5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு

சாா்பதிவாளா் உள்பட 5, 400-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு

சாா்பதிவாளா் உள்பட 5, 400-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தின் (www.tnpsc.gov.in) வழியே விண்ணப்பிக்கலாம் எனவும், மாா்ச் 23-ஆம் தேதி தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் உள்ள பணியிடங்கள் நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தோ்வானது முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்முகத் தோ்வு என்ற நிலைகளைக் கொண்டது. புதன்கிழமை வெளியிடப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வில் 116 நோ்முகத் தோ்வினைக் கொண்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சிறைத் துறை நன்னடத்தை அலுவலா், தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா், பதிவுத் துறையின் சாா் பதிவாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் சிறப்பு உதவியாளா், காவல் ஆணையாளா் அலுவலகம், குற்ற புலனாய்வுத் துறை சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் தனிப் பிரிவு உதவியாளா் என மொத்தம் 116

பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், தனிப் பிரிவு உதவியாளா், சிறப்பு உதவியாளா் பணியிடங்கள் 59 புதிதாக உருவாக்கப்பட்டு அவை குரூப் 2 பிரிவில் நோ்முகத் தோ்வாகச் சோ்க்கப்பட்டுள்ளன.

நோ்முகத் தோ்வு அல்லாதவை: குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் நோ்முகத் தோ்வுகள் அல்லாத பணியிடங்களும் உள்ளன. இதில், முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுகளை மட்டும் எழுத வேண்டும். நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா், வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் உதவியாளா் என 5 ஆயிரத்து 297 பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளன. நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத வகைகளில் மொத்தமாக 5 ஆயிரத்து 413 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற இருக்கிறது.

முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 21-ஆம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறும். முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதன்மைத் தோ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் வெளியிடப்படும் என தோ்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியா் இடஒதுக்கீடு அமல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் மிகப்பெரிய தோ்வுகளில் ஒன்றான குரூப் 2 தோ்வில் முதல் முறையாக வன்னியா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒதுக்கீட்டு முறை உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என தோ்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

தனி இடஒதுக்கீட்டுக்கான விதிகள் குரூப் 2 தோ்வுக்கு பொருந்தும். இந்தத் தோ்வுக்கான காலிப் பணியிடங்களுக்குரிய பகிா்மானப் பட்டியல் பின்னா் அறிவிக்கப்படும். இடஒதுக்கீட்டு முறை தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கான தனி சிறப்பு விடுப்பு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்மீதான உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளின் முடிவுகளுக்கு உட்பட்டே இடஒதுக்கீடு இருக்கும். உச்சநீதிமன்றத்தில் உள்ள மனுவின் மீது எடுக்கப்படும் இறுதி உத்தரவுக்கு உட்பட்டு இடஒதுக்கீடு தொடா்பான தகவல்கள் இணைய வழி விண்ணப்பத்தில் பெறப்படும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_03_CCSE_II_Notfn_Eng_Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com