திருப்பதியிலிருந்து திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க புதிய நடைபாதை

ஒசூர், ஜூன் 27: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இதுவரை 3,800 படிக்கட்டுகள் வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து 9 கி.மீ. தூரம், குறைந்தது 4 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும்.  இந்நில
திருப்பதியிலிருந்து திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க புதிய நடைபாதை
Updated on
1 min read

ஒசூர், ஜூன் 27: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இதுவரை 3,800 படிக்கட்டுகள் வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து 9 கி.மீ. தூரம், குறைந்தது 4 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும்.

 இந்நிலையில், ஸ்ரீவெங்கடாசலபதி நடந்து சென்றதாகக் கூறப்படும் பாதையில் 1 மணி நேரத்தில் திருமலைக்கு செல்லும் புதிய நடைபாதையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதுப்பித்துள்ளது. இப்பாதை 2,000 படிக்கட்டுகளும், 3 கி.மீ. தூரமும் கொண்டது. கடந்த ஜனவரி முதல் இந்தப் பாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 திருமலையில் சுயம்புவாகக் காட்சியளிக்கும் ஸ்ரீவெங்கடாசலபதியை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஏழு மலைகளைக் கடந்து சுவாமியைத் தரிசிக்க, பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர்.

 தீவிர பக்தர்களும், நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பக்தர்களும் திருப்பதியில் இருந்து நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்கின்றனர்.

  இந்த நடைபாதை திருமலை டோல்கேட் (அலிபிரி) எனும் இடத்தில் தொடங்குகிறது. இதுவரை 7 மலைகள் வழியாக 3,800 படிக்கட்டுகள் ஏறி, 9 கி.மீ. தூரம் கடந்து திருமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தப் பாதையில் காளி கோபுரம் அருகே செங்குத்தாகவும், சில இடங்களில் சமவெளியாகவும் உள்ளது.

  பத்மாவதியை ஸ்ரீவெங்கடாசலபதி திருமணம் செய்தபிறகு, அகஸ்தீஸ்வர முனிவரின் வேண்டுதலுக்கு இணங்க சீனிவாசமங்காபுரத்தில் சிறிது காலம் தங்கி இருந்தாராம்.

திருமணம் முடிந்து மலை ஏறக் கூடாது என்ற முனிவர் சொன்னதற்காக இங்கிருந்தார். பின்னர் ஸ்ரீவெங்கடாசலபதி ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் சென்றதாக திருப்பதி திருமலை தேவஸ்தான புராணம் கூறுகிறது.

 இந்த ஸ்ரீவாரிமெட்டு வழியாக ஸ்ரீவெங்கடாசலபதி திருமலைக்குச் சென்ற பாதை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தப் பாதை 7-வது மலை அடிவாரத்தில் தொடங்கி, திருமலையில் பழைய உட்லன்ட்ஸ் ஹோட்டல் அருகே கோவிலுக்குப் பின்புறம் நிறைவடைகிறது. இது 3 கி.மீ. தூரமும், 2,000 படிக்கட்டுகளையும் கொண்டது.

 நடைப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் இந்தப் பாதையை தேவஸ்தானம் புனர் நிர்மாணம் செய்தது.

 இந்த ஸ்ரீவாரி மெட்டுக்கு திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து இலவச பஸ் வசதியை தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆட்டோ மூலமாகவும் செல்லலாம்.

 இந்தப் பாதையிலேயே ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், அன்னமய்யா உள்ளிட்ட மகா பக்தர்களும் திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com