பெண்களுக்கு மனதிலும் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படும் காலம் கர்ப்ப காலம். இச்சமயத்தில் சில பெண்களுக்கு அழையா விருந்தாளியாக சர்க்கரை நோய் வந்துவிடும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாறி, ரத்தத்தில் கலக்கிறது. கணயத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை உடல் திசுக்கள் பயன்படுத்தும்படியாகச் செய்கிறது. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. அதன் காரணமாக இன்சுலின் செயல்பாடு பாதிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. இதைத்தான் மருத்துவர்கள் கர்ப்ப கால சர்க்கரை நோய் என்கிறார்கள். கர்ப்ப காலத்தில் 20 வது வாரத்தில் இது ஏற்படும். பிரசவத்துக்குப் பின் சரியாகிவிடும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த சர்க்கரை நோயை உடற்பயிற்சிகள் மூலமாகவும் சத்துணவுகளாலும் கட்டுப்படுத்தலாம்.. 25 வயதுள்ளவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உடையவர்கள் போன்றோர் கர்ப்ப கால ஆரம்பத்திலேயே அதைப்பற்றி மருத்துவரிம் கூறிவிட வேண்டும். கருவுற்ற பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியம். கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக இனிஷியம் குளுகோஸ் சேலன்ஜ் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் சில நாட்கள் கழித்து குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டும் எடுத்து விட வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால் கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்கலாம். உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். நார்சத்து நிறைந்த உணவுகளாகிய தானிய வகைகள், பழங்கள், முக்கியமாக ஆரஞ்சு, ஆப்பிள், காய்கறிகளான அவரை பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி, பசலை கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கலோரிகள் சரியாகக் கிடைக்கும் உணவை சாப்பிடவேண்டும். கொழுப்புச்சத்தும் அதிகரித்துவிடாமல் உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.