உலகில் இன்றைக்கு " கிறிஸ்துமஸ் " பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் "கிறிஸ்மஸ் மரம்" இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம் பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி இந்தப் பழக்கம் உருவானது? அந்தப் பழக்கம் எப்போதிருந்து வழக்கமானது? நல்லதோ கெட்டதோ நமது அப்பம்மாக்களுக்கு அவர்களது அப்பப்பாக்கள், அம்மம்மாக்கள் வழிவழியாக விட்டுச்சென்ற பழக்கத்தை கெட்டியாகபிடித்துக் கொள்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களோடு அத்தகைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் இதன்பாற்பட்டதுதானோ!
நதிமூலம்:
வரலாறுகளில் நாம் பின்னோக்கி வழுக்கியபோது, சிக்கிய தடயங்களை, இயந்திரகதியாய் இயங்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்குச் சொல்லி வைக்கலாமே என்ற எண்ணம் எழுந்ததன் விளைவுதான் இங்கே.. இந்தக் " கிறிஸ்மஸ் மரம் " முளைவிடக் காரணமாகிப் போனது.
"கிறிஸ்மஸ் மரம்" ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேர்விட்டு முளைத்துத் தழைத்துச் செழித்து இன்று உலகெங்கும் விருட்சமாக படர்ந்துள்ளது. நதிமூலம் பார்க்கிறபோது நம்மை 11ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள் மனம் மகிழ கனிவகைகளை, எதிர்பார்ப்பின்றி அள்ளித் தருகிற மரங்களுக்கு நன்றிகூறும் நற்பண்பில் ரோமானியர்களும் இங்கிலாந்தினரும் திளைத்திருந்திருக்கின்றனர். கிறிஸ்து பிறந்த மாதமான டிசம்பர் மாத முதல் வாரத்தில் மரங்களை சிவப்பு ஆப்பிள்களால் அலங்கரித்து ஆராதித்திருக்கின்றனர்.
15ம் நூற்றாண்டில்தான் வீடுகளில் மரங்களை வைத்து மகிழ்ந்து கொண்டாடியிருக்கின்றனர். ஆதாம் - ஏவாள் தினமாக டிசம்பர் 24ம் தேதியை நிர்ணயித்து, மனிதப்புனித சந்ததி உருவாக காரணமாயிருந்த "கனி" மரத்தினை வீடுகளில் வைத்தனர். மரங்களை குட்டை, குட்டையாக வெட்டி எடுத்து வீடுகளில் வைத்து அலங்கரித்து ஆனந்தப்பட்டிருக்கின்றனர்.
முதல் மரம்:
"கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் (Alsace ) முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, ஆஸ்திரியா என வழக்கம் பல விழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது.
பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கைகொடுத்து உதவியதற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் முகமாக இந்த மரத்தை அளித்தனர். இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.
அறுவடைத் திருநாள்:
இங்கிலாந்தில் பாகான் என்ற இனத்தவர்கள் மதச் சடங்குகளில் மரங்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டு வந்திருக்கின்றனர். எப்படி தமிழகத்தில், சடங்கோ, திருமணமோ, கோவில் திருவிழாக்களோ வாழை மரம்முக்கிய பங்கு வகிக்கிறதோ அதுபோல இங்கிலாந்திலும் இடம் பெற்றே வந்திருக்கிறது. ட்ரூயிட்ஸ்(Druids) என்பார் (விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஓக் மரங்களைஅலங்கரித்து பழங்களை தொங்கவிட்டு சிறு மெழுகுவர்த்தி விளக்குகளை மரக் கிளைகளில் தொங்கவிட்டும் தங்கள் அறுவடைத் திருநாளைச் சிறப்பித்திருக்கின்றனர்.
ரோமானியர்கள், சேட்டர்நலியா என்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னரே வரும் விழாநாளிலேயே மரங்களை அலங்கரித்து மரத்தைச் சுற்றி பரிசுப் பொருட்கள் இனிப்பு வகைகளை வைத்து கொண்டாடும் பழக்கத்தை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.
11ம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியவில் வசித்த வைக்கிங் இனத்தவர்கள், பனிக்காலமானாலும் வெய்யில் காலமானாலும் என்றும் தன் பசுமைப் புன்னகை மாறாத பைன், ஸ்புரூஸ், சைப்ரஸ், யீ அல்லது ·பர் போன்ற மரங்கள், துயர் மிகுந்த இருண்ட பனிக்காலம் மறைந்து மீண்டும் வசந்தத்தை வருவிக்கும் உன்னத மரங்கள் என நம்பினர்.
உயிர்த்தெழுந்தது:
அது சரி. மரம் எப்படி கிறிஸ்மஸ் விழாவின் பிரிக்கமுடியாத அங்கமானது? அதைக் கடைசிவரை சொல்லாமல் சஸ்பென்ஸா கொண்டு போறேனேன்னு பாக்குறீங்களா? இதோ உங்கள் ஆவல் பூர்த்தியாகும் நேரம் வந்துவிட்டது!
