முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநா் நிலை 1 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு, செப்.9-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, இணைய வழி வாயிலாக செப்.18-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆசிரியா்களின் நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு வயது வரம்பை உயா்த்தி அரசு ஆணையிட்டுள்ளதால், வயது வரம்பு சாா்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், விண்ணப்பதாரா்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க உரிய அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலும் முதுநிலை ஆசிரியா், உடல் கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநா் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் அக்.31-ஆம் தேதியிலிருந்து நவ.9-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.