பாசடேனா, (கலிபோர்னியா), ஜூன் 20 - அமெரிக்கா சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் செலுத்திய "வைக்கிங்-1" விண்வெளிக் கலம் செவ்வாய்க் கிரகத்தை நெருங்கி அக்கிரகத்தை சுற்றி வர ஆரம்பித்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் பாலைவனப் பகுதியில் உயிரினம் உள்ளதா என்று ஆராய்வதற்காக அந்த விண்வெளி கலம் இன்னும் 2 வார காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கும்.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3-51 மணிக்கு விண்வெளிகலத்தில் அமைந்த கம்யூட்டர்கள் விடுத்த உத்தரவின் பேரில் விண்வெளிகல ராக்கெட் சுமார் 32 நிமிஷ நேரம் செயல்பட்டது. இதன் பலனாக விண்வெளி கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு அது செவ்வாயை சுற்றி வருவதற்கு தேவையான வேகத்தைப் பெற்றது. இவ்வாறு செய்யாவிடில் விண்வெளிக்கலம் செவ்வாயைச் சுற்றி வருவதற்கு பதில் அதைத் தாண்டி சென்றுவிடும்.
சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பிளாரிடாவிலிருந்து செலுத்தப்பட்ட"வைக்கிங் - 1'' 70 கோடி கிலோ மீட்டர் தூரம் விண்வெளியில் பயணம் செய்து இப்போது செவ்வாயை நெருங்கியள்ளது.
பூமியிலிருந்து செலுத்தப்பட்டு செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றும் விண்வெளிக் கலங்களில் இது ஐந்தாவதாகும். அமெரிக்காவின் "மாரினர்-9 " விண்வெளி கலம் தான் 1971ல் முதல் தடவையாக செவ்வாய்க்கிரகத்தை சுற்றியது. பின்னர் ரஷியா 3 விண்வெளிக் கலங்களை அனுப்பி செவ்வாயைச் சுற்றும்படி செய்தது.
"வைக்கிங்-1" செவ்வாயை சுற்றும் பாதையில் விடப்பட்டு விட்டது. எல்லாம் சரியாகச் செயல்படுகின்றன" என்று அமெரிக்காவின் கண்ட்ரோல் நிலைய திட்ட மானேஜர் ஜேம்ஸ் மார்ட்டின் கூறினார்.
"வைக்கிங்-1" விண்வெளிக் கலம் செவ்வாயைச் சுற்றிவரும் போது ஒரு சமயம் அக்கிரகத்திலிருந்து 1490 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். மற்றொரு சமயத்தில் 59,890 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். அதாவது செவ்வாயை அது நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும். ஒரு தடவை செவ்வாயைச் சுற்றிவர அதற்கு 42 மணிநேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேச பேச்சு நீடிக்கிறது - கங்கை நீர் பங்கீடு பற்றி விவாதித்தனர்
டாக்கா, ஜூன். 20- இந்தியா, வங்கதேச தூது கோஷ்டிகள் இன்று தங்களது பேச்சுக்களை நீடித்தன. பற்றாக்குறை சீஸனில் கங்கை நீர் பங்கீடு பற்றி பிரதானமாக விவாதிக்கப்பட்டது என்று தெரிகிறது.
இரண்டாவது சுற்று பேச்சு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
நாளையும் பேச்சுக்கள் தொடரும் என்று இந்திய கோஷ்டி தலைவர் ஜி. பார்த்தசாரதி பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
எல்லை சம்பவங்கள் பற்றி தாங்கள் நாளை விவாதிக்கலாம் என்று வங்கதேச கோஷ்டி தலைவர் ரியர் அட்மிரல் எம். எச். கான் குறிப்பிட்டார்.
டாக்காலில் ஜூன் 18ல் வந்து சேர்ந்த அன்று எல்லை சம்பவங்கள் பற்றிய புகார்கள் சம்பந்தமான கேள்விக்கு பார்த்தசாரதி பதிலளிக்கையில் இப்புகார்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
இன்று பேச்சுக்கள் துவங்கு முன் பார்த்தசாரதி சேனாதிபதி மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹமானையும், உதவி ராணுவ சட்ட நிர்வாகியையும் சந்தித்து இந்தியா - வங்கதேச உறவின் சகல அம்சங்களைப் பற்றியும் விவாதித்தார். ஜெனரல் ஜியாவுர் ரஹமானிடம் நீண்ட, நேசப்பூர்மான பேச்சுக்களைத் தாங்கள் நடத்தியதாக பின்னர் பார்த்தசாரதி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் முக்கிய அக்கறையுள்ள பிரச்னைகளைப் பற்றி இந்திய கோஷ்டி விவாதித்ததாக வங்கதேச அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய கோஷ்டி நாளை மாலை வங்கதேச அதிபர் ஏ. எம். சயீமை சந்திக்கவிருக்கிறது.
Summary
U.S. spacecraft orbits Mars.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









