காங்கிரஸ் கட்சி 169 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும், தனது கூட்டணிக் கட்சிகள் 46 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணித்திருக்கிறது. அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 205 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தனது பழைய கூட்டணிக் கட்சிகளையும், இடதுசாரிகளையும் மீண்டும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது. பாரதிய ஜனதாக் கட்சியைப் பொருத்தவரை, தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணி 221 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதிமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் மற்றும் திரிணமூல் காங்கிரஸின் ஆதரவால் ஆட்சி அமைப்பது சுலபம் என்றும் பாஜக கருதுகிறது. இந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்பு இவ்வாறு இருந்தாலும், பெருவாரியான வாக்குக் கணிப்புகள் தரும் எண்ணிக்கையே வேறு. காங்கிரஸ் தனது பலத்தை சற்று அதிகரித்து 154 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் மேலும் 44 இடங்களிலும் வெற்றி பெறும் என்பதுதான், பிரதான தொலைக்காட்சி சானல்களின் கணிப்பு. அதாவது, ஏறக்குறைய 200 இடங்களில் காங்கிரஸின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்திருக்கிறார்கள். அதேபோல, பாரதிய ஜனதாக் கட்சி தற்போதைய 138 இடங்களைவிட சுமார் 4 இடங்கள் அதிகமாகப் பெற்று 142 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதன் கூட்டணிக் கட்சிகள் மேலும் 41 இடங்களைப் பிடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி 183 இடங்கள்தான் அடுத்த மக்களவையில் பெறும் என்றும் தொலைகாட்சிச் சானல்கள் கணிக்கின்றன. இன்னொரு நிறுவனத்தின் கணிப்பில் இந்த எண்ணிக்கை 205 என்று கணிக்கப்பட்டுள்ளது. கணிப்புகள் துல்லியமான முடிவுகளைத் தெரிவித்து விடாது என்றாலும், ஓரளவுக்கு சில மாற்றங்களை இந்தக் கணிப்புகள் தெரிவிக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் நான்கு கணிப்புகள் ஒரே குரலில் தெரிவிக்கும் விஷயத்தில் உண்மை இல்லாமல் போகாது. விஞ்ஞான ரீதியான கணிப்புகளில் ஏறத்தாழ மக்களின் சிந்தனை ஓட்டத்தைக் கணித்துவிட முடியும் என்பதை ஒத்துக் கொண்டே தீர வேண்டும். அந்த கணிப்புகளில் சில... கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி சுமார் 15 இடங்களைக் கைப்பற்றி இடதுசாரிக் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணி சுமார் 28 இடங்களில் வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற்ற திரிணமூல் காங்கிரஸ் 12 இடங்களையும், 6 இடங்களில் வென்ற காங்கிரஸ் 5 இடங்களையும், இடதுசாரிகள் வெறும் 24 இடங்களையும்தான் பெறுவார்கள். பிகாரில் நிதீஷ்குமார் அலையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணி அடித்து ஒதுக்கப்படுவார்கள். தில்லியில் காங்கிரஸ் அலை. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும் காங்கிரசும் தங்களது பலத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பெரிய அளவில் வெற்றி பெறப் போவதில்லை.