ஜெர்மானிய கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதர் St.போனி ஃபேஸ் (St.Boniface) என்பார்தான் இதற்கு மூல காரணமாகக் கருதப்படுகிறார். ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக 'ஓக்' மரங்களை வெட்டி அழித்து வந்தனர். மின்சாரம் இல்லாத அந்நாட்களில் குளிரை விரட்ட 'ஓக்' உருட்டுக் கட்டைகள்தான் வீட்டு "Fire Place"ல் பயன்படுத்திவந்தனர். குடும்பங்களை வெதுவெதுப்பாக, கதகதப்பாக வைத்திருப்பதில் மையப் பொருளாக 'ஓக்' திகழ்ந்தது.
இப்படியே மரங்கள் வெட்டி அழிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினருக்கு மரங்களின் முகவரியே தெரியாமல் போய்விடும். எனவே ஒரு 'ஓக்' மரம் வெட்டப்பட்டால் அந்த இடத்தில் மூன்றாம் நாளே ஒரு மரக் கன்று துளிர் விட வேண்டும். எப்படி, மரித்த மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்த்து எழுந்தாரோ அதைப் பிரதிபலிக்க வேண்டும், என்று புனிதர் போனிஃபேஸ் வேண்டுகோள் விடுத்தார். இதன் பிறகு ஜெர்மானியர்கள் ஒரு 'ஓக்' மரம் வெட்டினால் ஒரு 'ஓக்' மரம் அல்லது ஒரு '·பிர்' மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர். கிறிஸ்துவின் நினைவாக இதனைச் செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற மாதங்களில் தங்கள் இல்லங்களில் 'ஓக்' மரங்களையோ '·பிர்' மரங்களையோ அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.
இந்தப் பழக்கம் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோதுஅமெரிக்காவிலும் பரவி, அன்றும், இன்றும், என்றும் என கிறிஸ்மஸ்ஸும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டது.
மார்ட்டின் லூத்தர்
இன்னொரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் ஒன்றும் உள்ளது. கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகளில் முரண்பட்டுப்புரட்சி செய்து புரட்டெஸ்ட்டண்ட்டிசத்தை நிறுவிய தளகர்த்தரான மார்ட்டின் லூத்தர் இவ்வழக்கத்திற்கு காரணவாதி என்பாரும் உண்டு.
மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு இரவு மார்ட்டின் லூத்தர் நடந்து போய்க்கொண்டிருந்தார். அந்தக் காட்டு வெளியிடையில் கண்ட காட்சி அவரை மெய் மறக்கச் செய்தது. அந்த அற்புத வனத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்கள் இடம் பெயர்ந்து மரக்கிளைகளில் வந்தமர்ந்தது போன்ற ரம்மியமான காட்சியைக் கண்டார்.
தென்றல் காற்றின் தாலாட்டலில் அசைந்தாடும் இலைகளை ஊடுருவி மின்மினிப் பூச்சிகளைப்போல் சஞ்சரிக்கிற நட்சத்திரங்கள் தருகிற உணர்வில் சொக்கிப் போனாராம் மார்ட்டின் லூத்தர். சோகங்களைக்கூடச் சோரம் போக வைத்து, சிந்தனையில் தெளிவினைச் சேர்க்கும் சக்தி பீரிட்டெழுவதை மன வானில் கண்ட மார்ட்டின் லூத்தர் மனதிற்குள் ஒரு யோசனையும் பூத்தது.
வானத்து நட்சத்திரங்கள் வனத்துக்கு மட்டுமா சொந்தம்? என்வீட்டுக்கும் சொந்தமே என்கிற அவரின் நினைவுகள் நிச்சயித்தது ஒன்றை; என்றும் பசுமையான ஒரு சிறிய மரத்தை அவரே வெட்டினார். வீட்டிற்கு எடுத்துச் சென்றார். காட்டில் கண்டதை வீட்டில் பார்க்க ஆசை; அவருடைய கரங்கள் அந்த மரத்துக்கு அழகுசேர்த்தது.
ஒளியுமிழும் மெழுகுவர்த்தி விளக்குகள் கொண்டு அதன் கிளைகளுக்கு வெளிச்ச உயிர் கொடுத்தார். வனம் போன்ற வனப்பு அங்கே மிளிர்ந்தது. அந்த இனிய நாள் "கிறிஸ்மஸ்" கொண்டாட்டங்களில் இல்லங்கள் எல்லாம் முகிழ்த்திருந்த நன்னாள்! அடுத்தடுத்த "கிறிஸ்மஸ்" கொண்டாட்டங்களில் "X'MAS TREE" விதவிதமான அலங்கரிப்புகளோடு முக்கியத்துவம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









