர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், காவல் நிலையத்துக்கு 250 மீ. தொலைவிலும் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்து 200 மீ. தொலைவிலும் துளியும் அச்சமின்றி கள்ளச்சாராயம் விற்றதும் ஆணையத்தின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பான காவல் துறை, வருவாய்த் துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் நடப்பதற்கு முன்பே, அண்டை மாவட்டமான விழுப்புரத்தில் உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் ஒரு பெண் உள்ளிட்ட 22 பேர் கடந்த 2023 மே 13-ஆம் தேதி உயிரிழந்தனர். அப்போதே, காவல் துறை, வருவாய்த் துறையினர் விழித்திருந்தால் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்திருக்காது. எது நடந்தாலும் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற அரசு அதிகாரிகளின் மனநிலை காரணமாகவே 70 பேரின் உயிர் பறிபோனது; 161 பேர் பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியபோது, 2018 மே 22-ஆம் தேதி சீருடை அணியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடைபெற்றபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 காவல் துறை அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மூன்று வருவாய் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. ஆனால், சம்பவம் நிகழ்ந்து 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மர்மமாகவே உள்ளன.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல் துறை துணைத் தலைவர் கபில் குமார் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

அலட்சியமாகவோ, அத்துமீறியோ செயல்பட்டாலும்கூட அரசு தங்களைப் பாதுகாக்கும் என்று அரசு அதிகாரிகள் கருதுவதால்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, எக்கியார்குப்பம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியவில்லை. கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

ஆணையத்தின் பரிந்துரைப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்துத் துறைச் செயலர்களுக்கு உத்தரவிட்டு தலைமைச் செயலர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். இப்போதைய அரசாவது மக்கள் பக்கம் நின்று தவறிழைக்கும் அரசு அதிகாரிகள் மீது நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமுறை மீறல்களிலும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட முறைகேடுகளிலும் அதிகாரவர்க்கம்-அரசியல்வாதிகள்-வர்த்தகர்கள்-சமூக விரோதிகள் ஆகியோருக்கிடையே காணப்படும் உறவுதான் அடிப்படைக் காரணம் என்பதை விசாரணை ஆணையங்கள் வெளிச்சம் போடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.