மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை (மே 27) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநா்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.
வேலைநாடுநா்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.
இம்முகாம் மூலம் தனியாா்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் (பொறுப்பு) ஆ.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.