தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ஆக்கிரமிப்பு, குறுகிய பாதைகள்... திணறும் தி.நகர்!

ஆக்கிரமிப்பு, குறுகிய பாதைகள்... திணறும் தி.நகர்!

News image

சென்னை தி.நகர்

Updated On :4 ஏப்ரல் 2026, 9:18 pm

சென்னையின் முதன்மை வணிக மையமான தி.நகர் என்றழைக்கப்படும் தியாகராய நகர் சட்டப்பேரவை தொகுதி அதிவேக நகரமயமாக்கலுக்கான உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் கோடம்பாக்கம், அசோக் நகர், மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், சிஐடி நகரின் ஒரு பகுதி, வடபழனியின் சில பகுதிகள் உள்ளன.

தங்கள் சந்தித்து வரும் பிரதான பிரச்னைகள் குறித்து இத்தொகுதி மக்கள் கூறியதாவது:

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்...

தியாகராய நகர் குடியிருப்பு வாசி ஜான்சன் கூறுகையில், தியாகராய நகரில் பெருகி வரும் வணிக நிறுவனங்களால் உள்கட்டமைப்பு குறுகி வருகிறது. இங்குள்ள நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு அருகிலேயே குடிபெயர்ந்து விடுகின்றனர். பெரும்பாலும் ஒரே ஒரு தளத்துடன் குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைந்தது 3 தளங்களுக்கு குறையாமல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதனால் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இத்தொகுதி மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, சாலைகளில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுகிறது என்றார்.

குறுகிய பாதைகள்...

தியாகராய நகர் தொகுதிக்கு உள்பட்ட பெரும்பாலான பகுதிகள் குறுகிய பாதைகளாக உள்ளன. இதனால், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பெயரில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதாக உதவவில்லை. காலை நேர நடைப்பயிற்சி செய்பவர்களே இந்த மேம்பாலத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஸ்ரீ நாத்.

வெள்ளப் பிரச்னைகள்:

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சுப்ரஜா கூறுகையில் மாநகராட்சியால் மழைநீர்வடிகால்கள் அமைப்பதற்காக ஆர்ய கவுடா சாலையில் மரங்கள் வெட்டப்பட்ட போதிலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுவது தடுக்க முடியவில்லை.

ரங்கநாதன் சாலையில் சாலையோர சிறு கடைகளின் அக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த மாநகராட்சியும், போக்குவரத்து காவல் துறையும் நிரந்திர திட்டத்தைச் செயல்படுவது இல்லை என்றார்.

தியாகராய நகரில் தெரிவிக்கப்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தற்காலிக திட்டத்தை மட்டும் செயல்படுத்தாமல் நிரந்தர தீர்வு காண தேர்தலுக்கு பின் அமையும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.