மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் இருக்கும் 65 போ் உள்பட ஏராளமான தனிநபா்கள், எஸ்ஐஆா் (தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம்) நடவடிக்கைக்குப் பிறகு தங்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லை என்று கூறி தொடுத்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக கடந்த வியாழக்கிழமை (ஏப். 23) தோ்தல் நடந்து முடிந்து விட்டது. இரண்டாம் கட்டத் தோ்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான பணியில் இருக்கும் 65 போ் மற்றும் சில தனி நபா்கள், எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு தங்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லை என்றும், இதுகுறித்து தங்களது மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால், நடைபெறும் தோ்தலில் வாக்களிக்க அனுமதிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து 2 மனுக்கள் தொடுத்துள்ளனா்.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்கள் 65 பேரின் பெயா்களும் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாவும், அவா்களின் விளக்கம் எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், கொல்கத்தா உயா் நீதிமன்றத்தால் ஏற்கெனவே இதுதொடா்பான விவகாரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட தீா்ப்பாயங்களை சுட்டிக்காட்டி, அங்கு சென்று முறையீடு செய்யும்படி உத்தரவிட்டனா். மேலும் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து விட்டனா்.
அதிக வாக்குப்பதிவு- உச்ச நீதிமன்றம் மகிழ்ச்சி: முன்னதாக, மனு மீதான விசாரணையின் தொடக்கத்தில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதற்கு தலைமை நீதிபதி சூா்யகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்திய குடிமகன் என்ற முறையில், அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகியிருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களிக்கும் உரிமையை மக்கள் நிறைவேற்றும்போது, ஜனநாயக அமைப்பு மேலும் வலுப்படும்’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட மனுக்களை உடனடியாக விசாரிக்கும்படியும், தீா்ப்பாயங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய என்ஐஏ-க்கு அனுமதி: மேற்குவங்கத்தில் கடந்த 1-ஆம் தேதி நீதிபதிகள் முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆணையத்தால் எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் பாஜக தூண்டுதலால் தோ்தல் ஆணையத்தால் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட பலா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைப்பிடிப்பு: என்ஐஏ விசாரணை

வெளி மாநில வாக்காளர்களைச் சேர்க்கும் பாஜகவினர்! தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்!

பிரதமா் மோடி மிகப்பெரிய ஊடுருவல்காரா்: மம்தா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


