பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழில் 100-க்கு 101 மதிப்பெண் எடுத்து மன உளைச்சளுக்கு ஆளான மாணவி, குளறுபடிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவி புகழேந்தி. இவர் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே முதல் மதிப்பெண் பெற்றிருந்தார்.
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான போது தமிழ் பாடத்தில் மட்டும் அவர் 91 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண்னை விட குறைவாக மதிப்பெண் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன் விடைத்தாளின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியான விடைத்தாள் நகலைப் பெற்று ஆய்வு செய்தபோது அதில் பெரும் குளறுபடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாணவியின் தமிழ் விடைத்தாளில் வினா மற்றும் பக்கம் வாரியாகவும் மதிப்பெண்களைக் கூட்டிப் பார்த்தபோது 101 மதிப்பெண்கள் என வந்துள்ளது.
மாணவி எழுதிய விடைகளின்படி அவருக்கு 97 மதிப்பெண்கள் வரவேண்டிய நிலையில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர், இரண்டு ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு தலா ஏழு மதிப்பெண்கள் வழங்கி குளறுபடி செய்துள்ளார்.
இந்தத் தவறைக் கவனிக்காத விடைத்தாள் திருத்தியவர், கூர்ந்தாய்வு செய்தவர் மற்றும் தலைமை தேர்வாளர் ஆகிய மூன்று அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் கூட்டுத்தொகையை 91 என்று குறித்து மதிப்பெண் பட்டியலிலும் அதையே பதிவிட்டுள்ளனர்.
இதனால் மாணவி பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். எனவே மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுபோல் நடந்துள்ள குளறுபடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







