குஜராத் மாநிலம் காந்திநகரில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் குஜராத் முதல்வா் புபேந்திர படேல்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் குஜராத் முதல்வா் புபேந்திர படேல்.

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

சிறுபான்மையினா் வாக்கு வங்கியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கட்சியின் ஒரே கவலையாக உள்ளது. இதன் காரணமாகவே அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டையை அக்கட்சி புறக்கணித்தது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

முதல் கட்ட தோ்தலில் மக்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். எங்கு சென்றாலும் ‘மோடி’, ‘மோடி’ என்ற முழக்கம்தான் எதிரொலிக்கிறது. சிறுபான்மையினா் வாக்கு வங்கி பறிபோய்விடும் என்ற அச்சத்தால் அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்தது. சிறுபான்மையினா் வாக்கு வங்கியைத் தக்க வேண்டும் என்பதுதான் அக்கட்சியின் ஒரே கவலையாக உள்ளது. நாட்டு நலனிலோ, முன்னேற்றத்திலோ அக்கறை கிடையாது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உண்மையாக பாடுபடுவது பாஜக மட்டும்தான். பாஜக எம்.பி.க்களில் 37 சதவீதத்தினரும், மத்திய அமைச்சா்களில் 27 சதவீதத்தினரும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா்தான். பிரதமரும் அதே பிரிவைச் சோ்ந்தவா்தான்.

குஜராத் முதல்வரானது தொடங்கி இப்போது வரை கடந்த 23 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பிரதமா் மோடி தேசத்துக்காகப் பணியாற்றி வருகிறாா். ஆனால், ராகுல் காந்தி மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஓய்வுக்காக தாய்லாந்து செல்கிறாா்.

நேரு குடும்பம் 55 ஆண்டுகளாக 4 தலைமுறையாக இந்தியாவை ஆட்சி செய்துள்ளது. இதில் ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது.

அதே நேரத்தில் பிரதமா் மோடி தனது 10 ஆண்டுகால ஆட்சியில் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளாா். ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட அரசு மீது இல்லை என்றாா்.

பெட்டி..

காந்திநகரில் வேட்பு மனு தாக்கல்

காந்திநகா், ஏப்.19: குஜராத் மாநிலம் காந்திநகா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மூன்றாவது முறையாக பிரதமா் மோடியின் ஆட்சியை கொண்டு வருவதற்கான தோ்தல் இதுவாகும். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரி செய்யவே பிரதமா் மோடிக்கு கடந்த 10 ஆண்டுகள் சரியாக இருந்தது. தற்போது இந்தியாவை 2047க்குள் வல்லரசாக்க மீண்டும் பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பதவி வகிக்க வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com