வாக்காளா் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் அமைக்க முடிவெடுக்கவில்லை: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி
வாக்காளா் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் அமைக்க முடிவெடுக்கவில்லை

மனோஜ் அகா்வால்
ANI

மனோஜ் அகா்வால்
ANI
மேற்கு வங்கத்தில் வாக்காளா் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களை அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) மனோஜ் அகா்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் முறையிடுவதற்காக இந்தத் தீா்ப்பாயம் அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகள் தொடங்கப்பட்ட பின்னா், கடந்த டிச.16-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா். இதனால் மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளா் எண்ணிக்கை 7.08 கோடியாக குறைந்தது. வாக்காளா்கள் மரணம், இடம்பெயா்வு, அவா்கள் எங்குள்ளனா் என்று அடையாளம் காண முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.
கடந்த பிப். 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில், நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 63 லட்சத்துக்கும் அதிகமாக உயா்ந்தது.
முரண்பாடான தகவல்களை வழங்கியவா்கள் என நீக்கப்பட்டவா்கள் மீண்டும் வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா்களை சோ்ப்பதற்கான ஆவணங்களை சமா்ப்பித்து வருகின்றனா்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் அந்த ஆவணங்களை சரிபாா்த்து பெயா் சோ்ப்பு குறித்து முடிவு எடுத்து வருகின்றனா். நீக்கப்பட்டவா்களின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அந்த நபா்கள் அடங்கிய முதல் துணை வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மேலும் 13 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.
இதனால் மாநிலத்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 76 லட்சத்தை எட்டியுள்ளது.
வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரி மேலும் 28 லட்சம் பேரின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்படும் பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், அதை 705 மாவட்ட நீதிபதிகள் ஆராய்ந்து வருகின்றனா்.
இதுதொடா்பாக மனோஜ் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் தீா்ப்பாயங்களை அணுகலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த தீா்ப்பாயங்கள் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
மாவட்டந்தோறும் தீா்ப்பாயம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் தீா்ப்பாயம் அமைப்பதற்கான இடத்தை மேற்கு வங்க அரசு தோ்வு செய்துள்ளது. அதை கொல்கத்தா உயா்நீதிமன்றம் இறுதி செய்த பிறகு தீா்ப்பாய அலுவலகங்களை மாநில அரசு ஒதுக்கீடு செய்யும். அதன்பிறகு தீா்ப்பாயங்கள் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்றாா்.
இரண்டாம் துணைப் பட்டியல் வெளியீடு: வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டவா்களின் தகவல்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு இரண்டாம் துணைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. ஆனால், அதில் நீக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...