இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்!

தலை வாழை இலையில் நமக்குப் பிடித்தமான சைவம் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம்.
இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்!
Published on
Updated on
3 min read

தலை வாழை இலையில் நமக்குப் பிடித்தமான சைவம் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம். வாழை இலை உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும். மனத்துக்கு திருப்தியும் தரும். சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. ஆனால் சமீப காலங்களில் பண்டிகை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வாழை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. வாழை இலையில் சாப்பிடுவதால் உள்ள 7 நன்மைகள் இவை. இன்னும் பல நன்மைகள் இருந்தாலும் மிக முக்கிய நன்மைகளை மட்டும் பட்டியில இட்டுள்ளோம். 

1.வாழை இலை மகத்துவம்

நமது கலாச்சாரத்தில் வாழை இல்லை பயன்படுத்தாத விருந்தே இல்லை என கூறலாம். வீட்டுப் பூஜையில், இறைவனுக்குப் படைக்கவிருக்கும் பிரசாதம் மற்றும் பழங்களை வாழை இலையில்தான் வைப்போம். காரணம் வாழை இலைகள் தூய்மையானவை.  தென்னிந்தியாவில் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு வாழை இலைகளில்தான் வடை பாயசத்துடன் விருந்தளிப்போம்.

கோவில் திருவிழா ஆகட்டும், திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் ஆகட்டும் அனைத்திலிலும், வாழை இலை போட்டுத்தான் உணவு பரிமாறப்படும். இவற்றை பயன்படுத்தினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

2. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது

வாழை இலை நம் உடலில் சேரும் நச்சுத்தன்மையை அழிக்க வல்லது. இதில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிகளவில் இருப்பதால் நம் உடல் செல்களில்  சிதைவு ஏற்படாமல் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க முடியும். தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண் விரைவில் குணமாகும். வாழை இலையில் உள்ள கிளோரோபில் பலவிதமான நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது. உணவு எளிதில் ஜீரணம் ஆகும். தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் அகன்று, சருமம் பளபளப்பாகும். இளநரை ஏற்படாது.  மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

3. ரசாயனக் கலப்பு இல்லாதது

வாழை இலையின் சிறப்பம்சமே அது இயற்கைத் தந்த கொடை. பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் ரசாயனம் உங்கள் பாத்திரங்களின் மீது சிறிதளவேனும் படிந்திருக்கும். ஆனால் வாழை இலை மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்டு அல்லது மார்கெட்டில் ப்ரெஷ்ஷாக வாங்கியதாக இருக்கும்.

4. உயிராற்றல் பெறுகும்

வாழை இலை மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பின்பும் கூட அது ஆக்சிஜன் வெளியிட்டுக் கொண்டிருக்குமாம். வாழை இலை குளிர்ச்சியானதாக இருக்கும், அதிலுள்ள பாலிஃபெனால் நமது செல்களில் உள்ள டிஎன்ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. 

5. உணவின் ருசி

வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவின் ருசி பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உண்மை. சூடான சாதம் மற்றும் பதார்த்தங்களை வாழை இலையில் பரிமாறும்போது, அந்த இளம் சூட்டில் வாழை இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிஃபெனால் நாம் சாப்பிடும் உணவில் கலந்துவிடும். அதன்மூலம் வாழை இலையிலுள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்ஷியம் ஆகிய சத்துக்களும் உணவுடன் சேர்ந்து கிடைக்கின்றன.

6. பொருட்களைப் பத்திரப்படுத்த உதவும்

வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது. தவிர வெளியூர்களுக்குப்  பயணம் செல்லும்போது வாழை இலையில் உணவுப் பண்டங்களை கட்டி எடுத்துச் சென்றால் ருசியும் மணமும் அப்படியே இருக்கும். வாழை இலையை நமது தேவைக்கேற்ப எந்த அளவிலும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தலாம்.

7. சுற்றுச் சூழல் பாதுகாவலன்

ப்ளாஸ்டிக், தெர்மோகோல் அல்லது பேப்பர் ப்ளேட்ஸ் போன்றவை உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. ரசாயனக் கலவையற்ற வாழை இலை மட்டுமே உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பானது. அது மட்டுமல்லாமல் வாழை இலையில் உணவு சாப்பிட்டபின் அதனை கழுவி வைக்க வேண்டாம். அவ்வகையில் தண்ணீர் மிச்சமாகிறது. மேலும் ஆடு, மாடுகளுக்கு உணவாக தந்துவிடலாம். இது ஒரு சிறந்த சுற்றுச் சூழல் மறுசுழற்சியாகும். ஆடு மாடுகள் இல்லாவிட்டால், நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com