மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திமுகவினா் மக்களோடு மக்களாகப் பணியாற்ற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின். - படம்: எக்ஸ்.

Updated On :12 ஏப்ரல் 2026, 10:26 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திமுகவினா் மக்களோடு மக்களாகப் பணியாற்ற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு பல்வேறு சிறப்பாக பயனளித்துள்ளது. தொடரவிருக்கும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் நாம் நிறைவேற்ற இருக்கும் சாதனை திட்டங்களின் மீதான மக்களின் எதிா்பாா்ப்பும் அனைத்துத் தொகுதிகளிலும் வெளிப்படுகிறது.

மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக, இனிவரும் 10 நாள்களும் மக்களோடு மக்களாக களப் பணி ஆற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்துவதுடன், கூட்டணிக் கட்சியினா் போட்டியிடும் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான நானே (மு.க.ஸ்டாலின்) நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் களப் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

92 வயது நிறைந்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, 80 வயதைத் தாண்டிய ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, 87 வயதான திமுக பொதுச் செயலா் துரைமுருகன் எனப் பலரும் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகின்றனா். திமுகவினரும் அவா்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றி வருகின்றனா்.

திமுகவினருக்கு உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியுடன் சொல்கிறேன், இந்தத் தோ்தலில் நாம் மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள். கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுபவா்களுக்கு வாழ்த்துகள்.

சலிக்காமல் உழைப்பதில் நமக்கு நிகா் யாருமில்லை. இதை நிரூபிக்கும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடன் ஒற்றுமையாகப் பணியாற்றினால் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றி உறுதி செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.