வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இதர காரணங்களுக்காக வெளிநாடு சென்று அந்த நாட்டின் குடியுரிமை பெறாத இந்தியக் குடிமக்கள், அவர்களின் கடவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள முகவரியில் இந்தியாவில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியும்.
இத்தகையவர் www.mvsp.in அல்லது தேர்தல் ஆணையத்தின் www.eci.nic.in என்ற இணையதளத்தில் படிவம் 6ஏ என்பதைப் பதிவிறக்கம் செய்து தேவையான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் படிவம் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கட்டணம் செலுத்தாமல் கிடைக்கும்.
இந்தப் படிவத்தை அஞ்சல் துறை மூலம் அனுப்புவதாக இருந்தால் அனைத்து ஆவணங்களின் இரண்டு பிரதிகளை சுய சான்று அளிப்புடன் வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த அலுவலரிடம் நேராக விண்ணப்பத்தை அளிக்க நேர்ந்தால் சரிபார்ப்புக்காக மூலக் கடவுச் சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் பெறப்பட்டுள்ள வீட்டு முகவரிக்கு வாக்குச்சாவடி அலுவலர் நேரில் சென்று விசாரித்து ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்த பின் வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற தனிப்பிரிவில் இவர்களின் பெயர்கள் இடம்பெறும்.
வெளிநாட்டு வாக்காளருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது. வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்கும் போது மூலக் கடவுச் சீட்டை ஆதாரமாகக் காண்பித்து வாக்களிக்க வேண்டும்.